Skip to main content

காத்திருத்தலின் அழகியலும் காதலும் : கவிதாஞ்சலி 06

அகநானூற்றிலே 58வது பாடல் காத்திருத்தலின் அழகியலையும் காமத்தையும் நயமாகச் சொல்லுகிறது. சங்கப் பாடல்களிலே இரவில் காதலனும் காதலியும்  களவில் சந்திப்பது வழக்கம் அல்லவா. அதேபோல இங்கே தலைவனுக்காகத் தலைவி காத்திருக்கிறாள். வாட்டும் குளிரில் தனிமையில் காத்திருக்கிறாள். எல்லோரும் உறங்கும் இரவில் தலைவன் வருகிறான். அவன் வந்ததும் மின்னும் வளையணிந்த தன் கைகளால் அவன் முதுகினைச் சுற்றி வளைத்துப் பற்றிக்கொண்டு இறுக்குகிறாள். ஒரு மெல்லிய அணைப்பு. தமிழிலே 'ஞெமுங்க' என்றொரு அழகான சொல் இருக்கிறது. இறுக்குதல் அல்லது அழுத்துதல் என்று பொருள். ஆனால், இது காதல்கொண்டோரின் நெருக்கம். மிகவும் மென்மையான இறுக்கம். இந்தச் சொல்லை உச்சரிக்கும்போதே ஒருவித மென்மை வந்து ஒட்டிக்கொள்கிறது அல்லவா!
"வனைந்து வரல் இளமுலை ஞெமுங்கப் பல் ஊழ்
விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற"
மலர்களில் பேரின்பம் வேர்பிடிக்க தென்றல்போலொரு தீண்டல்தானே வேண்டும். தன் மார்புகளை அவன் மார்போடு மெல்ல அழுத்தி அணைக்கிறாள். அணைப்பின்போது தன் துயரமெல்லாம் கரையவேண்டும் என எண்ணுபவள் பெண். அதேநேரம், அணைக்க எரிகிற தீயல்லவா காதல்! வனையப்பட்டது போல இருக்கிற இளைய நகில்கள்(மார்பு) அழுந்தும்படி அவனைப் பலமுறை தழுவுகிறாள். இருவரும் விட்டுப் பிரிய எத்தனிக்கும் போதெல்லாம் இழுத்துத் தழுவிக்கொள்கிறாள். அவனைத் திரும்பத் திரும்ப தழுவி மகிழ்கிறாள். 'பல்லூழ்' என்றால் பலமுறை. சிநேகிதனே பாடலில் "இதே அழுத்தம். இதே அணைப்பு. வாழ்வின் எல்லை வரை வேண்டும்" என்று வைரமுத்து எழுதியிருப்பார். ஒவ்வொருமுறை நீ என்னைத் தழுவும்போதும் என்மீதான காதல் புதிதாய் அதே இறுக்கத்தோடு இருக்கவேண்டும். உன் அணைப்பு நெகிழ்ந்தால் நான் துயருறுவேன் என்பதுதான் அதன் பொருள். ஆனா இங்கே அணைக்கும்போது பிரிவினை எண்ணியே இறுக்கி அணைத்துக்கொள்கிறார்கள். அதனால் கொஞ்சம் இறுக்கமும் இருக்கும். ஒவ்வொருமுறை தழுவும்போதும் இறுக்கம் அதிகரிக்கும். அப்படித் தழுவி மகிழும்போது ஒரு விடயம் சொல்லுகிறாள்.
"உங்களைத் தழுவி மகிழ்வதிலும் பார்க்க இன்பம் எது தெரியுமா? உங்களுக்காகக் காத்திருக்கிறதுதான். நீங்க வருவீங்கங்கிற நம்பிக்கையோடு பார்த்து உயிர் பூத்திருப்பேன். காத்திருப்பு எனக்குக் கவலையா இருந்தாலும் அந்த எதிர்பார்ப்பு அழகா இருக்கும். நீங்க வந்ததும் உங்களோடான பொழுதை எப்படிக் கழிக்கப்போகிறேன்ன்னு எண்ணியே மகிழ்வேன். ஆனா உங்களைக் கட்டிக்கும்போது என்ன பிரச்சனைன்னா நீங்க எப்போ பிரிந்துபோவீங்கனு யோசிக்க ஆரம்பிப்பேன். அப்பிடி யோசிச்சா கவலையா இருக்கும்." என்று சொல்கிறாள். "காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா" என்பதற்கு இதைவிட உளவியல் ஆழம்  சொல்ல முடியாது. 
முதல்வன் படத்திலே இடம்பெற்ற "குறுக்குச் சிறுத்தவளே" என்கிற பாடல் ஆரம்பிக்க முன்னர் நிகழ்கிற காட்சிகள் அழகு. சங்கரின் பழைய பாடல் காட்சியமைப்புகளில் இந்த அழகியல் இருக்கும். ஏற்கனவே "கப்பலேறிப் போயாச்சு" என்கிற பாடலைப் பற்றி எழுதியிருக்கிறேன். சங்ககாலத் தலைவனும் தலைவியும்போல முதல்வனும் தேன்மொழியும் ரகசியமாகச் சந்தித்துக்கொள்கிறார்கள். அப்போது தேன்மொழி பேசுகிறாள். "எல்லோரும் நெல் கொடுத்து உன்னை சாமி உசரத்துக்குக் கொண்டுபோயிட்டாங்க. அதையும் மீறி உனக்குக் கொடுக்க என்கிட்டே என்ன இருக்கு"னு அவள் தன்னையே அளிக்க முன்வருகிறாள். இருவரும் அணைத்து மகிழும்போது அந்தப் பாடல் ஆரம்பமாகும். "ஒருதடவை இழுத்து அணைச்சபடி உயிர் மூச்சை நிறுத்து கண்மணியே... உம் முதுகைத் துளைச்சு வெளியேற இன்னும் கொஞ்சம் இறுக்கு என்னவனே"  என்கிற இந்த வரிகள் அந்தச் சந்திப்பினையும் காதலையும் நயமாகச் சொல்லும் வரிகள். 
திரைப்படத்தின் கதையையும் காட்சியமைப்பின் அழகையும் உள்வாங்கிப் பாடல்கள் எழுதுபவர் வைரமுத்து என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

Comments

Anonymous said…
காத்திருத்தல் ❤

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ