Skip to main content

முத்தாடு: முத்த இலக்கணம்





கவிஞர் வைரமுத்து எழுதிய "சுத்தி சுத்தி வந்தீக" என்கிற பாடல் காதலோடு இயைந்த காமத்தை அழகியலாக உரைக்கும். "முத்தாடும் ஆசை முத்திப்போக" என்றுவிட்டு, எங்கெல்லாம் முத்தமிட்டுக்கொள்வோம் என, அன்பானவர்கள் உரையாடிக்கொள்வதுபோல  எழுதியிருப்பார்.

என் காது கடிக்கும் பல்லுக்கு 
காயம் கொடுக்கும் வளைவிக்கு 
மார்பு மிதிக்கும் காலுக்கு 
முத்தம் தருவேன்  

மார்பு மிதிக்கும் காலுக்கு முத்தம் தருவது என்பது காதலைத் தொழும் வகையைச் சார்ந்தது. "உன் உடல் மீதும், உன் உயிர் மீதும் மரியாதை வைத்து உன்னைத் தொழுகிறேன். இத்தனை காலமும் உன்னைச் சுமந்த பாதங்கள் மீது எனக்குக் காதல்." என்று சொல்லாமல் சொல்வதுதான் பாத முத்தம். ஆனால், காது கடிக்கும் பற்களுக்கு ஏன் முத்தம் தரவேண்டும்! வெறுமனே, இதழ்கள் உரசிக்கொள்வது மட்டுமே  முத்தத்திற்கு இலக்கணம் ஆகாது என்கிறது நம் இலக்கியங்கள்.

இலக்கியம் கூறும் முத்தத்திலேயே பலவகை உண்டு. "சிவந்த உன் கடைக்கண் பார்வையையும் உன் கூரிய பற்களிலே ஊறும் நீரினையும் சுவைக்காமல் உன்னுடைய அன்புக்குரியவனால் இருக்க முடியாது. விரைவில் உன்னைத் தேடி வருவான்" என்று தோழி தலைவிக்கு ஆறுதல் சொல்வதாக ஒரு அகநானூற்றுப் பாடல் சொல்கிறது.

"கடை சிவந்து ஐய அமர்த்த உண்கண் நின் வை ஏர் வால் எயிறு ஊறிய நீர்"

இதையே வள்ளுவன், "பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்" என்று சொல்லுகிறார். அதாவது, செல்ல மொழி பேசுபவளின் பற்களில் ஊறிய நீரின் சுவை, தேனோடு பால் கலந்தாற்போல இருக்கும் என்கிறார். அவள் உச்சரிக்கும் மொழியை உண்பது போலல்லவா ஆழமான முத்தம் இது. முத்தமென்பது உயிர் உண்ணவேண்டும். உயிர்க் காதல் இல்லையென்றால் இந்த ஆழம் சாத்தியமாகாது. "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி" என்கிற படத்தில் ஒரு பாடல் இந்தக் குறளோடு ஆரம்பமாகும்.

பற்களில் ஊறிய நீரினை உண்பது பற்றி மட்டும் இலக்கியம் சொல்லவில்லை. பற்களையே காதலர்கள் முத்தமிட்டுக்கொள்வார்கள் என்கிறது. நற்றிணையில் ஒரு பாடலில், "நின் கூர் எயிறு உண்கு" என்கிறான் சங்கத் தலைவன். "நீ இன்று காவல் காப்பதற்கு தினைப்புனத்திற்கு வருவாய் தானே? நானும் அங்கே வருகிறேன். இருவரும் சிரித்து விளையாடி காதல் கொள்ளலாம். நீ வருவதை உறுதி செய்து அந்த நற்செய்தியை நீ எனக்குச் சொன்னால் உன் பற்களில் முத்தம் கொடுத்து, இதழ்களால் சுவைப்பேன் பெண்ணே" என்கிறான். முத்து இடையில் உருள்வது எப்படி இருக்குமோ அதுபோல பற்களை மென்மையாகச் சுவைப்பது இன்பம் தரும்.

இதைப் படிக்கும்போது, "ஒல்லிக்குச்சி உடம்புக்காரி"யில் வருகிற, "வேணாம் இனி வாய்பேச்சு. வாய்க்குள்ளே முத்து குளிக்கலாம். பற்களே முத்தாய் மாறலாம்" என்கிற வைரமுத்துவின் வரிகள் நினைவு வரக்கூடும்.

மேலும், " மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்செவ்வி தலைப்படு வார்." என்கிற வள்ளுவன் வரிகளை இங்கே நினைவுபடுத்த வேண்டும். காதல் இன்பம் மலரைவிடவும் மென்மையானது. அதனை உணர்ந்து அதன் நற்பயனை அனுபவிக்கக் கூடியவர்கள் சிலரே" என்பதே அதன் பொருள்.

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ