Skip to main content

அடைமழைக்குள் ஒரு குறுந்தொகைக் காதல்




இந்தக் கார்காலம் என்னை வதைக்கிறது தோழி. தோழியே கேளு! காட்டில் இருக்கிற ஆண்மான்கள் எல்லாம் மென்மையும் மடமையும் உடைய தங்களோட அழகான பெண்மான்களைத் தழுவிக் காதல் இன்பம் கொள்கின்றன. இயற்கைதான் எவ்வளவு மென்மை! அந்த மயக்கத்தில், அவையெல்லாம் காட்டிலுள்ள புதரிலே ஒடுங்கும்படியான சூழலை இந்தக் கார்காலம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. தலைவன் பிரிவு ஒருபக்கம் இருக்க, இந்தக் கார்காலமும் இயற்கையும் எனக்கு எதிராகச் சதி செய்கிறது.  

மான்கள் மட்டுமா! துதிக்கையை உடைய பெரிய ஆண்யானைகள் எல்லாம் பெண்யானைகளுடன் சேர்ந்து மேகம் சூழ்ந்திருக்கிற மலையிடத்தை அடையும்படி அடைமழை பொழியுது. இருக்கிற கவலை போதாதென்று, மேலும் துன்பம் தந்து வாட்டக்கூடிய இந்த மாலைநேரமாகப்  பார்த்தல்லவா பெய்கிறது. பொன் மாதிரி இருக்கிற என் மேனியின் நல்லழகை கெடுத்த என் தலைவர் இனியும் வராமல் விட்டால் என் உயிர் என்னாகும்! அவரால்தான் என் மேனி அழகையும் உயிரையும் மீட்டெடுக்க முடியும். நான் பசலையால் நொந்துபோய் இருக்கிறேன். அவர் வராவிட்டால் என் உயிர் நீங்கிவிடும்.  அவர் தீண்டினால் உயிர் நிறைவேன்.

அந்த மான்களுக்கும் யானைகளுக்கும்கூட,  இந்த மாரிகாலத்தில் ஒன்றுடனொன்று சேர்ந்து இன்பம்கொள்ளும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது என் மனம் எப்படிச் சும்மாயிருக்கும் தோழி! நீயே நியாயத்தைச் சொல்லு! மழைக்காலம் வருவதற்கு முதல் வந்திடுவேன்னு சொல்லீட்டுப்போன இவர் இன்னும் வரல. இளைத்துவிட்டேன். 

மானேறு மடப்பிணை தழீஇ மருள்கூர்ந்து  
கான நண்ணிய புதன்மறைந் தொடுங்கவும்  
கையுடை நன்மாப் பிடியொடு பொருந்தி  
மையணி மருங்கின் மலையகஞ் சேரவும்  
மாலை வந்தன்று மாரி மாமழை  
பொன்னேர் மேனி நன்னலஞ் சிதைத்தோர்  
இன்னும் வாரா ராயின்  
என்னாந் தோழிநம் மின்னுயிர் நிலையே.  

இந்தப் பாடல் ஒரு பெண்ணின் ஆற்றாமையைச் சொல்லுகிறது. இதேபோல கார்காலத்தில் ஒரு ஆண் தன்னுடையை ஆற்றாமையைச் சொல்லி வேண்டினால் எப்படியிருக்கும்! வேட்கையை எப்படி ஆற்றுவேன் என்று கேட்டால் எப்படியிருக்கும்! சங்கத்தமிழ் போலவே கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் தனது வரிகளில்  இயற்கையை அழைப்பது வழக்கம். 

பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரைஎல்லாம் பிணைத்துவைக்கும் கார்காலம்

இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க ?
தொடட்டுமா தொல்லை நீக்க ?

எல்லா உயிரனங்களும் மகிழ்ச்சியாக இருக்கிற கார்காலம் இது. நீ மட்டும் ஏன் பிரிந்திருக்கிறாய் எனும் ஆற்றாமை!

Comments

Athisaya said…
கார்காலங்களே எல்லாக்காலங்களிலும் ஏக்கம் கூட்டிப்போகிறது சுதர்ஷன்.
தலைவனின் ஏக்கத்தை பதிந்த தலைவரின் வரிகள் அருமை.
SUJATHA MAGESH said…
ஹ..ஹ..அருமை தோழர்.

















ன்

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒர...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...