Skip to main content

கூதிர்காலத்தை குறுந்தொகையால் வரவேற்கலாம்...

கூதிர்காலம் ஆரம்பித்திருக்கிறது. பனியும் மழையும் ஒன்றாகப் பொழியும்போது அதற்குப் பொருத்தமான ஒரு அழகான குறுந்தொகைப் பாடலோடு காதல் காலத்தை வரவேற்பது அழகாக இருக்கும் என நினைக்கிறேன்.

தலைவன் பிரிவைத் தலைவி தாங்கிக்க மாட்டான்னு கவலைப்பட்ட தன் தோழியிடம் தலைவி தன் மனநிலையைச் சொல்லுகிறமாதிரியான பாடல்.

படம் : இணையம் 

தோழியே கேளு, ஈரத்தைச் சுமந்துவந்து என்மேல தூவுகிறபடி பனிக்காற்று வீசுகிற கூதிர்காலம் இது. நடுக்கம் தருகிற இந்தக் குளிர்கால இரவின் அமைதியில் மெல்லிய மணி ஒலி மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது. தொலைவிலிருந்தாலும் துல்லியமாகக் கேட்கிறது. இரவுல நல்லாத் தூங்குற பசுவை ஈ/நுளம்பு உறங்கவிடாம கடிச்சு தொந்தரவு செய்கிறது. ஈ அமரும் இடத்தை எல்லாம் தன்னோட நாக்கால தடவுவதற்காக பசு தன்னோடை தலையைத் தூக்கிவிட்டு மறுபடியும் உறங்குகிறது. இதையே திரும்பத் திரும்பச் செய்திட்டிருக்கு. அது இப்பிடி செய்யும்போதெல்லாம் அதோடை கழுத்துல இருக்கிற குட்டி மணி அசைந்து அசைந்து சின்ன ஒலி எழுப்புது. அந்த ஒலி என்னை ஏதோ செய்கிறது. என் தனிமைக்கு துக்கத்தை இன்னும் அதிகரிக்கிறது. 

இந்தச் சத்தம் மற்றவர்களுக்கும் கேட்குமா ? நான் ஒருத்தி மட்டும்தானா? மற்றவர்கள் நன்றாக உறங்குகிறார்கள். அவரோடை நினைவு வந்து என்னைத் துன்புறுத்துகிறதால எனக்கு உறக்கம் வரல. என்னை மாதிரியே தடுக்கப்பட்ட நீர் உடைந்து துளியாக விழுகிற தூய, மெல்லிய பனிபடர்ந்த மழைக் கண்களோடு புலம்புகிறவர்கள் யாராவது இருக்கிறார்களா! 

இப்போது இந்தப் பாடலைப் படித்தால் இதன் இனிமை புலப்படும். சுற்றுச்சூழலில் நிலவுகிற காலநிலையை அப்பிடியே தலைவியின் உளவியலோடு பொருத்தி எழுதியிருக்கிறார் புலவர். இந்தப் பாடலை இயற்றிய சங்ககாலப் புலவனான வெண்கொற்றனின் துல்லியத்தன்மையை என்னவென்று சொல்வது. பசுவை மாதிரியே தலைவியும் அவனைப் பற்றிய நினைவைத் திரும்பத் திரும்பத் துரத்தப் பார்க்கிறாள். அவன் நினைவோ நுளம்புபோல திரும்பத் திரும்ப இவளிடமே வந்து ஒட்டிக்கொள்கிறது.

சிறைபனி யுடைந்த சேயரி மழைக்கட் 
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப் 
பிறருங் கேட்குந ருளர்கொ லுறைசிறந் 
தூதை தூற்றுங் கூதிர் யாமத் 
தானுளம் புலம்புதொ றுளம்பும் 
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே. 


வழக்கம்போல இதை ஒரு வைரமுத்துவின் வரியோடு தொடர்புபடுத்துவேன் என நீங்கள் எதிர்பார்ப்பது புரிகிறது. ஒன்றில்லை, இரண்டு இருக்கிறது. 'சர சர சாரக்காத்து' பாட்டில் 'மாட்டு மணிச் சத்தமா மனசுக்குள்ள கேக்கிற' என்றொரு வரி உண்டு. சங்க இலக்கியத்தை கிராமியப் பாடலுக்குள் எவ்வளவு அழகா கொண்டுவந்திருக்கிறார்!

மஜ்னு படத்தில் இடம்பெற்ற 'பட பட பட்டாம்பூச்சி' என்கிற அழகான வரிகள் உள்ள பாடலை எடுத்துக்கலாம். காதல் வந்த பெண்ணின் இரவை  இப்படிச் சொல்கிறார். காதலனின் நினைவா தனிமையில் இருக்கும்போது இவளுக்கும் மனசு ஏதோ செய்கிறது.


"கடமுட கடமுட கொடம் ஒன்னு மனசுக்குள் உருளுதே 
பூனை வந்து உருட்டவும் இல்லை 
காத்து வந்து கவுக்கவும் இல்லை 
இந்தச் சத்தம் ஏன் கேட்குதோ 
வந்த தூக்கம் ஏன் போனதோ!" 

என்று காதலியானவள் காதலனிடம் புலம்ப, "அது வேற ஒன்னுமில்லை, நான்தான் உன் மனசுக்குள்ள புகுந்திருக்கேன். நீ புரண்டு படுக்கையில் உருண்டு விழுந்திருப்பேன். அந்தச் சத்தம்தான் அது" னு பதில் சொல்லித் தேற்றுகிறமாதிரி அமைகிற வரிகள். இந்த வரிகளிலும்  ஒரு இலக்கியத்தன்மை இருக்கிறதுதான் இதன் அழகு. இலக்கியத்தன்மை சேரும்போது காதல் அடையும் உயர்வுக்கு அளவே இல்லை.


Comments

Unknown said…
//வைரமுத்துவின் வரியோடு தொடர்புபடுத்துவேன் என நீங்கள் எதிர்பார்ப்பது புரிகிறது//
எங்கள் என்ன ஓட்டத்தை அறிவீர்கள் போலேவ!?!
Unknown said…
This comment has been removed by the author.

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ