Skip to main content

மனதோடு பேசலாம் - நிகழ்ச்சி

கட்டைப் பஞ்சாயத்து எல்லாம் ஆலமரம், செம்புன்னு காலம்  போய், சோபா செட்டு கண்ணாடி கிளாஸ்னு ட்ரெண்டு மாறிப்போச்சு. அதனாலேயே கொஞ்சக் காலமாக மற்றவர்கள் பிரச்னையை தீர்க்கிறேன்  என்று ஆரம்பிக்கப்படும் நிகழ்ச்சிகள் மீது எதிர்மறையான கருத்து வைத்திருந்தேன். எந்த  டிவி சானலுக்கு மாற்றினாலும் 'இதோ அறிவுரை சொல்லுகிறேன்' என்று பலபேர் காத்திருக்கிறார்கள். இன்ஸ்டன்ட் சாமியார்கள் மாதிரி, நிபுணத்துவம் அற்றவர்கள் எல்லோரும் மற்றவர்களின் வாழ்வில் தலையிட்டு  ஏதேதோ குழப்பம் செய்து பணம் பார்க்கிறார்கள். தங்கள் டிஆர்பி ரேட்டினை  உயர்த்திக்கொள்ளவதற்கு பிரச்சனைகளை அணுகுகிறார்கள்.  எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அதே நோக்கம் இருந்தாலும் சில நிகழ்ச்சிகளில் கொஞ்சமேனும் சமூகப் பொறுப்புணர்வு இருக்கும் என்றே நம்புகிறேன்.

தந்தி டிவியில் ஒளிபரப்பாகும் 'மனதோடு பேசலாம்' எனும் நிகழ்ச்சியினைத் தற்செயலாகக் காணக்கிடைத்தது. நான் பார்த்தவரையில் நிபுணத்துவம் பெற்ற உளவியல் ஆலோசகர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துகிறார்கள். எந்தக் கேள்வி கேட்டாலும் பொதுவான ஒரு பதிலைக் கொடுத்துவிட்டு, அருகிலிருக்கும் உளவியல் நிபுணரைப் பாருங்கள் என்கிறார்கள். 

"நான் விரும்பி கல்யாணம் செய்துகிட்டேன். என் கணவர் பிரச்சனை பண்ணுகிறார். அவரோடு சேர்ந்து வாழலாமா? வேண்டாமா?"  என்று உளவியல் ஆலோசகரிடம் ஒரு பெண் தொலைபேசியில் கேட்டு வைத்தார்.

உண்மையில் உளவியல் நிபுணர்கள் என்பவர்கள் இன்ஸ்டன்ட் சாமியார்கள் மாதிரி தீர்ப்புச் சொல்லுபவர்கள் அல்ல. பிரச்சனைகளைச் செவிமடுப்பவர்கள். தங்களின் பயிற்ச்சிகளின் மூலம் தகுதியான கேள்விகள் கேட்டு, பாதிக்கப்பட்டவர்களைப்  பேசவைத்து, அவர்களிடமிருந்தே தீர்வை எதிர்பார்ப்பவர்கள். டிஆர்பி ரேட்டை ஏற்றுவதற்கு ஏதும் புரட்சி பண்ணிடுவாரோ என்று நினைத்தேன். "தீர்மானம் நீங்கள் தான் எடுக்கவேண்டும். எந்த உளவியல் நிபுணரும் முடிவு சொல்லமாட்டார்கள். நீங்களாக ஆராய்ந்துதான் முடிவு எடுக்கவேண்டும். ஒரு நல்ல உளவியல் நிபுணராகப் போய் பாருங்கள்" என்று  இயல்பாகப் பதில் சொன்னார். அழகான பதில். 

நல்லவேளை அந்தப் பெண் கடும்போக்கு  மாதர் சங்கப் பக்கம் ஏதும் போகவில்லை. போயிருந்தால், அவர்களே முடிவைச் சொல்லியிருப்பார்கள்!

Comments

Popular posts from this blog

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...