Skip to main content

அவனோடு சென்ற என் நெஞ்சே!

பாம்பே திரைப்படத்தில் இடம்பெற்ற, "உயிரே உயிரே" பாடலில், நாயகியின் மனமும் உடலும் நாயகனைத் தேடித் தேடி அலைவதும் உழல்வதுமாக இருப்பதுபோல் மணிரத்னம் காட்சியமைத்திருப்பார்.

சொல்லிவைத்து ஓவியம் தீட்டியதுபோல, இந்தப் பாடலின் காட்சி அழகுக்கும், சித்ராவின் ஜீவனுக்கும், ரஹ்மானின் இசையமைப்புக்குமிடையில் அத்துணை பொருத்தம்.


"நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே! என் கடுங்காவல் பல தாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே! அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே!"

எப்பொழுதும் நாயகனைத் தேடி ஓடும் அவள் மனதில் ஒரு சோகம். இதயத்தில்  கொஞ்சம் கனம். அது அவளுடைய அழகின் கனமாக இருக்கலாம். அல்லது அவளுடைய கட்டுப்பாடு மற்றும் கலாச்சாரத்தின் கனமாகவும் இருக்கலாம்.

ஆனால், அவளுடைய அழகின் கனத்தையும், அதிலொரு பகுதியான மாரழகின் கனத்தையும், தன் மனதின் கனத்தையும் அவள் தாங்கியபடி, அவனை, தன் தலைவனைத் தேடி ஓடும் அழகை உள்ளார நேசித்து அழகாய் எடுக்கவேண்டும் என்று மணிரத்னத்திற்கு எப்படித் தோன்றியிருக்கும் என்று தெரியவில்லை.

அழகினைச் சுமப்பதில் துயரம் இருக்குமா? தலைவனைப் பிரிந்த தலைவிக்கு, காமத்தைப் பிரிந்த தலைவிக்கு அழகும் ஒரு சுமை. மனத்தால் பிரிந்திருத்தலும் ஒரு சுமை.

சங்கப்பாடலில் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் மனமும் இப்படிக் கவலையுற்று தலைவனைத் தேடி ஓடுகிறது. ஆனால் அதை எவ்வளவு அழகான காட்சியாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும். 

"புனவர் கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞை
இருவி இருந்த குருவி வருந்துற
பந்து ஆடு மகளிரின் படர்தரும்
குன்று கெழு நாடனொடு சென்ற என் நெஞ்சே!"

தினைப்பயிர் விளைவிக்கும் நிலத்தில் உள்ள மக்கள் கொளுத்திய நெருப்புக்கு அஞ்சி, தன் புகலிடத்தை/ பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடுகிற அழகான மயில் எப்படி ஓடுகிறது தெரியுமா? கதிர்த் தட்டையில் இருந்த குருவிகளும் வருந்துகிற படி வேகமாக ஓடுகிறது. பந்தாடுகிற மகளிரைப் போல குதித்துக் குதித்துச் செல்லுகிறது. மயில் குதித்துச் செல்கிறதா அல்லது மயில் செல்லும் வேகத்தில் குருவிகள் பந்தாடுவதுபோல மாறிமாறிக் குதித்து அமருகிறதா? எதுவானாலும் நெஞ்சம் குதிக்கிறது. துயருற்று, அந்த வருத்தத்திலும் அழகாய்க் குதிக்கிறது. அதனால்தான் இப்படியொரு அழகான ஒப்பீடு. 

பெரும்பாலும் பார்க்கிறவர் கண்ணில்தான் அழகும் இருக்கிறது. இந்த ஒப்பீட்டை மாரழகோடும் அழகாக ஒப்பிட்டு ஆராதிக்கலாம்

இந்த அழகுகள் பதறுவதுபோல் என் மனமும் உடலும் மலைநாடனான என் தலைவனோடு போகிறது என்கிறாள் தலைவி.

அழகில், துயரத்தில், மயில் எப்படித் தன் அழகான தோகையைச் சுமையை சுமந்துகொண்டு போகிறதோ, அதுபோல் தன் நெஞ்சம் வருந்தித் துள்ளுகிறது. அது என் தலைவனைத் தேடி ஓடுகிறது என்கிறாள் தலைவி.

இந்த இலக்கிய நயத்தையும், மணிரத்னத்தின் இந்தக் காட்சி அழகையும் ஒப்பிடும்போது அழகு நம் நெஞ்சில் குடியேறாமல் போகுமா? காமம் கனதியிலும் அழகு எனும் சங்கதிதான் எம்முள் நிலைபெறாமல் போகுமா!

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...