Skip to main content

நிலமடந்தை


மனப்பீடத்தில் வீற்றிருந்து மணிமொழி சூட்டி அழகு பார்க்கும் பெயரற்றவளுக்கு எழுதிய ஓலைகள்.

பாயல் கொள்ளுதல்  
கண்மணியாள்,
மூடிவைத்த வீணை போல் நினைவில் உனது வடிவு .தந்தி மீது இரு கயல்கள். வெறித்த வெண்ணிலவில் உறங்கும் புள்ளெல்லாம் எழுப்பிவிடத் தோன்றுகிறது. கிடக்கட்டும் வைகறை.

வள்ளியைத் தொழுதல் 

வள்ளீ ,
எனதன்பு சொல் நர்த்தகி. "அடுக்கடுக்காய் மலரும் விடியல் காண நீர்த்தாமரை விழித்திருக்கும்" என்று நீ சொன்னால்,அப் பொருளின் வேர் மருவிய மொழியும் பாதி வழியில் நாணும்.

கூதிர்காலம்...

நங்கை,
இது வெள்ளைச் சூரியன்கள் பார்க்கும் கன்னி மாதம். ஓர் அச்சிர ஆராதனம். ஊசிப் பூக்கள் நெருக்கையிலே ஒரு ஆளுயர விடமேற்றிக் கொலைகள் புரிகுவாய். உயிர் இறங்கிய மறுகணமே பற்றிக்கொண்டு எரிகிறதொரு சித்திரவனம் என்பாய். பதிலுக்கு, குளித்த மலர்கள் தொட்டுப் பறவை ராகம் பாடுகையில் உன் குற்றமிலாப் புன்னகை கள் என்றிருக்கிறேன்.
விழா மகளே, நங்காய்! இப்போதும் உன் செவியோரம் தவம்கிடந்து தொட்டுச் சென்றது ஒரு நெடிய பனிக்காற்றுத்தான் என்று சொன்னால் நீ நம்பப் போவதில்லை. நீ நம்பவில்லை என்றால் மட்டுமே பொய்களுக்குள்ளும் பொருளிருக்கும்.

சிவந்த நிலம் 

எழில்மொழி,
சற்றே செந்தூரம் குழைந்த குறிஞ்சி மண்ணில் வீழலாம் என்று காதலை வாழ்த்தி வணங்கிய உனது குரலில் பிழையில்லை. வானம் பார்த்துச் சரிகையில் உயர்ந்து ஓங்கும் நினது வண்ணம் தொழுதிருந்த இவனின் நற்றவத்திலும் பழுதில்லை. இளங்கிளியே கேளாய்! ஒவ்வொரு நாளும் சூரியன் புதியது என நீ அறியாய். அடுத்த புலர்தலில் அலர் மலர்ப் பாதம் வருட எண்ணிய யாசகனின் தாகம் நீ அறியாய். மலர்களைப் பறிக்க அஞ்சுபவனைத்தான் மலர்கள் நேசிப்பது உண்டு. இயற்றமிழ் வடித்தவர்கள் சொன்ன இச் சாத்திரமும் பொய்யில்லை. குறிஞ்சியோ இப்போதும் ஈரமாகத்தான் இருக்கிறது. ஈரமாக இருப்பதுதான் அதற்கு உயர்வு.

வனமகள் அழைப்பு 

நேர்நாயகி,
நினது தெரிவைப் பருவமதில், பைன் மரங்களால் நெருக்கமுற்ற கருங்காடுகளின் அழகைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். பைன் மரங்கள் நெருக்கமாய் உயர்ந்திருக்கும். அவ்விருட்டில் காற்றுங்கூட மைபூசியிருக்கும்.அங்கே சூரியன் தீண்டாத இடங்களும் உண்டு. சிறுவேர்கள் தொடும் பெருமழையும் உண்டு. வெண்பனியை இருளில் படரவிட்ட இயற்கை அமுதவொளியில் உன் கண்மணி சுகம்பெறவேண்டும் நேர்நாயகி. தேர்போல் உயர்ந்தோங்கும் தீயின் ஊமை வடிவாய் உன் கருங்கூந்தல் சரியும்போதெல்லாம் ஒரு கருங்காட்டின் ஆதிவேட்கை என்னை அழைக்கிறது.


முத்தாடுபவள்
வெண்முகை,
உலவித்திரியும் நூற்பா வடிவினள்.ஒயிலாள் நடை அழகில் இடைமேகலை பகுதியாய் சாய்ந்து மிகுதியாய் எழுந்து முத்தங்கள் பல இடும். வெண்ணிறத் துகிலுக்கு மஞ்சள் நிறப் பூக்கள் என்றும், கருநீல நூற்பின்னலுக்கு வெண்ணூல் தனிலிருந்து வீழ்ந்த வெள்ளை நிற மொட்டுகளையும், வெள்ளிக்கொலுசிலிருந்து கழன்ற ஒன்றிரண்டு மணிகளையும் வைத்து அழகு கோர்க்கும் சுந்தர விழிகள். மண்ணிற் சிதறிய குங்குமமும், மாமரத்து அணிலின் பேச்சும், உழுது சிவந்த உழவன் கால்களும் அழகென்று நோக்கும் பணிமொழியாள் நெஞ்சம்.

அவள் குழல் வெப்பத்தில்...
கோதை,
முன்பனி ஈரத்தில் தன் விழிகளைத் திறப்பதில்லை நிலமடந்தை. இருப்பினும், ஒரு குயிலின் குரல் வடிவிலாவது விழிப்புற்றிருப்பாள். இலக்கணங்கள் உடைத்துக் கவிதை தருவிப்பாள். தீம்பாரங்கள் இவையென்று பொருள் தருவாள். செந்நிற மாந்தளிரில் தீம்புனல் சொட்டும். சிறு பூங்கொடிகள் கவிழ்ந்துகொள்ளும். இறகுகளிலேயே குடில் வடிவம் செய்து அமர்ந்திருக்கும் புள்ளினம்.காலை விழிப்பில், காதலியின் திருவடிவு மறைக்கும் பகுதிக் கூந்தல். இவையெல்லாம் தீம்பாரங்கள் என்று ஓதுவாள்.

கிள்ளை மொழி பேசுதல் 

கார்த்திகை,
மரப்பாச்சி பொம்மையை இறுகப்பற்றி உறங்கிய கற்கண்டு விரல்கள். திருவிழாப் பெண் கோலத்தில் வளையல்கள் அணிந்துபார்க்கக் குவிந்த மொட்டு விரல்கள். புடவைக் கடைகளில் புடவையின் சருகு ஓசையைத் தடவிப் பதம் பார்த்த பட்டு விரல்கள். சக பெண்தோழியின் கைகளைப் பிடித்து விளையாடிய பிள்ளை விரல்கள். முதியவர் கரங்களுக்குள் வெப்பம் கடத்திய கருணை விரல்கள். கோவிலின் மரக்கதவுச் செதுக்கல்களுக்கு அழகுசேர்க்கும் சிறுமணிகளைத் தடவிச்சென்ற மரகத விரல்கள். கோடிமுறை கூந்தலைச் சரிசெய்த நயன விரல்கள். பச்சை வயல் வரப்பு நெடுக நெல்மணிகளைத் தடவிச்சென்ற பால் விரல்கள். என்னைப் பற்றி எழுதும்போது மட்டும் பாரதியின் விரல்களாவது எப்படி.


Comments

Anonymous said…
அட என்னே அழகு. சங்ககால இலக்கியம் படிக்கும் ஏதே ஒரு நிழலிலிருந்து வெளியேறுகிறேன் கிள்ளை மொழி முற்றில்.

நம்பவில்லை என்றால் மட்டுமே பொய்களுக்குப் பொருளிருக்கும். யாசகனின் தாகமும் பறிக்க அஞ்சுபவனும் எதிர் எதிர் முரண்பாடு,தீயின் ஊமை வடிவு!!
வரிக்கு வரிக்கு வந்த முற்றுப்புள்ளிகள் வரைந்தவனுக்கு கிடைத்த தலைக்கணம்,மகுடம் அது.

தருணங்களை அழகாக்கியமைக்கு நன்றி.
-திவ்யா.

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ