Skip to main content

மலரினும் மெல்லிது காமம் - சின்னம் வைத்தல்

ஓவியம் : John Fernandas 

தமிழில், பொதுவெளியில் சொல்லத்தகாத சொற்களை வேறு பொருள் கொண்டு சொல்வதை 'இடக்கரடக்கல்' என்பார்கள். 'இடக்கர்' என்றால் சொல்லத்தகாத சொல். சொல்லத்தகாத சொல்லை அடக்கிக் கூறுதல் இடக்கரடக்கல். இதைத் தகுதிச் சொல்வழக்கு என்பார்கள். இது கவிதைகளுக்குத் தனியொரு அழகைச் சுமந்துவரும்.

கவிஞர் வாலி தனது பாடல் வரிகளில் இடக்கரடக்கல் பயன்படுத்தும் விதம் இரசிக்கத்தக்கது. சிலநேரங்களில் அந்தச் சொற்பிரயோகங்களே அவற்றுக்கு உயர்ந்ததொரு நிலையைப் பெற்றுத்தரும். உதாரணமாக, "மின் வெட்டு நாளில்" என்கிற பாடலில் "பிரியாத வண்ணம் புறாக்கள் தோள் சேரும்" என்றொரு வரி வருகிறது. இரு பறவைகள் சேர்ந்து உறவு கொள்வதைச் சொல்வதற்கு பல வார்த்தைகள் இருந்தாலும், "தோள் சேர்த்தல்" என்கிற வார்த்தையில் ஒரு சிநேகமும் இணக்கமும் வெளிப்படுகிறது. காமம் அழகு பெறுகிறது.

அதேபோல, "தீ இல்லை புகை இல்லை" என்கிற பாடலில் ஒவ்வொரு வரிகளிலும்  தமிழ் அழகு செழித்திருக்கும். "முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்னச் சின்னதாய்" என்கிற வரிகள் கவனிக்கத்தக்கது. 

உறவு கொள்கையில் நகக்குறி  இடுதல், பற்கள் பதித்தல் எல்லாம் காதலின் பெறுமதிமிக்க   சின்னங்கள் என்பது   வாத்ஸ்ஸாயனர் கூற்று. ஒருவரின் இன்மையின்போது அவற்றைப் பார்த்து இரசிப்பது காதலர்களுக்கு ஆறுதல் என்று சொல்கிறார். வாத்ஸாயனர் கூற்றுப்படி,  நகக்குறி இடுதலில் எட்டு வகைகள் இருக்கிறது. பற்கள் பதிப்பதில் பத்து வகைகள் இருக்கிறது. எங்கெங்கு பதிக்கவேண்டும், எங்கெங்கு கூடாது  என்றும் இருக்கிறது. இது பயிற்சியால் செய்யவேண்டிய கலை. காயங்கள் ஏற்படுத்தாமல் தடயங்கள் மட்டும் விட்டுச் செல்லல் பயிற்ச்சியால் மட்டுமே விளையக்கூடியது. ஆழ்ந்த காதல் உணர்வை வெளிப்படுத்த இடப்படும் அடையாளங்கள். காதலின் உச்சத்துக்கு துணையால் சூட்டப்பட்ட மரியாதைச் சின்னம் என்று காதலர்கள் மகிழ்ந்து கொள்வார்கள். அதைப் பார்க்கையில் அவர்களுக்கு மீண்டும் சேர்த்துக்கொள்ளவேண்டும் எனத் தோன்றும்.

நம்முடைய கலிங்கத்துப் பரணியில் ஒரு பாடல் வருகிறது. பதிக்கப்பட்ட  அடையாளங்களை யாரும் இல்லாத நேரம் பார்த்து  பெண்கள் கண்டுகளித்து பெருமை கொள்வர் என்று சொல்கிறது பாடல்.

ஆனால் வாத்ஸாயனர் காமசூத்திரம் எழுதும்போது பெண்களின் இச்சைகளுக்கும் முன்னிலை கொடுத்தவர் என்பதால் பெண்கள் இடும் நகக்குறிகள் குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார். நம்முடைய படைப்புகளில் பெண்களின் இச்சைகளுக்கு அதிக  முக்கியத்துவம் தரப்படவில்லை என்கிற விமர்சனம் நீண்டகாலமாக இருக்கிறது. சினிமாப் பாடல் வரிகளில் வைரமுத்து வரிகள் இதை உடைத்தது.

'நகக்குறி இடுதல்' என்பதிலேயே ஒருவித உடன்பாடு இருக்கிறது. இந்தச் சின்னம் வைத்தல் என்கிற சொல்லும் அத்தனை நயமானது. 

படிப்பவர்கள், "வாங்கிக்கொண்டேன் உன்னை. ஆடை கொண்டதோ தென்னை" என்கிற வரிகளில் இருக்கும் அழகைக் கண்டறிய முனையலாம். வாலி குறும்புக்காரர். 

பகுதி 1

பகுதி 2

Comments

Popular posts from this blog

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...