Skip to main content

ஒரு நாள் கூத்து


நாம் தினமும் யாரையாவது கெட்டவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொண்டிருப்பதில்லை. எதனையும் திருத்த முற்படுவதில்லை. ஒவ்வொரு சிறிய தீர்மானத்தின்போதும் எங்களைச் சுற்றி இந்தச் சமூகம் கட்டமைத்திருக்கிற விதிமுறைகளையும் சிந்தனைத் திணிப்புகளையும் வைத்துக்கொண்டு எங்கள் சுயத்துடன் போராடிக்கொண்டிருக்கிறோம். சிலநேரங்களில் எங்களை எங்களிடமிருந்தே காப்பாற்றிக்கொள்ள முடிவதில்லை. எங்கள் முடிவுகளே எங்களைக் கைவிட்டுவிடுவது உண்டு. இவற்றைப் பற்றிய புரிதல் இருந்தால் வாழ்வு மகிழ்ச்சியாய் அமையும். இல்லையேல் சதாகாலமும் இன்பத்தைத் தேடி வாழவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவோம். இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது காதலும் திருமணச் சந்தையும்தான். இதை "ஒரு நாள் கூத்து" திரைப்படம் முழுவதுமாகச் சொல்ல முற்பட்டிருக்கிறது. பெண்களுக்காகப் புரட்சி செய்கிறேன் என்று வலிந்து காட்சிகளைத் திணிக்காமல் போகிற போக்கிலேயே நிறைய விஷயங்களைச் சொல்லிச் செல்கிறது. இந்தப் படத்தில் வருகிறவர்களிடம் திடமான மனநிலை இல்லை.அதேநேரம் திருப்திகரமான மனநிலையும் இல்லை. இது பெரும்பாலானோரின் இயல்பான மனநிலை. ரித்விகாவை பெண் பார்த்தவன், அவளை மணந்துகொள்ளச் சம்மதிக்கிறான். ஒருநாள் வேறொரு திருமணம்செய்துகொள்ளப்போகிற புதிய ஜோடி அவனுக்குத் திருமண அழைப்பிதழ் கொடுக்க வருகிறார்கள். தன் நண்பன் திருமணம் செய்துகொள்ளப்போகிற பெண் அழகாயிருப்பதைக் கவனிக்கிறான். அவள் படிப்பில் நிறையப் பட்டங்கள் பெற்றவள் என்பதையும் கவனிக்கிறான். உடனே தான் மணந்துகொள்ளப்போகிற ரித்விகாவின் புகைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து இவள் அழகிதானா எனச் சிந்திக்கிறான். ஒப்பிட ஆரம்பிக்கிறான். அவள் வெறும் வானொலி அறிவிப்பாளர். அவளுக்கு எந்தவிதமான சிறந்த கல்வித்தகுதியும் இல்லை என்பதைக் கவனிக்கிறான். மனக் குழப்பத்தில் நிற்கிறான். அப்போது ஒருவரிடம் அறிவுரை கேட்கிறான். "பிடிக்கலன்னா கல்யாணத்தை நிறுத்திடலாம். அது அந்தப் பொண்ணுக்கு நல்லது. இப்போ கல்யாணம் செஞ்சுக்குவீங்க. அப்புறம் அவ செய்கிற ஒவ்வொரு விஷயமும் எரிச்சலைத்தரும்" என்று சொல்கிற வசனம் அவ்வளவு நுணுக்கமானது. இப்படிச் சகித்துக்கொண்டு செய்யப்படும் திருமணங்கள் பின்நாட்களின் நிறையப் பிரச்சனைகளைத் தோற்றுவிப்பது உண்டு. ரித்விகா பின்னர் இன்னொருவனைக் காதலிக்கிறாள். அவனும் தன் சௌகரியத்திற்குத் தகுந்தாற்போல வேறொரு திருமணம் அமைந்ததும் அதை ஒப்புக்கொள்கிறான். காதலித்துக்கொண்டிருக்கும் காவ்யாவும் ராஜ்குமாரும் மனம்விட்டுப் பேசவில்லை. அவனால் தன் பொருளாதார நிலையைச் சீர் செய்யாமல் அவளைத் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை. கொஞ்சம் கால அவகாசம் கேட்கிறான். இந்த இடைவேளியைப் பயன்படுத்திக்கொள்ளும் காவ்யாவின் தந்தை காவ்யாவுக்கு வேறொரு வசதியான இடத்தில் மாப்பிளை பார்த்துவிட்டு அவளுக்கு அறிவுரை வழங்குகிறார். இதைக் கேட்டதும் அவளுக்கு மனக்குழப்பம் ஏற்படுகிறது. இதைச் சரியாச் சீர்செய்துகொள்ள முடியாததால் இருவரும் பிரிகிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் மனம் விட்டுப் பேசுகிறார்கள். ஆனால் அது காலம்கடந்த பேச்சாகி விடுகிறது. இருவரும் ஒருவரையொருவர் இழந்துவிட்டதை நினைத்துப் பின்னர் வருந்துகிறார்கள். லக்ஷ்மியின் தந்தை அவரின் தகுதிக்கு ஏற்ற மாப்பிளையைத் தேடுவதால் அவள் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டேயிருக்கிறது. இத்தனைக்கும் திருமணம் செய்துகொள்ளப்போகிறவள் அவள். இப்படியான மூன்றாம் நிலைக் காரணிகளாலும் காதலும் திருமணச் சந்தையும் பாதிக்கப்படுவதையும் இந்தத் திரைப்படம் சொல்கிறது. எங்கள் கலாச்சாரத்தில் காதலும் திருமணமும் எப்படி முடிவு செய்யப்படுகிறதென்பதை நகுலனும் தன் கதை ஒன்றில் இப்படிச் சொல்கிறார்: "காதலைப் பற்றி என் விசாரணை தொடர்ந்தது. குடும்பத்தின் நிலையை அறிந்து, அப்பா, அம்மா செல்வாக்கிற்காக, ஆரோக்கிய ரூபத்திற்காக, அடிப்படை அவசியங்களுக்காக ஒரு துணையைத்தான் நாம் நாடுகிறோம். ஆணும் பெண்ணும் இருதனி விசேஷந்தாங்கிய கொள்கை ரூபம் பெற்ற, காதல் பெற்று வாழும் முயற்சி இந்நாட்டில் இல்லை"


Comments

Haran said…
மிக நேர்த்தியாக திரைக்கதை எடுத்தாளப் பட்டிருக்கும்.. கதையின் பிரதான பாத்திரங்கள் மூன்றிற்கும் திருமணம் ஆகிருக்காது கடைசிவரை.. அவர்களுக்கு துணையாக வரும் சப்போர்டிங் பாத்திரங்கள் எல்லாருக்கும் திருமணம் ஆகிவிடும்.. வலிந்து திணிக்காமல் உண்மைநிலைக்கு மிக்கப்பக்கத்தில் உள்ள வெளியில் படம் பயணிக்கிறது. அதில் எனக்கு ராஜ்குமார் பாத்திரம் என்னை பிரதிபலித்ததாகத் தோன்றியது. அந்த குடும்ப சூழல்.. ஒரு தாழ்வு மனப்பான்மையைச் சுற்றி அலங்கரிக்கப்பட்ட ஆடம்பரம்..போன்றவை.
ஒரு வாழ்வு முறைகளில் தலைமுறைகள் முன்னோக்கி செல்லும் ஒரு மேம்பட்ட குடும்பத்திலிருந்து வளர்ந்த பொண்ணை காதலிக்கிறார்.. எல்லா இடங்களிலும் ரியாலிட்டியை விட்டுக்கொடுக்காத இயக்குனர் இங்கு மட்டும் கொஞ்சம் சினிமாத்தனம் காட்டிவிட்டார்.. இதே காரணங்களுக்காக காதலிக்காமல் இருக்கும் நண்பர்கள் நிறைய எனக்கு தெரியும்.நானும் அத்தகையோனே.. உணக்கெதுக்குடா தேவ இல்லாத வேலைன்னு திட்டிக்கொண்டே படம் பார்த்து முடித்தேன்..
சிறப்பான வரிகள். திரைப்பட விமர்சனமாக மட்டுமல்லாமல் நிகழ்காலத்தை படம்பிடித்துக் காட்டிய எழுத்துக்களுக்கு வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ