பாம்பே திரைப்படத்தில் இடம்பெற்ற, "உயிரே உயிரே" பாடலில், நாயகியின் மனமும் உடலும் நாயகனைத் தேடித் தேடி அலைவதும் உழல்வதுமாக இருப்பதுபோல் மணிரத்னம் காட்சியமைத்திருப்பார். சொல்லிவைத்து ஓவியம் தீட்டியதுபோல, இந்தப் பாடலின் காட்சி அழகுக்கும், சித்ராவின் ஜீவனுக்கும், ரஹ்மானின் இசையமைப்புக்குமிடையில் அத்துணை பொருத்தம். "நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே! என் கடுங்காவல் பல தாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே! அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே!" எப்பொழுதும் நாயகனைத் தேடி ஓடும் அவள் மனதில் ஒரு சோகம். இதயத்தில் கொஞ்சம் கனம். அது அவளுடைய அழகின் கனமாக இருக்கலாம். அல்லது அவளுடைய கட்டுப்பாடு மற்றும் கலாச்சாரத்தின் கனமாகவும் இருக்கலாம். ஆனால், அவளுடைய அழகின் கனத்தையும், அதிலொரு பகுதியான மாரழகின் கனத்தையும், தன் மனதின் கனத்தையும் அவள் தாங்கியபடி, அவனை, தன் தலைவனைத் தேடி ஓடும் அழகை உள்ளார நேசித்து அழகாய் எடுக்கவேண்டும் என்று மணிரத்னத்திற்கு எப்படித் தோன்றியிருக்கும் என்று தெரியவில்லை. அழகினைச் சுமப்பதில் துயரம் இருக்குமா? தலைவனைப் பிரிந்...