Skip to main content

விடிந்தாலும் பெண்ணழகு!

திருமணமாகிக் கிட்டத்தட்ட நான்கரை நாட்கள் நகர்ந்திருக்கும். இன்றைய அதிகாலைப்பொழுதுவரை கணக்கில் எடுத்துக்கொண்டால் என் கணிப்புச் சரியாக இருக்கும். இருளும் ஒளியும் கலவி கொள்ளும் விடிந்தும் விடியாத பொழுது அது. காற்று அல்ல, என் தலையை அவள்தான் கோதுகிறாள். மூச்சுக்காற்று என்னவோ நெஞ்சில்த்தான் பட்டுப் படர்ந்துகொண்டிருந்தது. அதோடு அவள் விரல் வருடும் சுகமும் பிடித்திருந்தது. இன்னும் கொஞ்சம் வருடட்டுமே என்றுதான் மெதுவாகக் கண் விழித்தேன். 

நிமிர்ந்து, என் கண்களைப் பார்த்துப் புன்னகை செய்தாள். ஆமாம் உதடுகளில் புன்னகையைச் செய்துகொண்டாள். இந்த முறை உதடு மட்டும்தான் சிரிப்புக்குரிய அறிகுறிகளைக் காட்டியதே தவிர, கண்கள் சிரிக்கவில்லை. சிரிக்கும்போது  அவள் கண்கள் ஒரு குட்டி ஹைக்கூ போல இருக்கும்.  இந்தமுறை அந்தக் கண்கள் 'என்னை ஆச்சரியப்படுத்து' எனக் கேட்பதுபோல இருந்தது. அந்தக் கண்கள் இப்படித்தான் புதுமை செய்து என்னை அடிக்கடி ஆச்சரியப்படுத்தும்.

சற்றும் எதிர்பார்க்காதபோது, ' விடியும் வரை பெண்ணழகு' என்றாரே உங்க கவிஞரு என்று கேட்டாள். அதுவும் இந்த நேரம் இந்தக் கேள்வியை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. 'அதில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை' என்று சட்டென்று சொன்னேன். சொன்ன பதிலைக்கேட்டு, இந்தமுறை அவள் கண்களால் சிரித்தாள். திருப்தி அடைந்திருப்பாள் என்று நினைக்கிறேன். நான் சொன்ன பதிலுக்காக அல்ல, கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் சட்டென்று வந்த பதிலுக்காகச் சந்தோஷப்பட்டிருப்பாள். அன்பென்று வந்துவிட்டால்  இந்தப் பெண்கள்தான் எத்தனை சின்ன விஷயங்களை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்! உறங்கிவிட்டாளோ தெரியாது, ஆனால் கண்களை மூடிக்கொண்டாள். 

நான் அவளை மட்டும்தான் பார்த்துக்கொண்டிருந்தேன்.  நெருங்க நெருங்க வரும் பிரிவு பயம் வந்துவிட்டாலே இப்படிக் கேள்விகள் வரும். எவ்வளவு ஏக்கம், அன்பு, காதல் இருந்திருந்தால் அவளிடமிருந்து இப்படியொரு கேள்வி வந்திருக்கும்! காமம் தீர்ந்ததும் காதலும் தீர்ந்துவிடுமா என்கிற ஏக்கத்தில் வந்திருக்கவேண்டும். வேளைக்கு எழுந்துகொள்ளவேண்டும். நாளை முதல் நிறைய வேலை இருக்கிறது. முதலில் அவள் பயத்தைப் போக்கவேண்டும்.    

Comments

Popular posts from this blog

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...