Skip to main content

இறைவி 2 - ஆய்த எழுத்து


இறைவி திரைப்படம்  பற்றிய எனது முன்னைய பார்வையை மணிரத்னத்தின் திரைப்படத்தில் வருகிற பெண்  கதாப்பாத்திரங்களோடு  ஒப்பிட்டு எழுதியிருந்தேன். மணிரத்னத்தின் படங்களில் வரும் பெண்கள் இயல்பாகவே பெறுமதியானவர்கள் என்றும்  எழுதியிருந்தேன். அதற்கு எதிர்வினையாக ஒருசில கருத்துகள் வந்தது. 'இறைவி' பெண்களை முற்போக்கானவர்களாகக் காட்டும் திரைப்படமல்ல, மாறாக ஆண்களை பிற்போக்கானவர்கள் என்றும் ஆணாதிக்கச் சிந்தனை உள்ளவர்கள் என்றும் காட்டும் திரைப்படம் என்று சொல்லியிருந்தார்கள். அவர்களின் நியாயப்படுத்தலில் ஓரளவு உண்மை இருக்கிறது. ஆனால் இந்தப் படம் பெண்களின் பெருமை பேசுகிறேன் என்று ஆண்களை நியாயப்படுத்தி இருக்கிறதென்பது சில விமர்சகர்கள் கருத்து.  இதுவரை, விஜய் சேதுபதியின் போக்கையே மாற்றிவிடும் மலர்விழி கதாப்பாத்திரம் சொல்லவரும் காமம்-காதல் முரண்பாட்டை யாரும் சரியென்று சொல்லவில்லை. திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் நாங்கள் சேர்ந்து வாழலாம் என்றாவது கேட்டிருக்கலாம். இறைவி விமர்சனத்தில் எழுத்தாளர் சாரு நிவேதிதா கேட்டதுபோல எந்த நூற்றாண்டில் வாழ்கிறோம்!

கார்த்திக் சுப்புராஜின்  இறைவி  திரைப்படத்தை ஏன் மணிரத்னம் படங்களோடு ஒப்பிடவேண்டும் என்கிற கேள்வி புரிகிறது. தமிழ்த்திரையில் எல்லாத் திரைப்படங்களிலும் பெண்களுக்குச்  சமபங்கு கொடுக்கும் இயக்குனர்களுள் மணிரத்னமும் ஒருவர் என்பதை யாரும் மறுக்கமுடியாது. எல்லாத் திரைப்படங்களிலும் பெண்களை வெறும் காட்சிப்பொருளாகப்  பாவித்துவிட்டு ஒரு படத்தில் பெண்ணுரிமை பேசும் தன்மை அவர் படங்களில் கிடையாது. திரைப்படம் முழுதும் பெண்களை அடிமைப்படுத்தும் காட்சிகளை வைத்துவிட்டு ஒரு அம்மா பாடலில் பெண்ணுரிமை பேசிவிட்டதாக நினைக்கும் கதாநாயகர்களின் பக்தர்கள்தான் அதிகம். தமிழ்த் திரையில்  யாராவது பெண்ணுரிமை பேசுகிறார்கள் என்றால் பாலச்சந்தர், மணிரத்னம் போன்றவர்களை ஒப்பிடாமல் நகர்ந்துவிடமுடியாது.  அவர்கள் திரைப்படங்களில் ஒவ்வொரு காட்சிகளிலும் பெண்கள் உயர்ந்தவர்கள். அவர்களின் அழுகை , துயரம், காதல், மகிழ்ச்சி எல்லாவற்றுக்கும் திரையில் இடம் உண்டு. இது எல்லாத் திரைப்படங்களிலும் உண்டு என்பது கவனிக்கப்படவேண்டியது. 



ஆய்த எழுத்து திரைப்படம்  மூன்று பெண்களினதும் மூன்று ஆண்களினதும் கதையினை ஒரே புள்ளியில் கொண்டுவந்து இணைக்கும். அதில் மீரா ஜெஸ்மின் கதாப்பாத்திரத்தை 'இறைவி' படத்தின் கதைக்கருவோடு ஒப்பிடலாம். கார்த்திக் சுப்புராஜ் மணிரத்னத்தின் ரசிகர் என்பதால் இந்தக் காட்சியே இறைவி படத்துக்குத் தூண்டுகோலாக அமைந்திருக்கலாம். இன்பா, துளசியின் சொற்களைக் கேட்பதேயில்லை. தனது ஆணாதிக்க சிந்தனையால் புறக்கணித்து அவளைத் துன்புறுத்துகிறான். அவள் தன் காதலால் அவனை மாற்ற முற்படுகிறாள். முடியவில்லை. இறுதியில் வெளியூருக்குச் செல்லலாம் என முடிவெடுக்கிறாள். இரயிலில் காத்திருக்கிறாள். இன்பா வரவேயில்லை. அப்போது டிக்கட் பரிசோதகர் வருகிறார்.  சுஜாதாவும் மணிரத்னமும் இணைந்து இயல்பாக ஒரு காட்சி அமைக்கிறார்கள்.

"இன்பசேகரன்   யாரும்மா?  உங்க ஹஸ்பெண்டா ? எங்க அவரு ?" 

"எனக்கு எப்பிடி தெரியும் அவர் எங்க இருக்கார்னு.. வேற கம்பாட்மென்ட் ? வேற ஊர்லயா  ? பார்லையா? தேவடியா வீட்லையா ? ஹோட்டல்லையா ? ஜெயில்லையா ? எனக்கு எப்பிடி தெரியும் ? நீங்க எல்லாரும் ஒரே ரகம் . உலகத்துல இருக்க அத்தனை  ஆம்பிளைங்களும் பொறுக்கிங்க" 

"என்னம்மா, இன்பசேகரன் பெயர் சாட்ல இருக்கே அவர் எங்கன்னு கேட்டதுக்க இவ்வளவு அர்ச்சனை "

"sorry" என்று அந்த சம்பாஷணை முடிந்துவிடும்.

ஆயுத எழுத்தில் வருகிற மூன்று பெண்களும் வேறு வேறு குணாதிசயம் கொண்டவர்கள். இதில் மீரா ஜெஸ்மின் பாத்திரம் துன்பப்படுகிற பெண்களின் கதாப்பாத்திரம் எனலாம். மற்றைய பெண்கள் தெரிவுகளில் பிழை விடுவதில்லை. 



"உன் ஞாபகம் வந்து போனா எனக்கு நானே சொல்லிக்குவேன் . போயும் போயும் இவனுக்காக எதுக்கு ஏங்கணும்? இது அமெரிக்கா போயி வெள்ளைக்காரனுக்கு கூஜா தூக்குற கேசு . இவன்மேல என்ன புடலங்கா காதல்னு . டிவில பாத்தேன் . நீ எலெக்ஷன்ல நிக்குறேன்னு . அப்போதான் புரிஞ்சுது .. இந்தக் காதல் ஒன்னும் தப்பா வந்திடாதுன்னு" 

என்று மீரா சித்தார்த்தைத் தெரிவு செய்கிறாள்.  இவையெல்லாம் கதையின் ஓட்டத்தோடு இயல்பாக நிகழ்பவை. பெண்களைப் பெருமையாகப் பேசுகிறேன் என்று வலிந்து காட்சிகளைத் திணிப்பதும், உலகிலுள்ள ஒட்டுமொத்த ஆண்களும் பெண்களும் ஒன்றே என்பதுபோல கருத்தை வெளிப்படுத்துவது எல்லாம் ஆபத்து. சொல்ல வருகிற செய்தியைத் தெளிவாகச் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் இயல்பாகச் சொல்லவேண்டும். 'இறைவி' பெண்ணின் பெருமை பேசுகிறது என்று சொல்லாதீர்கள். வேண்டுமானால் பெண்களின்  சகிப்புத்தன்மையைப் பேசுகிறது என்று சொல்லுங்கள்.

Comments

Anonymous said…
தெளிவான பார்வை

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ