Skip to main content

கண்ணதாசன்

கம்பராமாயணத்தில் வருகிற வரைக்காட்சிப்  படலத்தில் "பானல் அம் கண்கள் ஆட. பவள வாய் முறுவல் ஆட" என்று  ஒரு அழகான பாடல். சந்திர சயிலத்தில் பெண்கள் ஊஞ்சல் ஆடுகிறார்கள். அப்போது என்னவெல்லாம் அசைகிறது எனக் கம்பன் சொல்லுகிறார்.  இதைப் படிக்கும்போது கண்ணதாசன் எழுதிய "கட்டோடு குழலாட ஆட" என்கிற பாடலின் வரிகள் நினைவுக்கு வந்தது. வாசிக்கும்போதே இனிக்கிறது. இரண்டு தோழிகள் நடனமாடிகொண்டும் சுதந்திரமாகப் பாடிக்கொண்டும்  போவதுபோல அமைந்த  பாடல். அப்படிப் போகிறபோது என்னவெல்லாம் ஆடுகிறது என்று சொல்லும் பாட்டு. கண்ணதாசனின் சொற்கள்கூட கொடிபோல ஆடும்.

கண்ணதாசனின் இந்தப் பாடலை  எல்லோரும் மாணிக்கவாசகர் இயற்றிய  திருவெம்பாவைப் பாடலுடன் ஒப்பிடுவார்கள். ஒருசில வரிகளை மட்டுமே ஒப்பிடமுடியும். பெண்கள் நீரினைக்  குடைந்தாடும்பொழுது என்னவெல்லாம் அசைகிறது எனச் சொல்லும் திருவெண்பாவைப் பாடல்.

//காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாட// இதனைப் பிரித்து எழுதினால் இப்படி அமையும்.

காது ஆர் குழை ஆட
பைம்பூண் கலன் ஆட
கோதை குழல் ஆட
வண்டின் குழாம் ஆட

பெண்ணானவள்  நீரினில் இறங்கிக் குளிக்கும்போது காதில் பொருந்திய குழைகளுடன் சேர்ந்து பொன்னாலான அணிகலன்களும் ஆடுகின்றன. அவளுடைய கூந்தல் ஆடுகிறது. அதனால் அதிலுள்ள மாலை அசைகிறது. அவர்கள் மூழ்கும்பொழுது அதிலிருக்கிற வண்டுகள் எல்லாம் எழுந்து ஆடுகின்றன.

ஆனால் கண்ணதாசன் மேலதிகமாக கிராமியப் பாடலுக்குரிய சொற்களைப் பயன்படுத்தியிருப்பார்.

பச்சரிசிப் பல்லாட பம்பரத்து நாவாட
முதிராத நெல்லாட ஆட
முளைக்காத சொல்லாட ஆட
உதிராத மலராட ஆட
சதிராடு தமிழே நீ ஆடு

பெண்கள் ஊஞ்சல் ஆடும்பொழுது என்னவெல்லாம் அசைகிறது எனக் கவிச்சக்கரவர்த்தி கம்பன் சொல்லுகிறார்.

பானல் அம் கண்கள் ஆட
பவள வாய் முறுவல் ஆட
பீன வெம் முலையின் இட்ட
பெரு விலை ஆரம் ஆட
தேன் முரன்று அளகத்து ஆட
திரு மணிக் குழைகள் ஆட

தசரதனும் அவனது படைகளும் சந்திர சயிலத்தில் கண்ட காட்சிகள் இவை. 

Comments

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...