Skip to main content

அச்சம் என்பது மடமையடா




கௌதமின் 'அச்சம் என்பது மடமையடா' மசாலாத் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டிருக்கிறது. 
பயணம், காதல், அதிரடி என்று மூன்றையும் இணைத்திருக்கிறார். பயணத்தில், ஊருக்கொரு காற்றின் மணம் கமழ்வதை நிதானமாக உணரமுடியவில்லை.மிக அவசரமான பயணம். எல்லாவிதமான ரசிகர்களையும் திருப்திப்படுத்த முயன்றால் எதிலுமே நிறைவு காண்பது கடிது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனாலும் இது கௌதம் மேனன் படம்தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. கௌதம் மேனன் படங்களுக்கேயுரிய, பொதுவான அடிப்படை அம்சங்கள் உள்ள திரைப்படம். 


பயணத்தில் கௌதமுக்கு எப்போதுமே ஒருவித ஈடுபாடு உண்டு. மணிரத்னத்தின் "எவனோ ஒருவன் வாசிக்கிறான்" பாடல் தந்த தாக்கத்தை வைத்தே ஒரு பத்துத் திரைப்படம் கொடுத்துவிடுவேன் என்று சொன்னவர். அவர் படங்களில் பெரும்பாலும், காதலைத் தேடிச் செல்லும் பயணமாக இருக்கும். அல்லது, ஒருவித அதிரடித் தேடல் தரும் சுகத்தினை நோக்கிய பயணமாக இருக்கும். காதல் தேடலுக்கு, "வாரணம் ஆயிரம்" மேக்னாவையும், "நீதானே என் பொன்வசந்தம்" வித்யாவையும் தேடிச்செல்லும் காட்சிகளைச் சொல்லலாம். அதேபோல,  "வாரணம் ஆயிரம்" திரைப்படத்தில் ஷங்கர்  மேனனின் குழந்தையைத் தேடிச்செல்லும் காட்சி இரண்டாவது வகைப் பயணத்துக்குப் பொருத்தமான உதாரணம். இது, காதலையும் அழைத்துக்கொண்டு அதிரடித் தேடல் தரும் சுகத்தை நோக்கிச் செல்லும் பயணம். ஆரம்பத்திலேயே தன் தங்கையைப் பார்த்து, "அவ தொந்தரவு கிடையாது.She is inspiring." என்று சொல்கிற வசனத்தின் முக்கியத்துவம் படத்தின் இறுதிவரை தொடரவேண்டும் என்பதில் கௌதம் கவனமாக இருந்திருக்கிறார். இருந்தாலும், அவள் கண்கள் பார்த்து "I wanna make love to you all the time"என்று சொல்கிற காதலுக்கான சந்தர்ப்பம் எல்லாம் இதில் கிடையாது. 

"Inspired by a moment from The Godfather" என்கிற அறிமுகத்தோடு ஆரம்பிக்கிறது திரைப்படம். படம் ஆரம்பித்துச் சில காட்சிகள் கடந்தபின், "தலைமுடிக்கும் பின் ஷேர்ட் காலருக்கும் நடுவுல தீப்பிடிக்கும். அவ என்னைப் பின்னாடிருந்து பாக்கிறாவோன்னு நினைக்கும்போதெல்லாம்..." என்றொரு வசனம். படத்தின் ஆரம்பத்தில் காட்டப்பட்ட அதிரடிக் காட்சிக்கும் இந்தக் காதலுக்கும் இடையில் என்ன என்று மனசு துருவ ஆரம்பிக்கும். ஒரு கௌதம் ரசிகனாக, அவரின் இந்த இணைப்பை வெகுவாக ரசிப்பது உண்டு. "காக்க காக்க" படத்தின் ஆரம்பம் ஒரு நல்ல உதாரணம். காயப்பட்ட அன்புச்செல்வன் நீருக்குள் வீழ்கையில் "உயிரின் உயிரே" பாடல் ஆரம்பிக்கும். அந்தப் பாடலின் வரிகள் அப்படியே ஆட்கொண்டுவிடும். "ஒரு அதிரடிப் படத்தின் ஆரம்பத்திலேயே காதல் பாடலா" என்று யோசிக்காமல் ரசிப்போம். அது மாயம். தன் இறுதிக் கணங்களில் காதலைத் தேடுகிற ஒருவனின் கண்ணீர். அதேபோல, இந்தப் படத்தில் "தள்ளிப்போகாதே" பாடலைப் பயன்படுத்தியிருக்கிற இடம் அதிஅற்புதம். திரையில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
கௌதமின் படங்கள் அதிரடியாக அமைந்தால் காதல் மெலிதாய் தலைகாட்டும். அப்படித் தலைகாட்டும் காதல், படம் முடிந்தபிறகும் இருதயத்தில் சம்மணமிட்டு அமர்ந்துகொள்ளும். மாயாவின் கண்களையும், கயல்விழியின் சிரிப்பையும், ஆராதனாவின் முகங்களையும் மறந்துவிடமுடியாது. இங்கு முதல் பாதி காதலுடன் கூடிய பயணம். இரண்டாம் பகுதியில் அதிரடியுடன் கூடிய வன்முறைக் காட்சிகள் அதிகம்.

இயக்குனர்களுக்கு உள்ளடக்கம் கொடுப்பதிலும் திரைப்படங்களுக்கு எழுதிக்கொடுப்பதிலுமேயே தனக்கு அதிக விருப்பம் என்று மஞ்சிமா சொல்வார். உண்மையில் இயக்குனர்களே கதை ,திரைக்கதை, வசனம் என்று எல்லாமும் எழுதவேண்டிய அவசியம் கிடையாது. இதன் முக்கியத்துவம் கௌதமுக்குத் தெரியாமல் இருக்காது. கௌதம், நன்றாக வசனம் எழுதக்கூடிய இன்னொருவரை உள்வாங்கிக்கொள்வது நல்லது. சில இடங்களில் ஒரே வசனங்கள் மீண்டும் மீண்டும் வருவதாகத் தோன்றுகிறது. 
இந்தப் படத்தில் முதலில் தெரிவது ஆடை வடிவமைப்பாளர் உத்தாரா மேனன். பின்னணிக் காட்சிகளுக்கேற்ற ஆடை வடிவமைப்பு. ஆனால், மேலதிக வர்ண வேலைப்பாடுகள் உள்ள ஆடைகளில் ஆர்வம் காட்டுகிற கௌதம் மேனனை என்னை அறிந்தாலில் இருந்துதான் கவனிக்க முடிகிறது. அதற்கு முதல் மணிரத்னத்துக்கு மிகப்பிடித்த நளினி ஸ்ரீராம் தான் ஆடை வடிவமைப்பாளர். எளிமையால் கவரக்கூடிய ஆடை வடிவமைப்பு நளினி ஸ்ரீராமுடையது. காக்க காக்க , வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயாவுக்குப் பிறகு கௌதமின் படங்களுக்கு அவர் ஆடை வடிவமைக்கவில்லை என்பது பெரும் இழப்பு.
விண்ணைத்தாண்டி வருவாயாவில் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவைப் பார்த்துப் பழகிய கண்கள் இன்னொரு ஒளிப்பதிவாளரை ஏற்க மறுக்கிறது.
பயணங்களில் நீளமும் விபரங்களும் இல்லை என்று தோன்றியது. எல்லாவற்றையும் திருப்திப்படுத்தப் போனால் எதையாவது இழக்கவேண்டி வரும். துல்கர் நடித்த "நீலாகாஷம், பச்சைக்கடல், சுவன்ன பூமி" படத்தையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு போகாதீர்கள். 'ராசாளி' பாடலில் ஒவ்வொரு நிலத்துக்குமுரிய வீடுகளினதும் சூழலினதும் வேறுபாட்டைக் காட்டியிருப்பார். பாடலில் வேகமாக முடிந்துவிடும் பயணம். "கொஞ்சம் பொறுங்கள்" கௌதம் என்று சொல்லத் தோன்றியது. பயணத்தின் மூலவேரே வேறுபட்ட கலாச்சாரங்களைக் கடப்பதுதான்.அந்தந்தச் சூழலைச் சேர்ந்த மனிதர்களுடன் சேர்ந்து இந்தக் காதலர்களையும் கொஞ்சம் காதல் பழகவிட்டிருக்கலாம். அழகியலின் உச்சமாக இருந்திருக்கும்."ஊருக்கொரு காற்றின் மணம் கமழ்வதை மறவேனோ" என்று எழுதிச் சொற்ப உணர்வையாவது தந்த கவிதாயினி தாமரையைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. ரஹ்மானின் பாடல்கள் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். 

தமிழ்ச் சூழலில் பயணத்தை முக்கியத்துவப்படுத்தி ஒரு படம் கொடுத்தால் வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான். நம்மைப் பொறுத்தவரைக்கும் பயணங்கள் என்பது ஒரு நல்ல ஹோட்டலில் தங்குவதும், மிகப் பிரபலமான சுற்றுலாத்தளத்தில் போயிருந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதும்தான். ஒரு நிதானமான காதலையும், உரையாடல்களுடன் கூடிய பயணத்தையும் மட்டும் வைத்துக்கொண்டு ஒரு திரைப்படம் உருவாக்கி அதை வெற்றிபெற வைப்பது கடினம். அதனால் இது ஒரு அதிரடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படமாகப் பின்நாட்களில் மாறிவிட்டதோ என்று தோன்றுகிறது. "சென்னையில் ஒரு மழைக்காலம்" என்று அழகியல் சார்ந்த தலைப்பிட்ட படம் என்னவாயிற்று கௌதம்?

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ