Skip to main content

சுஜாதாவிடமிருந்து வாசியுங்கள்...

தமிழ்ச் சூழலில் இருந்து புதிதாகப் புத்தகங்கள் வாசிக்க வருபவர்களுக்கு எந்தப் புத்தகத்திலிருந்து வாசிப்பினை ஆரம்பிப்பது என்பதில் நிறையக் குழப்பங்கள் இருக்கிறது. யாராவது புத்தகம் வாசிப்பவர்களைக் கண்டால் அவர்கள் கேட்கும் இரண்டாவது கேள்வி இதுதான் என்று நினைக்கிறேன். ஒருசிலரின்  'பிஸி' எனக் காட்டிக்கொள்ள விளையும் செயற்கைத் தன்மையால், அவர்களாகவே வலிந்து ஏற்படுத்திக்கொள்ளும் 'உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?' என்கிற முதலாவது கேள்வியை இப்போதைக்கு ஒத்திப்போடுவோம். 


புத்தகங்களைப் படிக்க விரும்புபவர்கள் சுஜாதாவிடம் இருந்து வாசிப்பினை ஆரம்பிக்கவேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. இதுவரை நான் படித்த புத்தகங்கள் ஒப்பீட்டளவில் மிகச் சொற்பம். தீவிரமான இலக்கிய வாசகன் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. ஒரு புத்தகத்தை இரண்டு, மூன்று தடவைகள் வாசித்தால் தான் தலைக்கு ஏறும். ஒருபோதும் எண்ணிக்கையினை நோக்கி ஓடி வாசிப்பின் நோக்கத்தைச் சரித்திட முயல்வதில்லை. வார்த்தைகளில் நின்று செல்லும் நிதானமான வாசிப்பு மிகவும் பிடிக்கும். ஒரு எழுத்தாளனை முழுமையாக உள்வாங்கி மரியாதைப்படுத்த வேண்டும் என எண்ணுவதுண்டு. நீங்கள் புதுமைப்பித்தனை அணுகும்போது, வசனங்களிலும் சங்கீதம், கவிதை உண்டென்பதை அறிந்துகொள்வீர்கள்.

தகவல் அறியும் ஆர்வத்தில் நிகழந்தது தான் என் முதலாவது வாசிப்பு. பத்திரிகைத் துணுக்குகளில் ஆரம்பமானது சுஜாதாவிடம் வந்து நின்றது. அதன் பின்னர் என்னை இன்றுவரை அழைத்து வந்தது 'serendipity' தான். இந்தச் சொல்லினை அறிமுகப்படுத்தியதும் சுஜாதா தான். அதுவும் இந்தச் சொல் என்ன என்பதைத் தேடித் பாருங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். 'ஒன்றினைத் தேடுவதை நாம் நோக்கமாகக் கொண்டிராதபோது தற்செயலாக நம் புலனுக்கு அகப்படுவது; அதன் விளைவால் ஏற்படும் அதிர்ச்சி மகிழ்ச்சி' என அதனை வரையறுக்கலாம். பிரிட்டனைச் சேர்ந்த மொழிபெயர்ப்பு நிறுவனம் ஒன்று இந்தச் சொல்லை , 'மொழி பெயர்ப்பதற்கு   கடினமான சொற்கள்' என்கிற பட்டியலில் சேர்த்திருக்கிறது.  

என்னைப்பொறுத்தவரை சுஜாதா ஒரு 'polymath' என்பேன். அவருடைய 'கற்றதும் பெற்றதும்', 'ஏன்? எதற்கு? எப்படி?', 'கற்பனைக்கு அப்பால்' போன்றவை தான் என்னுடைய முதலாவது புத்தக வாசிப்பு. 'என் இனிய இயந்திரா' என்னுடைய முதலும் முழுமையானதுமான நாவல் வாசிப்பு. சுஜாதாவை வாசிக்கும்போது  அவருடைய அந்த 'சீரியஸ்' இல்லாத பன்முக ஆளுமை உங்களைக் கவரும். மற்றைய எழுத்தாளர்களை விடுத்து, முதலாவதாக இவரைத் தேர்ந்தெடுக்கக் சொல்வதற்குக் காரணமும் அதுதான். உங்கள் சிந்தனையிலும் எண்ணத்திலும்  ஒருவித  சமநிலையைத்(balanced state of mind) தோற்றுவிக்கும் எழுத்து. அந்த 'Mind state balancing' என்கிற வித்தையைச் சொல்லாமல் சொல்லித் தருவார். இப்போதைய காலத்தில் பலருக்கும் அவசியமான விஷயம் என நினைக்கிறேன்.  அதன் பின்னர் நீங்கள் யாரை வேண்டுமானாலும் வாசிக்கலாம். அவரே உங்களுக்கு பலவிதமான தளங்களில் வாசிப்பை அறிமுகம் செய்வார். 'அவள் மெல்லிய ஆடையுடன் சோபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு லோலீட்டாவைப் படித்துக்கொண்டிருந்தாள்' என்று சட்டென்று அறிமுகப்படுத்துவார். குறித்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. கற்றதும் பெற்றதும் நூலில் மட்டுமே சுஜாதா குறிப்பிட்ட புத்தகங்களை ஒரு பட்டியலாக (எவ்வளவு புத்தகங்கள்!)ஒருவர் தொகுத்திருக்கிறார். 

இப்போதெல்லாம் பல்வேறு தளங்களிலும் வாசிப்பினை நிகழ்த்துவது  என்பது அனைவருக்கும் அவசியம். தேவையில்லாதவை என்று ஒன்றுமில்லை. நீங்கள் படிக்கிற, வாசிக்கிற விடயங்களை உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு இடத்தில் பிரயோகப்படுத்திக்கொண்டு இருப்பீர்கள். அந்தப் பிரயோகம் வாசிப்பினால் தான் நிகழ்கிறது என்பதை உணரும்போது மட்டுமே வாசிப்பினைப் புரிந்துகொள்ள முடியும். மற்றபடி அழுத்தம் கொடுத்ததெல்லாம் வாசிப்பினை நிகழ்த்த முடியாது. மகிழ்ச்சி தருவிக்கும், அறியாமை விலகும் சுகத்தினால் அதனை நிகழ்த்த முடியும். 


Comments

சுஜாதா சாரின் எழுத்துக்களுக்கு நானும் அடிமை. எழுத வேண்டுமென்ற உந்துதல் தர வல்லவை அவர் படைப்புகள்.

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ