Skip to main content

அம்மான் மகளே!

கஜூராஹோ சிற்பம் - காமுறுதல் 

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா


குத்துவிளக்கு எரிகிற அறையில், ஒரு மிதமான வெம்மை இருக்கும். அந்த ஒளி தருகிற வெம்மை, அறையின் சுவர்களிலெல்லாம்  பட்டுத் தெறித்து, உடல்மீது அளவோடு வந்து இறங்கும். அப்படி இறங்கும் அந்த ஒளியின்  அழகுக்கு   முன்னால், தரித்திருக்கும் ஆடைகூடத் தோற்றுப்போகும். ஒளியை உடல் உடுத்திக்கொள்ள விரும்பும். காரணம், விளக்கு ஒளியில் மட்டுமே, பாதி உடலின் வடிவு இருளிலும், மீதி உடலின் வடிவு ஒளியிலும் வளைந்துகொடுக்கும் அழகைப் பார்க்கலாம். காற்றில், குத்துவிளக்கின் ஒளி கொஞ்சம்  அசைந்து துடிக்கையில், ஒளி உடலைத் துதிக்கும் அழகையும் பார்க்கலாம். 

அப்படிப்பட்ட அறையில், உறுதியான கால்களையுடைய கட்டில் இருக்கிறது. அதன்மீது, அன்னத்தின் இறகு, இலவம் பஞ்சு என ஐந்துவகை அடுக்குகளால் செய்யப்பட்ட மெத்தை இருக்கிறது. அந்தப் பஞ்சசயனத்துக்கு வெண்மை, வாசம் போல ஐந்து குணங்களும் இருக்கிறது. ஐந்துபுலன்களுக்கும் ஆசை வேராகும் மெத்தை.

அந்தப் பஞ்சசயனத்தின்மீது, கொத்துக் கொத்தாக மலரணிந்த கூந்தலையுடைய நப்பின்னையும் கண்ணனும் உறங்குகிறார்கள். அதிலும், நல்லதொரு கூடலுக்குப் பின்னான உறக்கம்போல, நப்பின்னையின் கொங்கைகள்மீது தலைவைத்து  உறங்குகிறான். பஞ்சணை மீதே இன்னொரு பஞ்சணையை உணர்ந்த மயக்கத்தில் அவன் உறங்குகிறான். கண்ணனின் மோகம் வளர்த்த யாகத்தில் நப்பின்னை உறங்குகிறாள்.

இப்படி மயங்கிப் போயிருக்கும் இருவரையும் ஆண்டாள் எழுப்புகிறாள். உன் கணவனை ஒருகணமேனும் பிரியமாட்டாயா என்று நப்பின்னையைக் கேட்கிறாள். கதவைத் திறவுங்கள் என்று கேட்கிறாள். இப்படியாக, ஆண்டாளின் தமிழ் என்பது காட்சியாகப் படித்துச் சுவைக்கக்கூடியது.

இந்த நப்பின்னை, யசோதையின் தமையனின் மகள் என்று சொல்லப்படுகிறது. கண்ணன், ஏறுதழுவி(ஏழு காளை அடக்கி) இவளை மணந்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. நப்பின்னை, கண்ணனின் மாமன் மகள்.

'ஹலோ மிஸ் இம்சையே' பாடலில், வாலி 'அம்மான் மகளே, என்னை அசத்தும் ஆழ்வார் குழலே' என்று நப்பின்னையைச் சொல்கிறாரா, இல்லை, ஆண்டாளைச் சொல்கிறாரா, இல்லை இருவரையும் சேர்த்துச் சொல்கிறாரா எனத் தெரியவில்லை. 'உன்னாலே உன்னாலே' படத்தில் நாயகனுக்குப்  பெண்கள்மீது விருப்பம் இருக்கும்.  ஆனால், சதாமீது காதல் இருக்கும். கூடவே இன்னொரு பெண்மீதும் கொஞ்சம் விருப்பம் இருக்கும். அதனால் இப்படிப் பயன்படுத்தினாரா தெரியாது.

ஆனால், இந்த வார்த்தைப் பிரயோகம் அத்தனை அழகு. படத்தில் இருக்கும், கஜுராஹோ சிற்பத்தில் குழலுக்குள் கைகள் இருக்கும். ஒருகை அவள் குழலைப் பிடித்திருக்கும். அவளின் கை, அவன் குழல்களை அணைத்திருக்கும்.  இதனின் அற்புதமான காட்சி விபரிப்புத்தான் ஆண்டாளின் தமிழ். அதை, உணர்ந்து இரசித்துப் படிக்கவேண்டும். மேலே உள்ள பாடல்வரிகளில், காமத்தில் ஐந்துபுலன்கள் பெறவேண்டிய இன்பத்தையும் ஒளித்துவைத்திருக்கிறாள். 

Comments

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...