Skip to main content

கவிப்பேரரசு வைரமுத்து: இலக்கியப்பாடல்கள்

வைரமுத்து அவர்களின் பிறந்தநாளில் இருந்து அவரைப்பற்றிய பதிவுகளையே தொடர்ந்து எழுதுகிறேன்.வெறும் பாட்டு வரியில் என்ன இருந்துவிடப் போகிறது என கடந்துபோக  முடியாதபடி, அவற்றுள் ஒருவித  இலக்கியச் சுவையை,விஞ்ஞானத்தை,தகவல்களைக் கொண்டு வந்தவர் அல்லவா!.கொண்டுவந்து சேர்த்தார்  என்பதை விட ,நமக்கு அதை அறிமுகப்படுத்த முயன்றுகொண்டிருப்பவர் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.அவரது முயற்சியை தொடர்ந்து கவனித்து வருபவர்கள் அறிந்திருப்பார்கள். சாதரணமாக அனுகிவிட்டுப் போகாதபடி புதுமையால் கட்டிவைக்கும் பாடலாசிரியர். 

வைரமுத்து அவர்கள் ,'இரண்டாம் உலகம் ' திரைப்படப் பாடல்களை வெளியிட்டு வைக்கும்போது, "இலக்கியத்தின் சாரங்களைப் பாட்டுக்குள் கொண்டுவருவதற்குத்தான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாய் முயற்சிசெய்து வருகிறேன்" என்று கூறியிருந்தார்.

அவர் இலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்டு, அவற்றை  மாற்றி எளிமையான வரிகளாகக் கொடுத்தார்.ஆனால்  இலக்கியப் பாடல்களை கொஞ்சம் கூட மாற்றாமல் நேரடியாகப் பயன்படுத்தியிருக்கிறார். கூடுதலாக ரஹ்மானுக்கு எழுதிய பாடல்களில் நேரடியான வரிகள் இடம்பெற்றிருக்கும். ஒரு சில உதாரணங்கள் மிகவும் பிரபலம்.பலருக்கும் தெரிந்திருக்கும். கவனித்த இன்னும் சில பாடல்களையும் தொகுத்திருக்கிறேன். வள்ளுவன் கூற்றுக்கிணங்க,அவர் அப்படி நேரடியாகத் தந்த ஒரு சில பாடல்களே தெரியும்.அடியேனுக்குத் தெரியாதது ஏதும் உங்களுக்குத் தெரிந்திருந்தால்/கவனித்திருந்தால்  பகிருங்கள்.

ஒரு சில பாடல்களில் காட்சியமைப்பும் அப்படியே அமைந்துவிடும். அது இயக்குனர்களின் திறமை.'திருட்டுப்பயல் படத்தில் இடம்பெற்ற 'தையத்தா தையத்தா' பாடலில்,ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியை அப்படியே பயன்படுத்தியிருப்பார்.பரத்வாஜ் இசையில் அமைந்த இந்தப் பாடலில் இரண்டாவது Interlude இல் இந்த வரிகள் இடம்பெறும். 

குங்குமம் அப்பி குளிச்சந்தம் மட்டித்து மங்கள
வீதி வலம் செய்தி மணநீர் அங்கவனோடும்
உடன்சென்ற ரங்கனை மேல் மஞ்சமாட்ட
கனாக் கண்டேன் தோழி நான்

இன்னொரு பிரபலமான பாடலும் இதே காட்சியமைப்பில் நினைவில் வருமே! 'மார்கழித் திங்கள் அல்லவா' பாடலில் ஆரம்பத்தில் திருப்பாவை அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கும்.  

சென்னியது உன்பொன் திருவடித் தாமரை, சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம், சிந்தூர வண்ணப் பெண்ணே
முன்னிய நின்னடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.

'கண்ணெதிரே தோன்றினாள்' எனும் பெயரை படத்திற்கு இட்டது குருஜி சுஜாதா என்று எங்கோ படித்ததாக நினைவு. அந்தப் படத்திற்கு வசனங்கள் அவர் தான்.அந்தப் படத்தில்  தேவா இசையில் அமைந்த 'சின்ன சின்னக் கிளியே'   பாடலில்,அதே போல இடையிசையில்,அபிராமிப்பட்டார் எழுதிய  'அபிராமி அந்தாதி' பாடல் ஒன்று இடம்பெறும்.

சென்னி -தலை , சிந்தூர வண்ணப் பெண்ணே -  சிவந்த வண்ணப் பெண்ணே. என்னவொரு ஓசை நயம் .இதெல்லாம் தமிழுக்கே உரிய சிறப்பு .ஆர்வமிருந்தால் பொருள் எல்லாம் தேடிப் படித்துக்கொள்ளுங்கள். 

ஏனைய இசையமைப்பாளர்கள் எல்லோரும் இடையிசையில் போட்டுக்கொள்கிறார்கள்.ரஹ்மான் மட்டும் ஆரம்பத்திலேயே பயன்படுத்திக்கொள்வார். 'மார்கழித் திங்கள் அல்லவா', தீண்டாய் மெய் தீண்டாய்' பாடலின் ஆரம்பத்தில் வருகிற வெள்ளிவீதியார் எழுதிய கன்றும் உண்ணாது கலத்தினும் படாது' என்கிற குறுந்தொகைப் பாடல் போன்றவற்றை உதாரணமாக சொல்லலாம். 


முழுமையாக ஒரு பாடல் அபப்டியே ஒரு பாடலாக பயன்படுத்தப்படட் இடம் என்றால் ,காதலன் படத்தில் ,  இடம்பெற்ற   'இந்திரையோ இவள் சுந்தரியோ'(திருக்குற்றாலக் குறவஞ்சி) பாடலைச் சொல்லலாம்.


இலக்கியப் பாடல்கள்ல அழகான ஓசை நயம் உண்டு. தமிழ் இனிமையான மொழினு சொல்லுகிறோம் .சாதாரண மக்களும் அதைக் கொஞ்சம் அனுபவிக்க, இது போல வரிகள் இடம்பெற  அனுமதிக்கும் இயக்குனர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.இலக்கிய வரிகளில் சிறுதும் மாற்றமில்லாமல் அப்படியே பயன்படுத்தப்பட்ட வரிகள் தான் இவை. மாற்றிப் பயன்படுத்தப்பட்ட வரிகள் என்றால் ஏராளமான உதாரணங்கள்  உண்டு.

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ