Skip to main content

அவனோடு சென்ற என் நெஞ்சே!

பாம்பே திரைப்படத்தில் இடம்பெற்ற, "உயிரே உயிரே" பாடலில், நாயகியின் மனமும் உடலும் நாயகனைத் தேடித் தேடி அலைவதும் உழல்வதுமாக இருப்பதுபோல் மணிரத்னம் காட்சியமைத்திருப்பார்.

சொல்லிவைத்து ஓவியம் தீட்டியதுபோல, இந்தப் பாடலின் காட்சி அழகுக்கும், சித்ராவின் ஜீவனுக்கும், ரஹ்மானின் இசையமைப்புக்குமிடையில் அத்துணை பொருத்தம்.


"நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே! என் கடுங்காவல் பல தாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே! அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே!"

எப்பொழுதும் நாயகனைத் தேடி ஓடும் அவள் மனதில் ஒரு சோகம். இதயத்தில்  கொஞ்சம் கனம். அது அவளுடைய அழகின் கனமாக இருக்கலாம். அல்லது அவளுடைய கட்டுப்பாடு மற்றும் கலாச்சாரத்தின் கனமாகவும் இருக்கலாம்.

ஆனால், அவளுடைய அழகின் கனத்தையும், அதிலொரு பகுதியான மாரழகின் கனத்தையும், தன் மனதின் கனத்தையும் அவள் தாங்கியபடி, அவனை, தன் தலைவனைத் தேடி ஓடும் அழகை உள்ளார நேசித்து அழகாய் எடுக்கவேண்டும் என்று மணிரத்னத்திற்கு எப்படித் தோன்றியிருக்கும் என்று தெரியவில்லை.

அழகினைச் சுமப்பதில் துயரம் இருக்குமா? தலைவனைப் பிரிந்த தலைவிக்கு, காமத்தைப் பிரிந்த தலைவிக்கு அழகும் ஒரு சுமை. மனத்தால் பிரிந்திருத்தலும் ஒரு சுமை.

சங்கப்பாடலில் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் மனமும் இப்படிக் கவலையுற்று தலைவனைத் தேடி ஓடுகிறது. ஆனால் அதை எவ்வளவு அழகான காட்சியாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும். 

"புனவர் கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞை
இருவி இருந்த குருவி வருந்துற
பந்து ஆடு மகளிரின் படர்தரும்
குன்று கெழு நாடனொடு சென்ற என் நெஞ்சே!"

தினைப்பயிர் விளைவிக்கும் நிலத்தில் உள்ள மக்கள் கொளுத்திய நெருப்புக்கு அஞ்சி, தன் புகலிடத்தை/ பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடுகிற அழகான மயில் எப்படி ஓடுகிறது தெரியுமா? கதிர்த் தட்டையில் இருந்த குருவிகளும் வருந்துகிற படி வேகமாக ஓடுகிறது. பந்தாடுகிற மகளிரைப் போல குதித்துக் குதித்துச் செல்லுகிறது. மயில் குதித்துச் செல்கிறதா அல்லது மயில் செல்லும் வேகத்தில் குருவிகள் பந்தாடுவதுபோல மாறிமாறிக் குதித்து அமருகிறதா? எதுவானாலும் நெஞ்சம் குதிக்கிறது. துயருற்று, அந்த வருத்தத்திலும் அழகாய்க் குதிக்கிறது. அதனால்தான் இப்படியொரு அழகான ஒப்பீடு. 

பெரும்பாலும் பார்க்கிறவர் கண்ணில்தான் அழகும் இருக்கிறது. இந்த ஒப்பீட்டை மாரழகோடும் அழகாக ஒப்பிட்டு ஆராதிக்கலாம்

இந்த அழகுகள் பதறுவதுபோல் என் மனமும் உடலும் மலைநாடனான என் தலைவனோடு போகிறது என்கிறாள் தலைவி.

அழகில், துயரத்தில், மயில் எப்படித் தன் அழகான தோகையைச் சுமையை சுமந்துகொண்டு போகிறதோ, அதுபோல் தன் நெஞ்சம் வருந்தித் துள்ளுகிறது. அது என் தலைவனைத் தேடி ஓடுகிறது என்கிறாள் தலைவி.

இந்த இலக்கிய நயத்தையும், மணிரத்னத்தின் இந்தக் காட்சி அழகையும் ஒப்பிடும்போது அழகு நம் நெஞ்சில் குடியேறாமல் போகுமா? காமம் கனதியிலும் அழகு எனும் சங்கதிதான் எம்முள் நிலைபெறாமல் போகுமா!

Comments

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...