Skip to main content

அம்மான் மகளே!

கஜூராஹோ சிற்பம் - காமுறுதல் 

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா


குத்துவிளக்கு எரிகிற அறையில், ஒரு மிதமான வெம்மை இருக்கும். அந்த ஒளி தருகிற வெம்மை, அறையின் சுவர்களிலெல்லாம்  பட்டுத் தெறித்து, உடல்மீது அளவோடு வந்து இறங்கும். அப்படி இறங்கும் அந்த ஒளியின்  அழகுக்கு   முன்னால், தரித்திருக்கும் ஆடைகூடத் தோற்றுப்போகும். ஒளியை உடல் உடுத்திக்கொள்ள விரும்பும். காரணம், விளக்கு ஒளியில் மட்டுமே, பாதி உடலின் வடிவு இருளிலும், மீதி உடலின் வடிவு ஒளியிலும் வளைந்துகொடுக்கும் அழகைப் பார்க்கலாம். காற்றில், குத்துவிளக்கின் ஒளி கொஞ்சம்  அசைந்து துடிக்கையில், ஒளி உடலைத் துதிக்கும் அழகையும் பார்க்கலாம். 

அப்படிப்பட்ட அறையில், உறுதியான கால்களையுடைய கட்டில் இருக்கிறது. அதன்மீது, அன்னத்தின் இறகு, இலவம் பஞ்சு என ஐந்துவகை அடுக்குகளால் செய்யப்பட்ட மெத்தை இருக்கிறது. அந்தப் பஞ்சசயனத்துக்கு வெண்மை, வாசம் போல ஐந்து குணங்களும் இருக்கிறது. ஐந்துபுலன்களுக்கும் ஆசை வேராகும் மெத்தை.

அந்தப் பஞ்சசயனத்தின்மீது, கொத்துக் கொத்தாக மலரணிந்த கூந்தலையுடைய நப்பின்னையும் கண்ணனும் உறங்குகிறார்கள். அதிலும், நல்லதொரு கூடலுக்குப் பின்னான உறக்கம்போல, நப்பின்னையின் கொங்கைகள்மீது தலைவைத்து  உறங்குகிறான். பஞ்சணை மீதே இன்னொரு பஞ்சணையை உணர்ந்த மயக்கத்தில் அவன் உறங்குகிறான். கண்ணனின் மோகம் வளர்த்த யாகத்தில் நப்பின்னை உறங்குகிறாள்.

இப்படி மயங்கிப் போயிருக்கும் இருவரையும் ஆண்டாள் எழுப்புகிறாள். உன் கணவனை ஒருகணமேனும் பிரியமாட்டாயா என்று நப்பின்னையைக் கேட்கிறாள். கதவைத் திறவுங்கள் என்று கேட்கிறாள். இப்படியாக, ஆண்டாளின் தமிழ் என்பது காட்சியாகப் படித்துச் சுவைக்கக்கூடியது.

இந்த நப்பின்னை, யசோதையின் தமையனின் மகள் என்று சொல்லப்படுகிறது. கண்ணன், ஏறுதழுவி(ஏழு காளை அடக்கி) இவளை மணந்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. நப்பின்னை, கண்ணனின் மாமன் மகள்.

'ஹலோ மிஸ் இம்சையே' பாடலில், வாலி 'அம்மான் மகளே, என்னை அசத்தும் ஆழ்வார் குழலே' என்று நப்பின்னையைச் சொல்கிறாரா, இல்லை, ஆண்டாளைச் சொல்கிறாரா, இல்லை இருவரையும் சேர்த்துச் சொல்கிறாரா எனத் தெரியவில்லை. 'உன்னாலே உன்னாலே' படத்தில் நாயகனுக்குப்  பெண்கள்மீது விருப்பம் இருக்கும்.  ஆனால், சதாமீது காதல் இருக்கும். கூடவே இன்னொரு பெண்மீதும் கொஞ்சம் விருப்பம் இருக்கும். அதனால் இப்படிப் பயன்படுத்தினாரா தெரியாது.

ஆனால், இந்த வார்த்தைப் பிரயோகம் அத்தனை அழகு. படத்தில் இருக்கும், கஜுராஹோ சிற்பத்தில் குழலுக்குள் கைகள் இருக்கும். ஒருகை அவள் குழலைப் பிடித்திருக்கும். அவளின் கை, அவன் குழல்களை அணைத்திருக்கும்.  இதனின் அற்புதமான காட்சி விபரிப்புத்தான் ஆண்டாளின் தமிழ். அதை, உணர்ந்து இரசித்துப் படிக்கவேண்டும். மேலே உள்ள பாடல்வரிகளில், காமத்தில் ஐந்துபுலன்கள் பெறவேண்டிய இன்பத்தையும் ஒளித்துவைத்திருக்கிறாள். 

Comments

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...