Skip to main content

மலரினும் மெலிது காமம் - ஞயம்பட உரை.




உலகினில் மென்மையானதும் உயர்வானதும் மலர். அந்த மலரிலும் மென்மையானது காமம். அத்தகைய உயர்வான காமத்திலிருந்து மென்மையை அகற்றிவிட்டால்  காமத்தில் உண்மையான மகிழ்ச்சி கிட்டாது. அவ்வின்பத்தைத் துய்க்க முடியாது. இதன் மென்தன்மை உணர்ந்து  முழுமையான பயன், நுட்பம், நயம் எல்லாவற்றையும் அறிந்து அனுபவிக்கக்கூடியவர்கள் சிலரே என்பது வள்ளுவன் கூற்று. அப்படிப்பட்ட உயர்வான காமத்தை ஞயம்பட உரைப்பது அவசியம். இதிலிருந்து தவறாதவை சங்க இலக்கியப் பாடல்கள்.

"மலரினும் மெல்லிது காமம் 
சிலர் அதன் செவ்வி தலைப்படுவார்" 

இரு உள்ளங்களின் முழுதான ஒத்திசைவு இல்லாதவரை காமம் நிறைவு காண்பதில்லை. அப்படி இரு உள்ளங்களின் ஒத்திசைவோடு நிகழ்கிற காமம் மட்டுமே நீடித்து நிலைக்கும். பொருந்தும் போதெல்லாம் ஒவ்வொரு தீண்டலிலும்  உயிர் தொடவேண்டும். காமம் என்பது, நூல்களைக் கற்கக் கற்க எப்படி அறியாமை எண்ணம் தோன்றுமோ அதுபோல தீராதது. பெருகிக்கொண்டே செல்லவேண்டும்.

"அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் 
செறிதோறும் சேயிழை மாட்டு"

காம உணர்வு மிகவும் நுண்ணியது (ஐதே காமம்) என்கிறது ஒரு குறுந்தொகைப் பாடல். இந்தப் பதிவில்  'முயங்குதல்' என்கிற சொல் பற்றிப் பேசலாம். தழுவுதல், புணர்தல் அல்லது பொருந்துதல் எனும் பொருள் அனைத்தும் ஒருசேர அமைந்த சொல். இதை ஒரு குறிஞ்சிப் பாடல் மிகு காமத்தோடு சொல்கிறது. தலைவியுடன் கூடிவிட்டு வரும்  தலைவன், அவள் தந்த இன்ப மிகுதியைத் தன்  நெஞ்சுக்கு உரைப்பதாய் அமைகிறது இந்தப் பாடல்.

பலரறி வுறுதல் அஞ்சிப் பைப்பய
நீர்த்திரள் கடுக்கும் மாசில் வெள்ளிச்
சூர்ப்புறு கோல்வளை செறித்த முன்கைக்
குறையறல் அன்ன இரும்பல் கூந்தல்
இடனில் சிறுபுறத் திழையொடு துயல்வரக்
கடல்மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து
உருவுகிளர் ஏர்வினைப் பொலிந்த பாவை
இயல்கற் றன்ன ஒதுக்கினள் வந்து
பெயலலைக் கலங்கிய மலைப்பூங் கோதை
இயலெறி பொன்னிற் கொங்குசோர்பு உறைப்பத்
தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்
வடிப்புறு நரம்பில் தீவிய மொழிந்தே.

போர் வெற்றியின்பின் ஒள்வாள் அமலை எனப்படும் வெற்றிக்கூத்து ஆடப்படுகிறது. அந்நேரம், இரவில் காதலர்கள் சந்திக்கும் இடத்தில் சந்தித்துக்கொண்டோம். யாரும் கண்டு புறங்கூறிவிடுவார்களோ என்று அஞ்சி மிக மெதுவாக அடியெடுத்து அவள் வந்தாள். நீரின் திரள் போல வந்தாள். வெள்ளியினாலான வளைவு பொருந்திய வளைகளைத் தன் கைகளில் அணிந்திருந்தாள். கருமணல் போன்ற கரிய கூந்தல் பிடரியில் அசைய வந்தாள். கடல் மீன்களும் உறங்கும் நள்ளென்ற சாமம். மிகுந்த அழகுடன் செய்யப்பட்ட பாவை போன்றவள், அப்போதுதான் நடக்கக் கற்றுக்கொண்டவள் போல வந்தாள். 

மழையால் அலைக்கப்பட்ட மலைப்பூக்களைப் போலப் பதமாகவும், கொல்லன் உலைக்களத்தில் நின்று அடிக்கையில் தெறித்து விழும் பொன்தூளைப் போலவும், தேன்துளி சிந்த, யாழின் நரம்பிலிருந்து வரும் ஒலிபோல் இனிய மொழிகளைக் கூறிக்கொண்டே தன் மார்பின் கண்கள் இவன் நெஞ்சில் அழுந்தும்படி அழுத்தி அணைத்துக்கொண்டாள்.

"தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்"

Comments

ANNAI KURAL said…
மலரினும் மெல்லிய காமம்
அனிச்சம் மலர் அன்ன பறவை
கலிங்கத்து பரணி தொடங்கி
யுகபாரதி வரை . . . . .
அருமை
சங்க இலக்கியம் கற்போம் .....

Popular posts from this blog

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...