Skip to main content

Tweets - கண்மணியாள்



எழுதிய சில டுவீட்களின் தொகுப்பு...

குழல்காடு குலைந்தலைய நின் நன்னுதல் சிறுநிலா ஒளி அருந்தி யாசகம் கேட்கையில் இருகரை காணாது என் உள்ளக் காட்டாறு.

மென் குழலடுக்கில் சிதறிய வெண்தோட்டு மல்லிகையும் நின் மார்பணிக்குள் இடறி உருளும் நல் முத்தும்  உன் பெயரின் ஒரு பாதி அழகை உச்சரிக்கக்கூடும்.

தாயன்பு கொண்டு   உச்சந்தலை நுகர்ந்து "கடலிலே விடம் தேடு" என்று நீ மதுரமொழி உரைத்தபோதே  செவியின்பம் கொண்டேன்.

இதோ உன் இதழ்களுக்கு மோட்சமென்று  கனிவாய்  உன் பொற்பதம் உயர்த்தித் தருகையில் சென்னியது உன் கர்வம் என்றறிந்தேன்.

உதிரும் ஒற்றைச் சிறகில் உன் பார்வை தவமிருக்கும் அழகைவிட ஒரு பறவையின் பறத்தலில் என்ன இருந்துவிடப்போகிறது!

பள்ளிக்குழந்தைகள் ஒருமித்து ஒப்பிக்கும் தேவார சந்தம் போல முத்தாடும் உன் சிரிப்பு.

விழாக்கோலம் பூணும் வானத்தை ஒற்றைக் கண்ணால் பார்த்தபடியே முத்தங்கள் பரிமாறிக்கொள்வோம். அதில் ஒரே நிறத்தைத் தேர்ந்தெடுக்கும் ரகசியங்கள் கற்போம்.

குழல் ஊதும் தோரணையில் உன் கைகளைப் பிடித்து முத்தமிடுகையில் படபடக்கும் உன் பட்டாம்பூச்சி விரல்களின் மென்பாரம்கூடத் தாளவில்லை.



உன் கூந்தல் மேவி நான் உதிர்த்த சொற்களை நீ அள்ளி முடியும் காலை அழகுக்கு இரட்டைக் குயிலின் ஓசைகளையும் மிச்ச விண்மீன்களையும் எழுதித் தரலாம்.

ஒற்றைப் பூக்களைப் பறித்துக்கொடுக்கச் சொல்கிறது காதல். தேவி உன்னைப் பூவுதிரும் மரங்களுக்குக் கீழே நிறுத்தச் சொல்கிறது காமம்.

"உன் இரசனைகள் பிடிக்கும்" என்று நீ சொன்னதை விடவும் உன்னையும் ரசிக்க வைத்துவிடவேண்டும் என நீ எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் மீது காதல் எனக்கு

மஞ்சத்தில் உன்னைச் சிறைப்பிடிக்க உன் மீதிருக்கும் வேட்கை ஒன்றே எனக்குப்போதும். இருந்தும் உன் கண்கள் தேடும் காதல் மீதுதான் எனக்குப் பிரியம்.

உன் கவிதைகள் எனக்கொரு பொருட்டல்ல என்று நீ சொன்னபிறகும், அதைப் புலம்பித் தீர்க்க ஒற்றைக் கவிதைக்கு வார்த்தை தேடி அலைவதுதான் என் காதல்.

சிலநொடி மௌன தேவதையாகி நீ கேட்கும் தீரா வரங்களெல்லாம் என் செவிகளிலிருந்து நீங்குவதேயில்லை.

பறித்துக்கொண்ட அத்தனை உயர்வான மலர்களையும் சாமிக்கு வைத்துவிடும் ஓர் அழகிக்காக வாய்மூடி அழும் மொட்டுகளின் சலசலப்பில் உன் பெயர் கேட்கிறேன்.

உற்சவதேவி உனது தேக சுவாசத்தைக் கொண்டாடித் தீர்ப்பவைதான் மிச்சம் மீதமின்றிக் காலையில் நான் தரும் மென்முத்தங்கள்.

கொஞ்சம் கைகோர்த்து நட.
வானத்துக்கு மாதங்களை அடைமொழியாக வைக்கலாம். வஞ்சனையில்லாத மனிதரின் தெருக்களுக்குப் போகலாம்.
வானவில்லின் மிகுதி அரைவட்டம் தேடித் திளைக்கலாம் 
வற்றாத நதியோடு  ஓடி நாணலில் ஓய்வெடுப்போம் 
கொஞ்சம் கைகோர்த்து நட...

உனக்காக நீல நிறக் கூழாங்கற்களை விழுங்கிய  ஒருசில வெள்ளை நதிகள்கூட  பார்த்து வைத்திருக்கிறேன்.அவசர யுகத்தின் சொந்தக்காரி போலே எங்கே ஓடுகிறாய்

செவி சாய்த்துக் கேட்டால் உனது காதோர வெப்பம் மட்டும் போதுமென்று சொல்லக்கூடும் என் இருதய அறைகள்.

அவள் குழலை மிருதுவாய்க் கொத்தாகப் பற்றுவது  என்பது அத்தனை நகரும் இரவுகளையும் துயரங்களையும் தொகுத்துக் கவிதை சேர்ப்பது போன்றது.

காற்றும் முகராத விரலிடைப் பற்றுதல்கள் போதும். உன்னோடு உலாவுவது வெறும் எண்ணக்காடுகளாக  இருந்தாலும்  எனக்குச் சம்மதம்தான்.

Comments

Anonymous said…
நன்றாக உள்ளது

Popular posts from this blog

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...