Skip to main content

மலரினும் மெல்லிது காமம் 06 - இடஞ்சுட்டிப் பொருள் விளக்கு


"அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் 
செறிதோறும் சேயிழை மாட்டு" - குறள் 


புதிதாய் ஒரு விடயத்தை அறியும்போது என்ன தோன்றும்? அட, இதை இவ்வளவு நாளும் அறியாமல் விட்டோமே என்ற எண்ணம் தோன்றும். ஒரு நுண்ணழகை அறியும்போது என்ன தோன்றும்? இத்தனை நாளும் இந்தச் சாலையைக் கடக்கிறோமே, அந்த மதிற்சுவர்ப் பூவைக் கவனிக்கவில்லையே என்று தோன்றும். கவனிக்கையில், அன்று அந்தச் சாலையே புதிதாகத் தோன்றும். அப்படிச் சில அழகுகளை நின்று ஆராயத் தோன்றும்.

ஒரு புத்தகத்தைப் படிக்கப் படிக்க, அறியாமை விலகுவது இன்பம். அறியாமை விலகவிலக இன்னும் அறிந்துகொள்ள எவ்வளவோ இருக்கிறது எனத் தோன்றும். நுணுக்கமாக வாசிப்பவர்களுக்கு ஒற்றை வசனங்கூட மீண்டும் மீண்டும் சுவைத்தரும். அதுபோல, காமத்தை இரசிக்கத் தெரிந்தவர்க்கு அதில் நுணுக்கங்கள் பிடிபடும். அந்த நுணுக்கங்கள் அறியப் பெருக்கொண்டேபோகும். ஆசைகள் கிளைவிட்டு மலரும். அன்பு வேர்விட்டு ஊன்றிக்கொள்ளும். "ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள்" என்கிற பிரபல பழமொழி எல்லாம் புதியன தேடாதவரும், இரசிக்கத் தெரியாதவரும் சொல்லிவைத்த பழமொழி என்கிறான் வள்ளுவன்.
ஒரு குறிப்பிட்ட குணத்தின்மீது மீண்டும் மீண்டும் காதல் கொள்வதுபோல, ஒரு குறிப்பிட்ட பாகத்தின்மீது மீண்டும் மீண்டும் காமுற்றிருத்தல் இன்பம். ஒரு கவிஞனின் கண்களைக் கடன்வாங்கிப் பார்க்கும் நொடிகள் காமத்துக்குப் பிடித்தம். தேக வாசம் நுகரும் கணங்கள் நுரையீரலுக்குப் பிடித்தம். தேகத்தில், சின்னச் சின்ன அலைபோன்ற கோடுகள் கண்டபின்னும், செல்களைத் தேடித்திரியும் அருந்தவப் பார்வை. ஓர் இடம் சுட்டி, அதை இதழ்களால் விளம்பி விளக்குதல். கோடுபோடும் ஓவியன்போல கவனமாய்த் தீண்டிப் பொருள் ஏற்றுதல். ஒன்றன் பொருளைக் கோடிவடிவங்களில் விளக்கலாம். அதுபோல, அந்தக் காமத்தைக் கோடிமுறை கொண்டாடித் தீர்த்தபின்னும் அது தீராது.

"இளையவளின் இடையொரு நூலகம்" என்பது இடஞ்சுட்டிப் பொருள் விளக்கல். ஒரு நூலகத்துப் புத்தகங்களில் கோடிச் சொற்கள் வியாபித்து  இருக்கும். அவை அத்தனையையும் நுணுக்கமாகப் படிப்பதுபோல, அவள் இடையைத் தினமும் சேருகையில் புதியன கண்டதுபோல விளங்கும். இன்னொரு பக்கம் படித்தும் தீராது.

மலரினும் மெலிது காமம் 01 - ஞயம்பட உரை.

மலரினும் மெல்லிது காமம் 02 - மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்

மலரினும் மெல்லிது காமம் 03 - சின்னம் வைத்தல்

மலரினும் மெல்லிது காமம் 04 - பருகுதல்

மலரினும் மெல்லிது காமம் 05 - பயில்தல்

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ