Skip to main content

கவிதாஞ்சலி‬

ஒரு பாடல் அதனுள்ளே கவிதைத்தன்மை கொண்டிருப்பது என்பது மிகவும் அரிதான விடயம். அப்படியான பாடல்கள் நிச்சயமாக என் தெரிவுகளில்(Playlist) முதலிடத்தைப் பிடித்துவிடும். பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கும்போது வார்த்தைத் தேர்வுகளில் நழுவித் தொலைந்துபோவது ஒரு சுகானுபவம். என்னைப் பொறுத்தவரைக்கும் ஒருபாடல் தரக்கூடிய அதியுச்ச சுகம் என்றால் அதுதான் என்பேன். அப்படியான பாடல்களைத் தொகுக்கவேண்டும் என்பது நீண்டநாள் விருப்பம் . கவிதைகளில் இருக்கும் மீமொழி(metalingualism) அழகு. அதாவது, இரண்டாம் அடுக்கு மொழி. ஒன்றை நேரடியாகச் சொல்லாமல் இன்னொரு கவிதை மொழி மூலம் வெளிப்படுத்துவது. அதில் கற்பனைக்கு நிறையவே வேலை இருக்கும். "கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும்வரை" என்பது போல, அந்தப் புதிருக்குள் நுழைந்து யாத்திரை செய்வது ஒருவித போதை.
உதாரணமாக, "உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது. இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது." என்கிற வைரமுத்துவின் வரிகளை எடுத்துக்கொள்ளலாம். கற்பனைச் சிறகு விரிந்தால் இதற்கு இரண்டு அல்லது மூன்று அர்த்தங்களுக்கு மேலே எழுதிவிடலாம். சாய்ந்ததில் உன் பூக்கள் உதிர்ந்து இந்தப் பூமியை நிரப்பிவிட்டன என்று சொல்லலாம். அல்லது, அந்த அழகைக் கீழிருந்து கண்ட இந்தப் பூமி சிலிர்த்து மலர்ந்தது எனலாம். இல்லாவிட்டால், பெண்ணழகு கண்டு என் இளமை எனும் பாலைவன பூமி மலர்ந்துவிட்டது என்றுகூடக் கொள்ளலாம். கவிஞர் எழுதிய பொருளையே படிப்பவரும் கொள்ளவேண்டும் எனும் விதிமுறைகள் கவிதைகளுக்குக் கிடையாது. கவிஞர் அப்படித்தான் சிந்தித்திருக்க வேண்டும் என்கிற அவசியமும் கிடையாது.
'உன்னுடன்' திரைப்படத்தில் இடம்பெற்ற, "கண்டுபிடி அவனைக் கண்டுபிடி" என்கிற பாடலிலும் அதற்கு நிகரான வரிகளைக் கவிஞர் அமைத்திருப்பார். அங்கே கம்பனை வம்புக்கு இழுத்தவர் இங்கே கம்பனே பிறக்கட்டும் என்கிறார். "மாராப்பை சரியவிட்டு உந்தன் மார்போடு படரும் கொடி. பேரின்பக் கவி எழுத கம்பன் பிறக்கட்டும் பழையபடி" என்று ஹரிணி பாடுவது கவிதையழகியலை மேலும் மேன்மைப்படுத்துகிறது. இதில் "விண்மீன் விழித்திருக்க அவன் நிலவைத் திருடியவன்" என்றொரு வரி இடம்பெற்றிருக்கும். எனக்கு அவ்வளவு பிடித்தமான வரி. இத்தனை பெண்கள் இருந்தும் அவன் என் தனிச்சிறப்பு உணர்ந்து கொள்ளை கொண்டவன் என்று அர்த்தம் கொள்ளலாம். அல்லது என் பெண்மைக்கு(நிலவு) இத்தனை காவல்கள்(விண்மீன்) நான் வைத்திருந்தும் அதைத் திருடிவிட்டான் என்றும் பொருள் கொள்ளலாம்.
"முதல் முறை திருடியதால் என்னை முழுதாய் திருடவில்லை.", "திருடிச் சென்றதை திருப்பித் தந்தால் அந்த இதயத்தை அவனுக்கே பரிசளிப்பேன்" என்கிற எளிய வரிகளில் எவ்வளவு எளிய கவிதைத்தன்மை என்று வியக்க வைக்கிறது.

இந்தப் பாடலைப் பற்றிய என்னுடைய பேஸ்புக் பதிவு இது.

Comments

Popular posts from this blog

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...