Skip to main content

எங்கே எனது கவிதை - மிருதங்கம்



விரல்களால் இடையிடுதல், இடையிட்டு உந்தல், உருட்டல், அஞ்சுகையில் அள்ளல், ஆராய்தல், ஆராய்ந்ததை மீறல், மீறியதைப் பெருக்கிப் புது இராகம் பிடித்தல், விவரித்தல், விவரித்ததை மேலும் தெளிவித்து வருடல், வருடியதை அள்ளல், அள்ளியதைச் செவிகுளிர அருளல் எல்லாம் மிருதங்கத்தின் செயல்கள். செவியில் விழும் இந்த மிருதங்கத்தின் கோதுதலை, அத்துணை அழகாய் இந்தப் பாடலில் கேட்கலாம்.
பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கும் தவில் ஓசை, சித்ராவின் பல்லவிக் குரல், முதலாவது இடையிசை எல்லாம் முடிந்த கையோடு வருகிற முதலாவது சரணத்தில், "மையல் கொண்டு மலர் வாடுதே" எனும் வரிகள் முடியும்பொழுது மிருதங்கம் பாடலை உயிர்ப்பிக்க ஆரம்பிக்கும்.
அழகிய திருமுகம் - ஒரு தரம் பார்த்தால் 
அமைதியில் - நிறைந்திருப்பேன்

இந்த வரிகளில், மிருதங்கம் இடையிட்டு உந்தும் அழகிருக்கும். இசையின் இடைவெளிகள் வரிகளுக்கு இடங்கொடுக்கும்அழகிருக்கும். இரண்டும் சேர்ந்து நல் அகம் பாடும் அழகிருக்கும். எல்லா இசையையும் விட்டுவிட்டு, மிருதங்கத்தை மட்டும் கவனித்திருந்தால், வரிகளும் மிருதங்கமும் செய்யும் ஆலிங்கனத்தை இரசிக்கலாம். மொத்த உற்சவத்தில் அது ஒரு தனி அடுக்கு.
"நுனிவிரல் கொண்டு - ஒரு முறை தீண்டு" எனும் வார்த்தைகளில், மிக நுணுக்கமாய் மிருதங்கம் செய்யும் அந்தத் துருவல்!
இரண்டாவது இடையிசையில், நாதஸ்வரம் வந்து தடுக்கும்பொழுது, அதன் அழகுக்கும் இடங்கொடுத்து, அதையும் மெதுவாய் அணைந்து ஆராய்ந்து தன்னோடு அள்ளிக்கொள்ளும். தன்னை வரிகளோடு விவரித்து, பாடலின் இறுதியில் விரிந்து தன் ஆருத்ர அழகைக் காட்டியிருக்கும். உயிர்களுக்கு, ஆறுதலுக்கு நல்ல இசையும், கவியும் தந்த ரஹ்மானையும் வைரமுத்துவையும் நன்றிகளால் ஆராதிக்கும் செயலை இந்த மிருதங்கம் செய்துவிட்டுப் போனதாய் எண்ணிக் களிக்கவேண்டியதுதான்.

Comments

Popular posts from this blog

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...