Skip to main content

சுஜாதாவிடமிருந்து வாசியுங்கள்...

தமிழ்ச் சூழலில் இருந்து புதிதாகப் புத்தகங்கள் வாசிக்க வருபவர்களுக்கு எந்தப் புத்தகத்திலிருந்து வாசிப்பினை ஆரம்பிப்பது என்பதில் நிறையக் குழப்பங்கள் இருக்கிறது. யாராவது புத்தகம் வாசிப்பவர்களைக் கண்டால் அவர்கள் கேட்கும் இரண்டாவது கேள்வி இதுதான் என்று நினைக்கிறேன். ஒருசிலரின்  'பிஸி' எனக் காட்டிக்கொள்ள விளையும் செயற்கைத் தன்மையால், அவர்களாகவே வலிந்து ஏற்படுத்திக்கொள்ளும் 'உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?' என்கிற முதலாவது கேள்வியை இப்போதைக்கு ஒத்திப்போடுவோம். 


புத்தகங்களைப் படிக்க விரும்புபவர்கள் சுஜாதாவிடம் இருந்து வாசிப்பினை ஆரம்பிக்கவேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. இதுவரை நான் படித்த புத்தகங்கள் ஒப்பீட்டளவில் மிகச் சொற்பம். தீவிரமான இலக்கிய வாசகன் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. ஒரு புத்தகத்தை இரண்டு, மூன்று தடவைகள் வாசித்தால் தான் தலைக்கு ஏறும். ஒருபோதும் எண்ணிக்கையினை நோக்கி ஓடி வாசிப்பின் நோக்கத்தைச் சரித்திட முயல்வதில்லை. வார்த்தைகளில் நின்று செல்லும் நிதானமான வாசிப்பு மிகவும் பிடிக்கும். ஒரு எழுத்தாளனை முழுமையாக உள்வாங்கி மரியாதைப்படுத்த வேண்டும் என எண்ணுவதுண்டு. நீங்கள் புதுமைப்பித்தனை அணுகும்போது, வசனங்களிலும் சங்கீதம், கவிதை உண்டென்பதை அறிந்துகொள்வீர்கள்.

தகவல் அறியும் ஆர்வத்தில் நிகழந்தது தான் என் முதலாவது வாசிப்பு. பத்திரிகைத் துணுக்குகளில் ஆரம்பமானது சுஜாதாவிடம் வந்து நின்றது. அதன் பின்னர் என்னை இன்றுவரை அழைத்து வந்தது 'serendipity' தான். இந்தச் சொல்லினை அறிமுகப்படுத்தியதும் சுஜாதா தான். அதுவும் இந்தச் சொல் என்ன என்பதைத் தேடித் பாருங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். 'ஒன்றினைத் தேடுவதை நாம் நோக்கமாகக் கொண்டிராதபோது தற்செயலாக நம் புலனுக்கு அகப்படுவது; அதன் விளைவால் ஏற்படும் அதிர்ச்சி மகிழ்ச்சி' என அதனை வரையறுக்கலாம். பிரிட்டனைச் சேர்ந்த மொழிபெயர்ப்பு நிறுவனம் ஒன்று இந்தச் சொல்லை , 'மொழி பெயர்ப்பதற்கு   கடினமான சொற்கள்' என்கிற பட்டியலில் சேர்த்திருக்கிறது.  

என்னைப்பொறுத்தவரை சுஜாதா ஒரு 'polymath' என்பேன். அவருடைய 'கற்றதும் பெற்றதும்', 'ஏன்? எதற்கு? எப்படி?', 'கற்பனைக்கு அப்பால்' போன்றவை தான் என்னுடைய முதலாவது புத்தக வாசிப்பு. 'என் இனிய இயந்திரா' என்னுடைய முதலும் முழுமையானதுமான நாவல் வாசிப்பு. சுஜாதாவை வாசிக்கும்போது  அவருடைய அந்த 'சீரியஸ்' இல்லாத பன்முக ஆளுமை உங்களைக் கவரும். மற்றைய எழுத்தாளர்களை விடுத்து, முதலாவதாக இவரைத் தேர்ந்தெடுக்கக் சொல்வதற்குக் காரணமும் அதுதான். உங்கள் சிந்தனையிலும் எண்ணத்திலும்  ஒருவித  சமநிலையைத்(balanced state of mind) தோற்றுவிக்கும் எழுத்து. அந்த 'Mind state balancing' என்கிற வித்தையைச் சொல்லாமல் சொல்லித் தருவார். இப்போதைய காலத்தில் பலருக்கும் அவசியமான விஷயம் என நினைக்கிறேன்.  அதன் பின்னர் நீங்கள் யாரை வேண்டுமானாலும் வாசிக்கலாம். அவரே உங்களுக்கு பலவிதமான தளங்களில் வாசிப்பை அறிமுகம் செய்வார். 'அவள் மெல்லிய ஆடையுடன் சோபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு லோலீட்டாவைப் படித்துக்கொண்டிருந்தாள்' என்று சட்டென்று அறிமுகப்படுத்துவார். குறித்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. கற்றதும் பெற்றதும் நூலில் மட்டுமே சுஜாதா குறிப்பிட்ட புத்தகங்களை ஒரு பட்டியலாக (எவ்வளவு புத்தகங்கள்!)ஒருவர் தொகுத்திருக்கிறார். 

இப்போதெல்லாம் பல்வேறு தளங்களிலும் வாசிப்பினை நிகழ்த்துவது  என்பது அனைவருக்கும் அவசியம். தேவையில்லாதவை என்று ஒன்றுமில்லை. நீங்கள் படிக்கிற, வாசிக்கிற விடயங்களை உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு இடத்தில் பிரயோகப்படுத்திக்கொண்டு இருப்பீர்கள். அந்தப் பிரயோகம் வாசிப்பினால் தான் நிகழ்கிறது என்பதை உணரும்போது மட்டுமே வாசிப்பினைப் புரிந்துகொள்ள முடியும். மற்றபடி அழுத்தம் கொடுத்ததெல்லாம் வாசிப்பினை நிகழ்த்த முடியாது. மகிழ்ச்சி தருவிக்கும், அறியாமை விலகும் சுகத்தினால் அதனை நிகழ்த்த முடியும். 


Comments

சுஜாதா சாரின் எழுத்துக்களுக்கு நானும் அடிமை. எழுத வேண்டுமென்ற உந்துதல் தர வல்லவை அவர் படைப்புகள்.

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...