Skip to main content

மீனாட்சி - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்



"முத்தம் கொடுத்தாரா! கன்னத்துலையா கையிலையா"
"எங்க ரெண்டுபேருக்கு இடைல ஒன்னும் இல்லை"
"அந்தளவுக்கு டைட்டா கட்டிப்பிடிச்சாரா"
"மீனு,இது உன்னோட கவிதையும் இல்லை; காதலும் இல்லை"
"பின்ன என்ன"
"ஒரு மாதிரி நேசம்னு சொல்லலாம்"
"நேசமா ! டெட்டோல் போட்ட வார்த்தை எல்லாம் வேணாம். லவ் பண்றேன்னு பளிச்சுன்னு சொல்லு" 

Jane Austin எழுதிய "Sense & Sensibility" என்கிற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்". இருந்தாலும், அந்தந்தக் கதாப்பாத்திரங்களின் தன்மையைத்  தீர்மானிப்பதில்  சுஜாதாவின் வசனங்களின் பங்கு அதிகம். அவர் வசனத்தில் உருவான  திரைப்படங்களில் வரும் வசனங்களையும், அந்த வசனங்களின் தன்மையால் அந்தந்தக் கதாப்பாத்திரங்களுக்குக் கிடைக்கப்பெறும் பிம்பத்தையும்  கவனித்துக்கொண்டே இருக்கலாம். அந்தத் தன்மைக்காகவே இந்தத் திரைப்படத்தையும் பல தடவைகள் பார்த்துவிட்டேன். 

ஐஸ்வர்யா ராய் ஏற்று நடித்த 'மீனாட்சி' என்கிற கதாப்பாத்திரத்தில் ஒட்டியிருக்கும் சுஜாதாவின் பெண்ணை ரசித்துக்கொண்டேயிருக்கலாம். சுஜாதாவின் நாவல்களை வாசித்தவர்களுக்கு சுஜாதாவின் பெண்ணை நன்றாகத் தெரியும். தன்னைத் தானே தீர்மானித்துக்கொள்ளும் மீனாட்சி. தீர்க்கமாக முடிவெடுக்கும் பெண்களுக்கென்றே இருக்கும் ஒருவித அழகு. அந்த நிச்சயத்தன்மையாலேயே உருவானவள்.  கொஞ்சம் கவிதை, இலக்கியம் என்று கண்களில் நிறையக் கனவுகளைச் சுமப்பவள். சமூகத்தின் சாஸ்திர விதிகளையும் எண்ண ஓட்டத்தினையும் ஒதுக்கிவிட்டு நகரும் பெண்.

மீனாட்சியின் அக்காவான சௌமியா அவளுக்கு நேர்மாறானவள். "நீ இப்படியே இருந்தால் உன்னை எல்லாரும் அழவைச்சிட்டுதான் போவாங்க" என்று அக்காவுக்கு தைரியம் சொல்கிற கதாப்பாத்திரம் மீனாட்சியுடையது. அப்படிப்பட்ட மீனாட்சியின்  முடிவே  பிழையாகிறது. ஒருவன் நம்பிக்கை கொடுத்து ஏமாற்றியபோதும் அதே தைரியத்தோடு மீண்டு வருகிறாள். இப்படி எத்தனையோ உதாரணங்கள் இருந்தாலும், ஒரு காட்சியும் வசனமும் அவளுடைய கதாப்பாத்திரத்தின் அழகினை எடுத்துச்சொல்லக்கூடியது. பின்னால், அப்பாஸ் தன்னை நியாயப்படுத்திக்கொள்ள விளையும் காட்சி அவசியமற்றது என்று விமர்சனம் உண்டு. ஆனாலும் மீனாட்சியினை மீண்டும் உயர்த்தி வைக்கும் காட்சி அது.

அப்பாஸ் அவளை ஏமாற்றி இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்தபிறகு, தன்னை நியாயப்படுத்திக்கொள்ள வருகிறான். ஒவ்வொரு மனிதர்களும் தங்கள் பிழைகளைவிடத் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள விளையும்போது அதனை எதிர்கொள்வது சவாலானது. மிகவும் சௌகரியமாக பெற்றோர்கள் மீதோ, சூழ்நிலை மேலோ அல்லது அடுத்தவர்கள் மீதோ காரணங்களைச் சொல்லித் தங்களை  நியாயப்படுத்த விளைவார்கள். அவளோ நிச்சயத்தன்மை உடைய பெண். அவளை அப்படி ஏமாற்றுவது ஒன்றும் சுலபமல்ல. காருக்குள் அழைத்துவைத்துப் பேசுகிறான் . தன் வியாபாரத்தைக் காப்பாற்றிக்கொள்ளத் 'தியாகம்' செய்ததாகச் சொல்கிறான். அதற்கு அவள் சொல்லும் திடமான மறுமொழி அவளை மீண்டும் உயர்த்திவிடுகிறது. "நீ செய்தது தியாகம். ஆனா உன்னோட சேர்த்து என் எதிர்காலத்தையும் வித்த பாரு... அது பெருந் தப்பு. உனக்கு அதுக்கு எந்த உரிமையும் இல்லை" என்றுவிட்டு புறப்படுவாள்.

சஹானா ராகம், போர், இலக்கியம், காதல் என்று சுஜாதாவின் வசனங்களில் இருக்கும் அந்த versatility அழகு. அந்தந்த வசனங்களைப் பற்றி தனியாகவே எழுதலாம் . ஆனால் இந்தப் பதிவு  மீனாட்சிக்குரியது. சுஜாதாவுக்குப் பிறகு, இந்த மாதிரி வசனங்களை ரசிக்ககூடிய அளவு எழுதுபவர்கள் யாருமில்லை. 

Comments

Anonymous said…
அழகான ரசனை

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...