Skip to main content

கம்பரும் கார்க்கியும்..


என் காட்டுக்குள் கிளியாகினாய் 
கிளி ஒன்றின் கீச்சாகி..
இலை ஒன்றின் மூச்சாகி..
முகில் ஒன்றின் பேச்சாகி..
எனில் வீழ்கிறாய்! ~ கார்க்கி 



யுவனின் இசையமைப்பில் வெளியான 'வை ராஜா வை' திரைப்படத்தின் பாடல்களை சில தினங்களுக்கு முன் கேட்டேன். என்றும் தனித்துவமும் புதுமையும் காட்ட விரும்பும் மதன் கார்க்கியின் வரிகளில் என்றுமுள்ள ஈர்ப்பு இருந்தது. 'பச்சை வண்ணப் பூவே' பாடலில் இடம்பெற்ற மேலே குறிப்பிட்ட வரிகள்  ஒரு சினிமாட்டோகிராபருக்கு தேவையான காட்சியையே முன்னே விரித்துப் போகிறது. 

அதன் பின்னர் கம்பரும் கார்க்கியும் சேர்ந்து எழுதிய பாடலை இரசித்தேன். வைரமுத்துவும் வாலியும் தமிழ் சினிமாப் பாடல்களில் சங்க இலக்கியத்தை மெதுவாகப் புகுத்தி இரசிக்கச் செய்தவர்கள். அந்த வகையில் மதன் கார்க்கியின் முதல் முயற்சி இதுவென்று நினைக்கிறேன். எல்லோரும் காதல் என்றதும் சங்க இலக்கியத்தைப் பொருத்தினர். கார்க்கி சற்றே வேறுபட்டிருக்கிறார். 'பூக்கமழ் ஒதியர்' பாடலை  'சங்ககாலத்து club song' என்று சொன்னால்  பொருத்தமாக இருக்கும்.

பெண்ணை மானென்றெண்ணாதே

என்னை நிலவென்றெண்ணாதே - நீ

கண்ணை மூடித் திறக்கும் முன் உன்

இதயம் கொய்தால் கேட்காதே...


என்கிற பாடலில் ஆரம்பத்திலும் இடையிலும் கம்பர் வருகிறார். பாலகாண்டத்தில், உண்டாட்டுப் படலத்தில் இடம்பெற்ற பாடல்கள் சில இந்தப் பாடலில் இணைக்கப்பட்டுள்ளது. கம்பனின் தமிழ் நுழையாத இடமில்லை என்று சொல்லலாம். பாடல்களின் பொருளினை முடிந்தவரை இலகுபடுத்திக் கொடுத்திருக்கிறேன்.



பூக்கமழ் ஓதியர் போது போக்கிய 
சேக்கையின் விளை செருச் செருக்கும் சிந்தையர் 
ஆக்கிய அமிழ்து என அம்பொன் வள்ளத்து 
வக்கிய பசு நறா மாந்தல் மேயினர்.

(சேக்கை - படுக்கை ; செரு - போர் ; வாக்கிய - வார்த்த )
பூக்களின் மணம் பரவுகிற கூந்தலினையுடைய பெண்களானவர்கள் மது அருந்தும் கூடத்தில் இருக்கிறார்கள். அவர்கள், மிகையாக மலர்கள் பரப்பப்பட்ட  படுக்கைகளிலே நிகழும் கலவிப் போரிலே இன்பம் பெறவேண்டும் என்கிற மனத்தினை உடையவர்களாக இருக்கிறார்கள். பொற்க்கிண்ணத்தில் ஊற்றிய மதுவை அப் போரிலே வெல்வதற்காகவே ஆக்கப்பட்ட அமிழ்தம் போல பருகத் தொடங்கினர்.

மீனுடைய விசும்பினார். விஞ்சை நாட்டவர்.
ஊனுடை உடம்பினார் உருவம் ஒப்பு இலார்.
மானுடை நோக்கினார் வாயின் மாந்தினார்
தேனுடைய மலரிடைத் தேன் பெய்தென்னவே.


வானுலக மங்கையரும் வித்தியாதர நாட்டு மங்கையரும் சிறப்புள்ளவர்கள் ஆயினும் ஊன்மேனியைடைய  இந்தப் பெண்களுக்கு ஒப்பாக மாட்டார்கள். மானின் பார்வையைத் தோற்கடித்த விழியையுடைய மகளிர், தேனையுடையே மலர்களே தேனைச் சொரிந்தது போல தங்கள் மலர் போன்ற இதழ்களால் மதுவினை அருந்தினர். 

தாமமும் நானமும் ததைந்த தண் அகில் 
தூமம் உண் குழலியர் உண்ட தூ நறை 

ஓம வெங் குழி உகு நெய்யின் உள் உறை 

காம வெங் கனலினைக் கனற்றிக் காட்டிற்றே.

மலர்மாலையும் புனுகும் நிறைந்த அகில் புகையூட்டப்பட்ட கூந்தலையுடைய(நறுமணம் வீசும்)  பெண்கள், தூய்மையான மதுவினை இதழ்களின் நனைத்து உண்டார்கள். நெருப்பு நிறைந்த யாகக் குண்டத்திலே நெய்யை ஊற்றினால் தீயின் வளர்ச்சி அதிகமாகுவது போல, அவர்களின் உள்ளத்திலே நிறைந்திருந்த காமத்தினை மேலும் சூடேறச் செய்ததாம் இந்த மது.    

(புனுகு - புனுகுப்பூனையில் இருந்து பெறப்பட்ட வாசனைத் திரவியம். செறிவான கஸ்தூரி வாசனையைக் கொண்டு காணப்படுமாம்.)

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ