Skip to main content

Decoupled - Netflix series



Netflix இல் டிசம்பர் 17 வெளியான 'Decoupled' தொடர், எனக்கு மிகமிக சுவாரசியமான ஓர் அனுபவமாக அமைந்தது. இது எல்லோருக்குமான தொடர் இல்லை. எல்லோருக்கும் சரியாகப் புரியவேண்டும் என்பதோ பிடிக்கவேண்டும் என்பதோ இல்லை. எனக்குத் தனிப்பட மிகமிகப் பிடித்திருந்தது. பார்க்கும் நிமிடங்கள் சுவாரசியமாகக் கரைந்தது.

வசனங்களில் புத்திசாலித்தனத்துடனான நகைச்சுவை கலந்திருக்கிறது. Witty, Intellectual, சமூகத்தைப் பற்றியும் மனிதர்களின் நடத்தையைப் பற்றியும் அங்கங்கே வாள் போல ஆழமாய்க் கீறி அதை நகைச்சுவையால் மிகத் திறமையாகத் தழுவி மருந்திட்டிருக்கிறார்கள். மிகவும் இலேசான கதையோட்டத்துக்குள் நிறையக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

காதலித்து, சில வருடங்கள் இணைந்திருந்து பிரிதலுக்குத் தயாராகும் ஓர் எழுத்தாளருக்கும், பிஸினஸில் ஈடுபடும் பெண்ணுக்குமிடையிலான உறவினை அடிப்படையாகக் கொண்டு கதை நகர்கிறது.

இதில் எல்லாவற்றையும் critical thinking ஊடாக அணுகி, எல்லா நேரமும் பெரும்பான்மைச் சமூகத்தின் சிந்தனைக்கு ஏற்றபடி தன்னை அமைத்துக்கொள்ளாத ஓர் எழுத்தாளருக்கு அவளால் தொடர்ந்து துணையாக இருக்கமுடியவில்லை. ஆனால், இருவரும் பிரிதலைப் பற்றிப் பேசிக்கொண்டாலும் இருவருக்குமிடையில் இருக்கும் அந்த மேஜிக்கோ ஈர்ப்போ குறையவும் இல்லை. இருவருக்குமிடையில் நல்ல நட்பும் புரிதலும் ஒருவிதமான கெமிஸ்ட்ரியும் இருந்துகொண்டே இருப்பது போல இருக்கும். இந்தத் தொடரில் இருக்கும் அழகுகளில் அதுவும் ஒன்று.

சமூகத்தின் இரட்டை நிலைப்பாடுகளை, தங்களை அறியாமலேயே செய்யும் விடயங்களை மூர்க்கமாகவும், அதேநேரம் அதை புத்திசாலித்தனமான நகைச்சுவையூடாகவும் ஆங்காங்கே அணுகியிருப்பது எல்லாம் அழகு. இதையெல்லாம் நேரே கொடுத்தால் எல்லோரும் offend ஆகி தாங்கள் தாக்கப்படுவது போல உணர்வார்கள். ஆனால் அதை நகைச்சுவையூடாக கொடுக்கும்போது ஒருசிலர் அவற்றைச் சிந்திப்பார்கள்.

பணக்காரர்கள் மீது வெறுப்பு வைத்திருக்கும் ஒருவரை பணக்காரர்கள் அனுபவிக்கும் சூழலுக்குள் கொண்டு வருவது, எப்போதும் துக்கமான சூழலில் இருக்க விரும்புபவர்களை சீண்டுவது, தேச பக்தர்களை நையாண்டி செய்வது, நடைமுறையில் எதையும் பின்பற்றாமல் புரட்சி செய்பவர்களை சீண்டுவது என்று ஏராளம் உண்டு.

ஆகமொத்தம் தரமான, புத்திசாலித்தனமான நகைச்சுவையினை, உறவுகளின் போக்கினை, ஓர் எழுத்தாளருக்கும் பிசினஸில் ஈடுபடும் பெண்ணுக்கும், ஒரு கணவனுக்கும் மனைவிக்கும், ஒரு ரசிகைக்கும் எழுத்தாளனுக்கும், பிசினஸ் துணைகளுக்கும் இடையிலான காதலினை மகிழ்ச்சி தரும் அனுபவமாகப் பார்க்கலாம்.

 

Comments

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...