Skip to main content

மணிரத்னம் - தீண்டல் - Irresistible desire


பேஸ்புக்கில் எழுதிய பதிவு

'உலகங்கள் ஏழும் பனிமூடும் போதும், உன் மார்பின் வெப்பம் போதும்' - Fire & Ice
'Fire & Ice' எனும் தலைப்பில், ரொபேர்ட் ஃரொஸ்ட் எழுதிய பிரபலமான கவிதை ஒன்று இருக்கிறது. வெறும் ஒன்பது வரிக் கவிதை, விஞ்ஞானிகளைப் பல விஞ்ஞான விவாதங்களுக்கு அழைத்துப்போனது. தத்துவார்த்த விவாதங்களுக்கு அழைத்துப் போனது. பலரையும் பேசவைத்தது. அந்தக் கவிதை தன்னுள்ளே பல முகஙகளைச் சுமந்திருப்பதுதான் அதன் உள்ளழகுக்குக் காரணம் எனலாம். பல கேள்விகளுக்கான பதில்களைப் புதிராக எழுதி வைத்திருக்கிறது.
அந்தக் கவிதையில், ஆசை அல்லது வெறுப்பு எனும் இரண்டில் ஒன்றில் மனித உணர்வுகள் அழியும் என எழுதியிருப்பார். ஆனால், தன் நிலைப்பாட்டை ஆசையின்(Desire) பக்கம் வைத்திருப்பார். இங்கு ஆசை என்பது தீ அல்லது வெப்பத்தைக் குறிக்கும். வெறுப்பு என்பது, குளிர் அல்லது பனியைக் குறிக்கும். கூடவே தீ அல்லது பனியில் உலக உயிர்கள் அழியும் என்கிற அர்த்தத்தையும் அந்தக் கவிதை சுமந்து வரும்.
வைரமுத்து தெளிவாக, நிலம் கடலாகும், கடல் நிலமாகும் நம் பூமி அழிவதில்லை என்று நிலவியலை எழுதினார். அதுபோலத்தான், காதல் என்கிற உணர்வும் மரிப்பதில்லை என்று எழுதினார்.
காதலும் காமமும் ஜோதி என்பது கவிஞர்கள் ஏற்றுக்கொண்டது. யாக்கை(உடல்,காமம்) திரி, காதல் சுடர் என்று எரித்துக்கொண்டு மோட்சம் அடைவதை விரும்பினார்கள்.
கற்பூர தேகம் தான் காதல் வெப்பம் பட்டுக் கரைவதென்ன? என்று தித்திக்கும் தீயைக் கேள்விகேட்டார் வைரமுத்து. பெண்ணழகுக்குள் கொதித்திருக்கும் தேனைக் காமமும் காதலும் உண்ண விரும்பும் என்றார். சூபி கவிஞர்கள்போல, காமத்திலும் காதலிலும் எரிந்து சொர்க்கம் அடையலாம் என்றார்கள். ஆனால் அது மிதமான வெப்பம். 'தீண்டாய்' என்கிற வார்த்தைக்குள்ளேயே தமிழ் தீயென்னும் ஓரெழுத்தை ஒளித்துவைத்திருக்கிறது.
உன் வேட்கையின் பின்னாலே என் வாழ்க்கை வளையும் எனச் சொல்லும் வெப்பம்.
“Love is an irresistible desire to be irresistibly desired.”
காமத்தில் இருக்கும் வேட்கையான பார்வையை, ஒன்றைத் தீண்ட நினைக்கும் மோகத்தை, மணிரத்னம் காட்சியில் எழுதியிருப்பார்.

Comments

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...