Skip to main content

மணிரத்னம் - Fabric dance


பேஸ்புக்கில் எழுதிய பதிவு

"காதல் சடுகுடு" பாடலில், ஒருவித துடுக்குத்தனம், வேட்கை, காதலின் இறுக்கம் எல்லாமுமே இருக்கும். அலைபோல சடுகுடு ஆடும் காதல் இருக்கும். ஒருவித கண்ணாமூச்சி ஆட்டம், Sexual Playfulness எல்லாமும் இருக்கும்.  அதை ஆடைகளைக் கொண்டு(Fabric dance) அத்தனை நயமாக எழுதியிருப்பார் மணிரத்னம். கவனித்துப்பார்த்தால், ஒவ்வொரு சட்டகத்தினுள்ளும் அத்திரைமொழி உள்ளாடும். 

துணிகொண்டு ஆடப்படும் நடனத்தில்(Fabric dance), இசைக்கேற்றபடி அலைபோல அசைவுகள் செய்யலாம்; அலைகளைப் பிரதிபலிக்கலாம். 'உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே' என்கிற நெகிழ்வான வரிகளுக்குக் காட்சியில் நியாயம் சேர்க்கலாம். மொழி வளைத்து வளைத்துத் தரும் நெகிழ்வுத்தன்மையையும், அதன் பொருளையும் நடனக் கலைகொண்டு எழுதலாம்.



ஆடைகள் மீதான காமம் என்பது தனிக்கலை; ஒருவித Fetishism. 'தலைக்கு வைச்சு நான் படுக்க அழுக்குவேட்டி தாருமய்யா' என்பதுபோல, மிகுகாதலின் விரகத்தில் எழும் வேட்கை. ஒரு மொழியின் உட்பொருளைக் களைந்து களைந்து, ஒரு மறைபொருள் கொண்ட கவிதையைப் படிப்பதில் இருக்கும் சுகம், ஒரு ஆடை களைதலிலும் நிகழும். கண் காணா அழகுக்காக எழுதிவைத்த கவிதாஞ்சலியைப் போர்த்தியிருக்கும் ஆடை. ஓர் உயிரின் உணர்வுகளையும் மென்பாகத்தின் துடிதுடிப்பையும், இழைகளால் மூடியிருக்கும் பொன்பேழை.

ஒரு ஆணின் ஆடையைப் பாடல்முழுதும் அணிந்திருப்பார் ஷாலினி. அது ஒருவகை விடலைப் பெண்ணின் செயல்(crossplay). ஒரு ஆண்தன்மையை ஏற்றல். பழகும்பொழுது குமரியாகி 'வெல்லும்' தன்மை. காமத்தில் ஆணை ஆளும் பெண்தன்மையின் வெளிப்பாடு. ஒரு ஆணின் பாத்திரத்தை ஏற்று நடத்தல். இந்த ஆடைப் பரிமாற்றங்களைக் கனிவாய்ச் சொல்லியிருப்பார் மணிரத்னம்.



"ராசாத்தி என் உசுரு" பாடலின் இரண்டாம் இடையிசையில், ஆண்கள் மையத்திலிருந்து, சுற்றியிருக்கும் பெண்களின் புடவையை இழுத்து அழைப்பார்கள். சற்றுத் தொலைவில் பிரிந்திருக்கும் இணைகளை எல்லாம் இழுத்தெடுக்கும் ஆணின் வேட்கை. பிரிந்துபோகும் பெண்ணை நினைத்து ஒரு ஆண் பாடுகையில், ஆடைகளை வைத்துச் செய்த அந்த நடனமொழி ஒரு நுண்கலையின் வெளிப்பாடு.

"என் உயிரே" பாடலில், மனிஷாவும் ஷாருக்கும் ஒரே போர்வைக்குள் இருந்தபடி லடாக்கில் செய்யும் நடனம் ஒருவித வேட்கையின் வெளிப்பாடு; இருப்பின் தேடல்(Existentialism). அரபிக் கடலோரம் பாடலில், பின்னலிட்ட ஆடைமீது வைக்கும் இதழ்முத்தம். இந்தத் தடுப்பற்ற போலித் தடுப்புகள் காமத்துக்கு இன்னும் அழகானது. ஒளிவிடும் பாகங்களையெல்லாம் ஒளித்து ஒளித்துத் தூண்டல். படுக்கையறையில் கவிஞர்கள் குழந்தைத் தனத்தையும் குமரித்தனத்தையும் ஒப்பிட்டு எழுதுதுவதன் ரகசியம். குமரியின் வளங்கள் குழந்தையின் சிணுங்கல் கொண்ட முரண்பாட்டுப் பெண்மையின் அழகு.

'பறந்து செல்லவா' பாடலில் அவள் மேலாடையை நெகிழ்த்தும்போது, போர்வையை விரிப்பது இன்னுமொரு நுண்கலை. ஆடை ஒரு கலை. களைதல் ஒரு கலை. அத்தனையையும் இழைத்து இழைத்துச் செய்த மணிரத்னத்தின் திரைமொழி இன்னுமொரு கலை. மணிரத்னம், வைரமுத்து, ரஹ்மான் மூவரும் சேர்ந்து எழுதிய முப்பொருள்.  

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...