Skip to main content

முல்லைப்பாட்டு : கன்று தவிப்பதைப் போல்!


தாயைப் பிரிந்த கன்றின் தவிப்புக்கு ஆறுதல் சொல்லிவிடமுடியாது. அதன் கண்களையும், கட்டப்பட்டு நிற்கும் இடத்தையே சுற்றிச் சுற்றித் தன் தவிப்பை வெளிப்படுத்தும் விதத்தையும் பார்த்தவர்களுக்கு ஓர் உண்மை தெரியும். எத்தனை செயல்கள் செய்தாலும், தாய்ப்பசு வரும்வரை கன்றின் ஏக்கம் தீராது. அதுபோக, அதைப் பார்த்துக்கொண்டேயிருந்தால் அதன் ஏக்கம் எங்களையும் தொற்றிக்கொள்ளும். கிட்டச் சென்று அரவணைத்துக்கொள்ளும்போது, எங்கள் மனம் வேண்டுமானால் கொஞ்சம் நிறைவு காணும். இந்த ஆழத்தை இந்த முல்லைப்பாடல் எப்படிக் கொண்டுவருகிறது எனப் பார்ப்போம். இலக்கியத்தில் இருக்கும் அழகே இந்த ஆழம்தான். படிக்கும்போது தொடர்புபடுத்திக்கொள்ளுங்கள்.

அது ஒரு மழைக்கால மாலைப்பொழுது. துயரை மேலும் அதிகரிக்கச்செய்யும் பொழுது. 'மழைக்காலத்துக்கு முன்னர் திரும்பி வந்திடுவேன்' எனச் சொல்லிவிட்டுப்போன தலைவன் எப்போ திரும்பி வருவான் எனத் தலைவி வருத்தத்தில் இருக்கிறாள். அவள் வருந்தி இளைப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தோருக்கும் அந்தத் துயர் தொற்றிவிட்டது. இவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியாத செவிலித்தாயும் முதுமையான சில பெண்களும் 'நற்சொல்' கேட்டுவரக் கோவிலுக்குப் போகிறார்கள். 


யாழிசை இனவண் டார்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை
அரும்பவிழ் அலரி தூஉய்க்கை தொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப

அங்கே, நெல்லையும் புதிய மலர்களையும் தூவி 'நற்சொல்' கேட்டு நிற்கின்றனர்.  இவர்களின் வேண்டுதல் புரியாத ஒருவர் 'நற்சொல்' சொல்வது காதில் கேட்டால் நல்லதே நடக்கும் என்று அர்த்தம். இதனை 'விரிச்சி கேட்டல்' என்பார்கள். அதனால் யாராவது 'இன்சொல்' சொல்வது தங்கள் காதில் விழவேண்டும் என்று வணங்கிக் காத்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில், சிறிய கயிற்றால் கட்டப்பட்டிருக்கிற இளங்கன்று, தனது தாய் இன்னும் வரலன்னு துயரில் அங்குமிங்கும் சுற்றித் தவிக்கிறது. அதிக குளிர் காரணமாக, நடுங்குகிற இருதோள்களிலும் தனது கையை மாற்றி மாற்றி வைத்துக் கட்டிக்கொண்டு நிற்கும் ஆயர்மகள் ஒருத்தி அதைப் பார்க்கிறாள். அதன் அருகே சென்று, "கோவலர்கள் பின்னால் இருந்து செலுத்த உன்னுடைய தாயார் இதோ இப்பவே வந்துவிடுவார். நீ கவலைப்படாத" என்று ஆறுதல் சொல்கிறாள். இந்த இனிய சொல்லைக் கேட்ட முதிய பெண்களும் செவிலித்தாயும் 'நற்செய்தி' கேட்ட சந்தோஷத்தில் அதை வந்து தலைவியிடம் சொல்கிறார்கள். நிகழ்வினை அப்பிடியே ஒப்பிவித்து, " நல்லவர்களின் வாய்ச்சொல்லினைக் கேட்டோம்; அதனால், உன் தலைவன் போரில் வெற்றிபெற்றுத் திரும்பி வந்துவிடுவான். 'மாமை' நிறம் கொண்ட நீ முதலில் வருத்தப்படுவதை நிறுத்து!" என்று திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்லுகிறார்கள். இதனால் அவளுக்கு தனிமை வருத்தம் இன்னும் அதிகமாகி, குவளை மலர் போன்ற கண்களில் கண்ணீர் முத்துக்கள் தேங்கி நிற்க, தனிமை வருத்தத்தில் இருந்தாள்.

"மாமை நிறம் கொண்டவளே" எனச் சொன்னபோது அவளுக்குத் துக்கம் இன்னும் அதிகமாகி இருக்கும். 'மாமை' நிறம் என்பது அழகானதாகக் கருதப்படுவது. வெள்ளையும் இல்லாமல், கறுப்பும் இல்லாமல் ஒரு அழகான நிறம். தலைவன் பிரிவால், இப்போது அவள் உடல் 'பசலை' நிறத்தை அடைந்திருக்கும்.  அவர் இல்லாமல் என் அழகும் இப்படி வீணாகப் போகிறதே என்று இன்னும் வருந்தியிருப்பாள். தலைவன் வந்து தொட்டதும், பசலை நிறம் மாறி, பழையபடியே 'மாமை' நிறம் பெற்றுவிடுவாள். ஒரு பாடலுக்குள் எத்தனை நுணுக்கங்கள்!

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்த கையள், “கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர,                      
இன்னே வருகுவர், தாயர்” என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்: அதனால்,
நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
வருதல், தலைவர், வாய்வது; நீநின்                                    
பருவரல் எவ்வம் களை, மாயோய்; என
காட்டவும் காட்டவும் காணாள், கலுழ்சிறந்து,
பூப்போல் உண்கண் புலம்புமுத்து உறைப்ப

எத்தனை ஆறுதல் சொன்னாலும் அடங்காத இந்தத் தவிப்பு, கன்றின் தவிப்பைப் போன்றது. அவளுடைய தாயுமான தலைவன்  வந்தால்தான் தீரும்.

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ