Skip to main content

கவிதாஞ்சலி 5

மணிரத்னத்தின் 'இராவணன்' திரைப்படத்தில் வீரா(இராவணன்) ஒரு மிகப்பெரிய கூட்டத்துக்குத் தலைவன். மிகுந்த பலசாலி. இந்த இராவணனுக்குக் காதல் வருகிறது.  "உசுரே போகுதே" என்கிற பாடல் காதல் வசப்பட்ட அவனது மனநிலையைச் சொல்கிறது. அதன் துடிப்பைச் சொல்கிறது. அவ்வளவு திறமையான ஒரு மகாவீரன் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டு தன்னிலை மறந்துபோகிறான். காதல் எதனையும் பொருட்படுத்துவதில்லை என்று சொல்லுவார்கள். இங்கே அவன் நிலையையே  அவன் பொருட்படுத்தவில்லை. என்னை இந்தப் பெண் வருத்துகிறாளே என்று அவன் சொல்கிறபடி பாடல் அமைகிறது.

இதேபோல குறுந்தொகையில் தலைவனுக்குக் குழப்பம் வருகிறது. வருகிற வழியில் "உனக்கு என்ன ஆச்சு"ன்னு பாங்கன் கேட்கத் தலைவன் இப்படிச் சொல்கிறான்.
"வெள்ளைப் பாம்போட சின்னக் குட்டிப் பாம்பு இருக்கே! அதுக்கு உடம்பெல்லாம் வரி வரியா இருக்கும். ரொம்பச் சின்னது. ஒரு பெரிய காட்டு யானைகூட அதைப் பாத்துச்சுன்னா நிலைகுலைந்து போய்டும் ! அதுபோல இந்த இளையவளின் நாணல் முளை போன்ற ஒளிரும் பற்களும் வளைக்கரங்களும் இத்தனை படைகள் வென்ற என்னை நிலைகுலையைச் செய்கிறதே!" என்கிறான். அவள் இளமையும் வளையல்களும் பாம்பின் இளமைக்கும் வரிகளுக்கும் ஒப்பிடப்படுகிறது. இப்படியாக அவளுடைய சிறிய பாகங்களும் என்னை வறுத்துகிறதே என்று அவன் சொல்கிறான்.
பாடல் :
சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கியாஅங்கு
இளையள், முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையள் எம் அணங்கியோளே

இப்படியான ஒப்பீடுகளை வைரமுத்துவின் வரிகளில் அதிகம் கவனிக்கலாம். உதாரணமாக , "என் ஆறடி உயரத்தை அபகரித்தாய் உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்", " கூந்தல் நெழிவில் எழில்கோலச் சரிவில் என் கர்வம் அழிந்ததடி" போன்ற வரிகளைக் குறிப்பிடலாம். வைரமுத்துவின் வரிகளில் பெண்கள் ஆண்களின் கர்வத்தை அடக்கிவிடுவார்கள்.  ஆனால், " உசுரே போகுதே" என்கிற  பாடலிலும் "காட்டுச் சிறுக்கி"யிலும் இப்படியான ஒப்பீடுகள் அதிகம். இராவணன் ஒரு பெரிய படைத்தலைவன். அவனுக்குக் காதல் வந்தால் எப்படியிருக்கும் என்று எழுதுகிறார் வைரமுத்து. அவள் ஏற்கனவே திருமணமான பெண். ஆதலால்  இந்தக் காதல் பிழையானது, ஆபத்தானது என்றும் அவனுக்குத் தெரியும். இருந்தும் அவளுடைய சின்ன பாகங்களின் அசைவுகளும் அவனை வருத்துகிறது.

அடி தேக்கு மரக்காடு பெருசுதான் சின்னத் தீக்குச்சி உசரம் சிறுசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி
உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே

குறுந்தொகையில் தலைவன் அவளைச் சிறிய பாம்போடு ஒப்பிடுகிறான். பாம்பைக் கண்டு யானை அஞ்சுகிறது. அதேபோல இவனுக்கும் அச்சம். காரணம், இந்தக் காதல் பிழையானது என்பதை அவன் அறிவான். இருந்தாலும் இந்தக் காதல் மயக்கம்  இவனை அச்சம் கொள்ள வைக்காமல் வழிதவறிச்செல்லச் சொல்கிறது. இதை "பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே! பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே" என்று வைரமுத்து தன் வரிகளில் வடித்திருப்பார். 

Comments

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...