Skip to main content

மீனாட்சி - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்



"முத்தம் கொடுத்தாரா! கன்னத்துலையா கையிலையா"
"எங்க ரெண்டுபேருக்கு இடைல ஒன்னும் இல்லை"
"அந்தளவுக்கு டைட்டா கட்டிப்பிடிச்சாரா"
"மீனு,இது உன்னோட கவிதையும் இல்லை; காதலும் இல்லை"
"பின்ன என்ன"
"ஒரு மாதிரி நேசம்னு சொல்லலாம்"
"நேசமா ! டெட்டோல் போட்ட வார்த்தை எல்லாம் வேணாம். லவ் பண்றேன்னு பளிச்சுன்னு சொல்லு" 

Jane Austin எழுதிய "Sense & Sensibility" என்கிற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்". இருந்தாலும், அந்தந்தக் கதாப்பாத்திரங்களின் தன்மையைத்  தீர்மானிப்பதில்  சுஜாதாவின் வசனங்களின் பங்கு அதிகம். அவர் வசனத்தில் உருவான  திரைப்படங்களில் வரும் வசனங்களையும், அந்த வசனங்களின் தன்மையால் அந்தந்தக் கதாப்பாத்திரங்களுக்குக் கிடைக்கப்பெறும் பிம்பத்தையும்  கவனித்துக்கொண்டே இருக்கலாம். அந்தத் தன்மைக்காகவே இந்தத் திரைப்படத்தையும் பல தடவைகள் பார்த்துவிட்டேன். 

ஐஸ்வர்யா ராய் ஏற்று நடித்த 'மீனாட்சி' என்கிற கதாப்பாத்திரத்தில் ஒட்டியிருக்கும் சுஜாதாவின் பெண்ணை ரசித்துக்கொண்டேயிருக்கலாம். சுஜாதாவின் நாவல்களை வாசித்தவர்களுக்கு சுஜாதாவின் பெண்ணை நன்றாகத் தெரியும். தன்னைத் தானே தீர்மானித்துக்கொள்ளும் மீனாட்சி. தீர்க்கமாக முடிவெடுக்கும் பெண்களுக்கென்றே இருக்கும் ஒருவித அழகு. அந்த நிச்சயத்தன்மையாலேயே உருவானவள்.  கொஞ்சம் கவிதை, இலக்கியம் என்று கண்களில் நிறையக் கனவுகளைச் சுமப்பவள். சமூகத்தின் சாஸ்திர விதிகளையும் எண்ண ஓட்டத்தினையும் ஒதுக்கிவிட்டு நகரும் பெண்.

மீனாட்சியின் அக்காவான சௌமியா அவளுக்கு நேர்மாறானவள். "நீ இப்படியே இருந்தால் உன்னை எல்லாரும் அழவைச்சிட்டுதான் போவாங்க" என்று அக்காவுக்கு தைரியம் சொல்கிற கதாப்பாத்திரம் மீனாட்சியுடையது. அப்படிப்பட்ட மீனாட்சியின்  முடிவே  பிழையாகிறது. ஒருவன் நம்பிக்கை கொடுத்து ஏமாற்றியபோதும் அதே தைரியத்தோடு மீண்டு வருகிறாள். இப்படி எத்தனையோ உதாரணங்கள் இருந்தாலும், ஒரு காட்சியும் வசனமும் அவளுடைய கதாப்பாத்திரத்தின் அழகினை எடுத்துச்சொல்லக்கூடியது. பின்னால், அப்பாஸ் தன்னை நியாயப்படுத்திக்கொள்ள விளையும் காட்சி அவசியமற்றது என்று விமர்சனம் உண்டு. ஆனாலும் மீனாட்சியினை மீண்டும் உயர்த்தி வைக்கும் காட்சி அது.

அப்பாஸ் அவளை ஏமாற்றி இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்தபிறகு, தன்னை நியாயப்படுத்திக்கொள்ள வருகிறான். ஒவ்வொரு மனிதர்களும் தங்கள் பிழைகளைவிடத் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள விளையும்போது அதனை எதிர்கொள்வது சவாலானது. மிகவும் சௌகரியமாக பெற்றோர்கள் மீதோ, சூழ்நிலை மேலோ அல்லது அடுத்தவர்கள் மீதோ காரணங்களைச் சொல்லித் தங்களை  நியாயப்படுத்த விளைவார்கள். அவளோ நிச்சயத்தன்மை உடைய பெண். அவளை அப்படி ஏமாற்றுவது ஒன்றும் சுலபமல்ல. காருக்குள் அழைத்துவைத்துப் பேசுகிறான் . தன் வியாபாரத்தைக் காப்பாற்றிக்கொள்ளத் 'தியாகம்' செய்ததாகச் சொல்கிறான். அதற்கு அவள் சொல்லும் திடமான மறுமொழி அவளை மீண்டும் உயர்த்திவிடுகிறது. "நீ செய்தது தியாகம். ஆனா உன்னோட சேர்த்து என் எதிர்காலத்தையும் வித்த பாரு... அது பெருந் தப்பு. உனக்கு அதுக்கு எந்த உரிமையும் இல்லை" என்றுவிட்டு புறப்படுவாள்.

சஹானா ராகம், போர், இலக்கியம், காதல் என்று சுஜாதாவின் வசனங்களில் இருக்கும் அந்த versatility அழகு. அந்தந்த வசனங்களைப் பற்றி தனியாகவே எழுதலாம் . ஆனால் இந்தப் பதிவு  மீனாட்சிக்குரியது. சுஜாதாவுக்குப் பிறகு, இந்த மாதிரி வசனங்களை ரசிக்ககூடிய அளவு எழுதுபவர்கள் யாருமில்லை. 

Comments

Anonymous said…
அழகான ரசனை

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...