Skip to main content

இறைவிகளின் கதை




இந்திரா : "உங்ககிட்ட கேள்வியெல்லாம் கேட்கணும்னு அமுதா எழுதி வைச்சிருக்கா..."

அமுதா : "20 கேள்விகள்... கேட்கலாமா...! நீங்க ஏன் என்னை விட்டுட்டு போயிட்டீங்க?"

மணிரத்னத்தின் பெண்கள், எவருடைய தலையீடுமின்றித்  தங்களைத் தாங்களே தீர்மானித்துக்கொண்டு நகர்பவர்கள். புத்தித் தெளிவு, அழகியல் உணர்வுகள், சுயதன்மை, துணிவு  எல்லாமே  இயல்பாகவே அமையப்பெற்றவர்கள். பெண்களின் உலகத்தில் நானொரு புரட்சி நிகழ்த்துகிறேன் என்று மிகைப்படுத்திக் காட்டிக்கொள்ள  வேண்டிய அவசியமற்றவர்கள். அதனாலேயே யார்மீதும் முறைப்பாடுகளை வைக்க முன்வராதவர்கள். ஆண்களுடன் தங்களைப் பிணைத்துக்கொள்ளும்போதுகூடத் தெரிவுகளில்  பிழைவிடுவதில்லை. அதிமேதாவித்தனமோ முட்டாள்த்தனமோ அற்றவர்கள். சிலநேர இடைவெளிகளில் மறைமுகமாக ஆண்களை ஆக்கிரமித்துவிடக்கூடியவர்கள் . நாங்கள் நாங்களாகவே இருந்துகொள்கிறோம் என்பதைச் சொல்லாமல் சொல்பவர்கள். யாரிடமிருந்தும் சுதந்திரம் வேண்டாதவர்கள். அவர்களுக்குச்  செய்வதற்கு என்று ஒரு வேலை இருக்கும். இத்தனைக்கும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் திரையில் இயல்பாகவே  இயங்கிக்கொண்டிருக்கும். சுதந்திரமான பெண்கள் என்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று அலட்டலில்லாமல்  சொல்கிற பாங்கு முக்கியமானது. 

உதாரணமாக, கன்னத்தில் முத்தமிட்டாலில் மாதவன் சிம்ரனிடம் காதலைச் சொன்னதும், "இது ஒன்னும் நீங்க எழுதுற கதைல ஒரு அத்தியாயம் இல்லையே" என்கிற இந்திராவின் தைரியமான எதிர்க்கேள்வி  ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்தது. சும்மாவெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது . உன்  காதல் உண்மையென்று அறியவிரும்புகிறேன் என்றும் ஒரு அர்த்தம் உண்டு. வசனங்களில் சுஜாதாவின்  ஆளுமை அதிகம் என்று சொல்லலாம். 


கார்த்திக் சுப்புராஜ் தன்னை மணிரத்னத்தின் ரசிகராகச் சொல்லிக்கொண்டதால்  எனக்கு இறைவி மீதான எதிர்பார்ப்பு அதிகமாயிருந்தது. அதிலும் இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்ததும் மூன்றாவதாக ஒரு மசாலா ஹீரோவை வைத்துப் படம் பண்ணப் போய்விடும் இயக்குனர்கள் மத்தியில் தன்னை தனித்து நிலைநிறுத்தப் பார்க்கிறார் என்று நினைத்துக்கொண்டேன். படம் வெளியாகி இரண்டாவது நாளே போய்ப் பார்த்துவிட்டேன். படத்தின்  ஆரம்பத்தில் பாலுமகேந்திரா, பாலச்சந்தர், சுஜாதாவுக்கு நன்றி சொல்லி ஆரம்பிக்கும்போது இன்னும் நம்பிக்கை வந்தது. மழைச்சத்தத்தோடு  படம் ஆரம்பிப்பது இதமாக இருந்தது. ஆனால் அந்தப் பெண் கதாப்பாத்திரங்கள் பேச ஆரம்பித்த சில நேரங்களில் கட்டிவைத்த அத்தனை பிம்பங்களும் உடைந்துவிட்டது. 

அஜித், விஜய்  போல புற அழகில் ஒரு ஆணைத் தேடிக்கொண்டு திருமணம் செய்து குடும்ப வாழ்க்கை  வாழவேண்டும் எனச்சொல்லும்  பொன்னி மற்றும்  டெம்ப்ளேட் வாழ்க்கை வாழ விரும்பாமல் ரசிக்கும்படி வாழ்வு தேடும்  யாழினி போன்றோருக்குத் திருமணம் நடக்கிறது. அவர்களுடைய துணைத் தெரிவுகள் எப்படி அமையப்பெற்றது என்பதைக் காட்டும் காட்சியமைப்புகள் எதுவுமில்லை. பாலச்சந்தர் படங்களிலும்  பெண்களின் கதாப்பாத்திரங்கள்  இயல்பிலேயே புத்திசாலித்தனமும் துடிப்பும் மிக்கவர்களாக இருப்பார்கள் . இந்தப் படத்தின் பாத்திரப் படைப்புகளில் எந்தவிதமான முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. செக்ஸ்க்கும் காதலுக்கும் இடைப்பட்ட தொடர்புகூடப் புரியாத அளவுக்கு மேலோட்டமான மலர்விழியின் வசனங்கள் எல்லாம் கவரவேயில்லை. செக்ஸ் உறவிற்குப் பிறகும் மலர்விழியைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான் மைக்கல். ஆனால் அவள் அவனை வெறும் செக்ஸ் இயந்திரமாகப் பார்ப்பதாகச் சொல்கிறாள் .அந்தக் கணமே உடைந்துவிடுகிறான். ஒரே  நபரோடு தொடர்ந்து விரும்பி உறவு வைத்துக்கொண்ட பின்பும்  அது காதலாக மாறவில்லை என்பது காமத்திற்கு அவமானம். தொடர் செக்ஸ் உறவில் காதல் மலராது என்பது முரண்பாடானது. இப்படிப்  பேசுகிறவள் பின்னால் அவனுக்காக வருத்தப்படுவதாகக் காட்சி அமைக்கப்படுகிறது. ஆனால் அந்த விரக்தியால் அவனுடைய வாழ்க்கையே மாறிவிடுகிறது.  காரணம், இதில் வருகிற ஆண்கள் அனைவரும் நல்லவர்கள் என்கிற உண்மையை யாராலும் மறுக்கமுடியாது. இப்படியான  முரண்பாடுகளாலான திரைக்கதை. எந்தப் பெண் கதாப்பாத்திரமும் அதில் கவரும்படி இல்லை. மழையில் நனைதல் போன்ற காட்சிகளில் குறியீடு தேடுவதெல்லாம் அதரப்பழசான முறை. இருந்தாலும் இந்தப் படத்தில் ஆண்களின் கோபமும் குடிப்பழக்கமும் அவர்களைச் சார்ந்திருக்கிற பெண்களை எப்படிப் பாதிக்கிறது என்பதைப் பதிவு செய்கிறது. வசனங்கள் அவ்வளவு ஆழமானதாக இல்லை. 


பெண்களின் உலகில் புரட்சி செய்யப்போகிறேன் என வலிந்து திணிக்கும் காட்சியமைப்புகளை மணிரத்னம் படங்களில் காணக்கிடைக்காது. அவர் அப்படிச் சொல்லிக்கொண்டும் படம் எடுப்பதில்லை. கதை இயல்பாக நகர்ந்துகொண்டேயிருக்கும். அதில் ஆணையும் பெண்ணையும் சரிசமமாக இயங்கச் செய்வது அவரின்  வேலை. அவர்களின் புத்திசாலித்தனங்கள் இயல்பிலேயே இருக்கும். படம் பார்த்துகொண்டிருக்கும்போதே அந்தப் பெண்களின் மீது அதீத காதல் வந்துவிடும் . இறைவி பார்த்தபின்பு அப்படி எந்தவொரு உணர்வும் ஒட்டிக்கொள்ளவில்லை .

Comments

Anonymous said…
இந்தப் பதிவு குறித்த என் கருத்தை இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன். :)

https://t.co/ZjoamNRUNe

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...