Skip to main content

மலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு

வெற்பிடை யாம் கொய்து
நாம் நேசித்தும் உணர்ந்தும் பேசுகின்ற மொழியின் அழகானது, நம் எண்ணங்களினதும் செயலினதும் அழகினைத் தீர்மானிக்கும். அது ஒரு வீணையை மடியிலிட்டு வாசிக்கும்பொழுது, அந்தச் சின்னஞ்சிறு விரல்கள்மீது, மொத்த உடலுமே வந்து மெல்லச் சரிந்துவிழும் லாவகம் போன்றது.
சுட்டுவிரலின் உயிர்ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு.
ஒரு நல்ல மொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அதற்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது.
ஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலித்தனமான பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு இந்தப் பாடல் நல்லதொரு உதாரணம்.
வேங்கை நறுமலர் வெற்பிடை(வெற்பு - மலை) யாம் கொய்து, மாந்தளிர் மேனி வியர்ப்ப, மற்று ஆங்கு எனைத்தும் பாய்ந்து அருவி ஆடினேம் ஆக, பணிமொழிக்குச் சேந்தனவாம், சேயரிக் கண்தாம்.
தலைவியைத் தேடி அவளுடைய தாய் வருகிறாள். தலைவியினுடைய கண்கள் சிவந்திருப்பதைப் பார்த்து, 'எங்கே போனாய் இவ்வளவு நேரம், என்னவாயிற்று' என வினவுகிறாள். தலைவி தடுமாறினால், களவியல் வாழ்வு அம்பலப்படும் என அறிந்த தோழி, ஒரு நிகழ்வினைச் சடாரெனப் புனைகிறாள். 'தாயே, நாங்கள் மலையினிடையில் உள்ள கொன்றை மரத்தில், நல்ல நறுமணம் உள்ள மலர்களைக் கொய்யும் செயலைச் செய்துகொண்டிருந்தோம். அப்படி அந்த மலரை நெடுநேரம் பறித்திருக்கையில், எங்கள் மாந்தளிர் மேனி எங்கும் வியர்த்துக்கொட்டியது. அதனாலே அங்கிருக்கும் அருவிகளில் பாய்ந்து நீரைக் குடைந்தாடினோம். அதனால் இவள் கண்கள் சிவப்பாகி இருக்கிறது' என்கிறாள். இதையெல்லாம் தலைவன் பின்னால் ஒளிந்திருந்து கவனித்திருக்க, அவனுக்கும் கேட்கும்படி உரைக்கிறாள் தோழி. தோழியானவள், அவர்களுடைய களவுப் புணர்ச்சியை உரைக்கும் நயம்தான் இந்தப் பாடலின் உயிரோட்டம்.
பச்சை மலையையும், மஞ்சள் பூக்களையும் கொண்டு அவர்கள் காமத்தை அலங்கரிக்கிறாள். தலைவன், அவளின் உடலெங்கும் பூக்கள் சொரியும்படி அத்தனை அழகுடன் அவளைக் கூடியிருக்கிறான். 'கொய்தல்' என்கிற வார்த்தையின் சந்தம் அந்தக் காமத்துக்கு மேலுமொரு அழகு. அதனால் அவள் மேனி வியர்த்துக்கொட்டிய எழிலை ஒரு அருவிபோல முன்னிறுத்துகிறாள். நீர் நுழைந்தால் ஆடை குழையும். கூந்தல் தன் அலங்காரங்களை இழந்து ஒழுங்கற்ற ஓர் அழகைச் சூடிக்கொள்ளும். கண்கள் சிவக்கும். இவையெல்லாம் காமத்திலும் நிகழும்.
அவர்களின் காமத்தை அழகுபடுத்தவும் வேண்டும். அதை அழகுபடுத்துவதன் மூலம், ஒளிந்திருந்து கேட்கும் தலைவனுக்கும் இவள் மேனியின் நலனை எடுத்துரைத்து, இவள் மீதான காதலைக் கூட்டவேண்டும். அதேநேரம் பொருத்தமான ஒரு பொய்யையும் சொல்லவேண்டும். தோழி புத்திசாலி.
இதையொரு காட்சியாக, பூக்களின் வண்ணங்களோடும், வியர்வைத்துளிகளின் விழுதுகளோடும் காணும்பொழுதுதான் அதனுள்ளே இருக்கும் மொழியினதும் செயலினதும் அழகு புலப்படும்.
மலரினும் மெலிது காமம் 01 - ஞயம்பட உரை.

Comments

kannadhasan said…
உங்கள் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அணைத்து கருத்துக்களும் மிகவும் அருமையாக உள்ளது தோழரே
தினமும் ஒரு பதிவு வாசிக்கிறேன் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது மிக்க நன்றி ........

உங்கள் சேவை வளரட்டும் .........என்னைபோன்றவர்கள் இதை படித்து தெரிந்துகொண்டு வளமெரட்டும் வாழ்த்துக்கள்

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ