Skip to main content

Tweets - கண்மணியாள்



எழுதிய சில டுவீட்களின் தொகுப்பு...

குழல்காடு குலைந்தலைய நின் நன்னுதல் சிறுநிலா ஒளி அருந்தி யாசகம் கேட்கையில் இருகரை காணாது என் உள்ளக் காட்டாறு.

மென் குழலடுக்கில் சிதறிய வெண்தோட்டு மல்லிகையும் நின் மார்பணிக்குள் இடறி உருளும் நல் முத்தும்  உன் பெயரின் ஒரு பாதி அழகை உச்சரிக்கக்கூடும்.

தாயன்பு கொண்டு   உச்சந்தலை நுகர்ந்து "கடலிலே விடம் தேடு" என்று நீ மதுரமொழி உரைத்தபோதே  செவியின்பம் கொண்டேன்.

இதோ உன் இதழ்களுக்கு மோட்சமென்று  கனிவாய்  உன் பொற்பதம் உயர்த்தித் தருகையில் சென்னியது உன் கர்வம் என்றறிந்தேன்.

உதிரும் ஒற்றைச் சிறகில் உன் பார்வை தவமிருக்கும் அழகைவிட ஒரு பறவையின் பறத்தலில் என்ன இருந்துவிடப்போகிறது!

பள்ளிக்குழந்தைகள் ஒருமித்து ஒப்பிக்கும் தேவார சந்தம் போல முத்தாடும் உன் சிரிப்பு.

விழாக்கோலம் பூணும் வானத்தை ஒற்றைக் கண்ணால் பார்த்தபடியே முத்தங்கள் பரிமாறிக்கொள்வோம். அதில் ஒரே நிறத்தைத் தேர்ந்தெடுக்கும் ரகசியங்கள் கற்போம்.

குழல் ஊதும் தோரணையில் உன் கைகளைப் பிடித்து முத்தமிடுகையில் படபடக்கும் உன் பட்டாம்பூச்சி விரல்களின் மென்பாரம்கூடத் தாளவில்லை.



உன் கூந்தல் மேவி நான் உதிர்த்த சொற்களை நீ அள்ளி முடியும் காலை அழகுக்கு இரட்டைக் குயிலின் ஓசைகளையும் மிச்ச விண்மீன்களையும் எழுதித் தரலாம்.

ஒற்றைப் பூக்களைப் பறித்துக்கொடுக்கச் சொல்கிறது காதல். தேவி உன்னைப் பூவுதிரும் மரங்களுக்குக் கீழே நிறுத்தச் சொல்கிறது காமம்.

"உன் இரசனைகள் பிடிக்கும்" என்று நீ சொன்னதை விடவும் உன்னையும் ரசிக்க வைத்துவிடவேண்டும் என நீ எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் மீது காதல் எனக்கு

மஞ்சத்தில் உன்னைச் சிறைப்பிடிக்க உன் மீதிருக்கும் வேட்கை ஒன்றே எனக்குப்போதும். இருந்தும் உன் கண்கள் தேடும் காதல் மீதுதான் எனக்குப் பிரியம்.

உன் கவிதைகள் எனக்கொரு பொருட்டல்ல என்று நீ சொன்னபிறகும், அதைப் புலம்பித் தீர்க்க ஒற்றைக் கவிதைக்கு வார்த்தை தேடி அலைவதுதான் என் காதல்.

சிலநொடி மௌன தேவதையாகி நீ கேட்கும் தீரா வரங்களெல்லாம் என் செவிகளிலிருந்து நீங்குவதேயில்லை.

பறித்துக்கொண்ட அத்தனை உயர்வான மலர்களையும் சாமிக்கு வைத்துவிடும் ஓர் அழகிக்காக வாய்மூடி அழும் மொட்டுகளின் சலசலப்பில் உன் பெயர் கேட்கிறேன்.

உற்சவதேவி உனது தேக சுவாசத்தைக் கொண்டாடித் தீர்ப்பவைதான் மிச்சம் மீதமின்றிக் காலையில் நான் தரும் மென்முத்தங்கள்.

கொஞ்சம் கைகோர்த்து நட.
வானத்துக்கு மாதங்களை அடைமொழியாக வைக்கலாம். வஞ்சனையில்லாத மனிதரின் தெருக்களுக்குப் போகலாம்.
வானவில்லின் மிகுதி அரைவட்டம் தேடித் திளைக்கலாம் 
வற்றாத நதியோடு  ஓடி நாணலில் ஓய்வெடுப்போம் 
கொஞ்சம் கைகோர்த்து நட...

உனக்காக நீல நிறக் கூழாங்கற்களை விழுங்கிய  ஒருசில வெள்ளை நதிகள்கூட  பார்த்து வைத்திருக்கிறேன்.அவசர யுகத்தின் சொந்தக்காரி போலே எங்கே ஓடுகிறாய்

செவி சாய்த்துக் கேட்டால் உனது காதோர வெப்பம் மட்டும் போதுமென்று சொல்லக்கூடும் என் இருதய அறைகள்.

அவள் குழலை மிருதுவாய்க் கொத்தாகப் பற்றுவது  என்பது அத்தனை நகரும் இரவுகளையும் துயரங்களையும் தொகுத்துக் கவிதை சேர்ப்பது போன்றது.

காற்றும் முகராத விரலிடைப் பற்றுதல்கள் போதும். உன்னோடு உலாவுவது வெறும் எண்ணக்காடுகளாக  இருந்தாலும்  எனக்குச் சம்மதம்தான்.

Comments

Anonymous said…
நன்றாக உள்ளது

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ