Skip to main content

கூதிர்காலத்தை குறுந்தொகையால் வரவேற்கலாம்...

கூதிர்காலம் ஆரம்பித்திருக்கிறது. பனியும் மழையும் ஒன்றாகப் பொழியும்போது அதற்குப் பொருத்தமான ஒரு அழகான குறுந்தொகைப் பாடலோடு காதல் காலத்தை வரவேற்பது அழகாக இருக்கும் என நினைக்கிறேன்.

தலைவன் பிரிவைத் தலைவி தாங்கிக்க மாட்டான்னு கவலைப்பட்ட தன் தோழியிடம் தலைவி தன் மனநிலையைச் சொல்லுகிறமாதிரியான பாடல்.

படம் : இணையம் 

தோழியே கேளு, ஈரத்தைச் சுமந்துவந்து என்மேல தூவுகிறபடி பனிக்காற்று வீசுகிற கூதிர்காலம் இது. நடுக்கம் தருகிற இந்தக் குளிர்கால இரவின் அமைதியில் மெல்லிய மணி ஒலி மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது. தொலைவிலிருந்தாலும் துல்லியமாகக் கேட்கிறது. இரவுல நல்லாத் தூங்குற பசுவை ஈ/நுளம்பு உறங்கவிடாம கடிச்சு தொந்தரவு செய்கிறது. ஈ அமரும் இடத்தை எல்லாம் தன்னோட நாக்கால தடவுவதற்காக பசு தன்னோடை தலையைத் தூக்கிவிட்டு மறுபடியும் உறங்குகிறது. இதையே திரும்பத் திரும்பச் செய்திட்டிருக்கு. அது இப்பிடி செய்யும்போதெல்லாம் அதோடை கழுத்துல இருக்கிற குட்டி மணி அசைந்து அசைந்து சின்ன ஒலி எழுப்புது. அந்த ஒலி என்னை ஏதோ செய்கிறது. என் தனிமைக்கு துக்கத்தை இன்னும் அதிகரிக்கிறது. 

இந்தச் சத்தம் மற்றவர்களுக்கும் கேட்குமா ? நான் ஒருத்தி மட்டும்தானா? மற்றவர்கள் நன்றாக உறங்குகிறார்கள். அவரோடை நினைவு வந்து என்னைத் துன்புறுத்துகிறதால எனக்கு உறக்கம் வரல. என்னை மாதிரியே தடுக்கப்பட்ட நீர் உடைந்து துளியாக விழுகிற தூய, மெல்லிய பனிபடர்ந்த மழைக் கண்களோடு புலம்புகிறவர்கள் யாராவது இருக்கிறார்களா! 

இப்போது இந்தப் பாடலைப் படித்தால் இதன் இனிமை புலப்படும். சுற்றுச்சூழலில் நிலவுகிற காலநிலையை அப்பிடியே தலைவியின் உளவியலோடு பொருத்தி எழுதியிருக்கிறார் புலவர். இந்தப் பாடலை இயற்றிய சங்ககாலப் புலவனான வெண்கொற்றனின் துல்லியத்தன்மையை என்னவென்று சொல்வது. பசுவை மாதிரியே தலைவியும் அவனைப் பற்றிய நினைவைத் திரும்பத் திரும்பத் துரத்தப் பார்க்கிறாள். அவன் நினைவோ நுளம்புபோல திரும்பத் திரும்ப இவளிடமே வந்து ஒட்டிக்கொள்கிறது.

சிறைபனி யுடைந்த சேயரி மழைக்கட் 
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப் 
பிறருங் கேட்குந ருளர்கொ லுறைசிறந் 
தூதை தூற்றுங் கூதிர் யாமத் 
தானுளம் புலம்புதொ றுளம்பும் 
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே. 


வழக்கம்போல இதை ஒரு வைரமுத்துவின் வரியோடு தொடர்புபடுத்துவேன் என நீங்கள் எதிர்பார்ப்பது புரிகிறது. ஒன்றில்லை, இரண்டு இருக்கிறது. 'சர சர சாரக்காத்து' பாட்டில் 'மாட்டு மணிச் சத்தமா மனசுக்குள்ள கேக்கிற' என்றொரு வரி உண்டு. சங்க இலக்கியத்தை கிராமியப் பாடலுக்குள் எவ்வளவு அழகா கொண்டுவந்திருக்கிறார்!

மஜ்னு படத்தில் இடம்பெற்ற 'பட பட பட்டாம்பூச்சி' என்கிற அழகான வரிகள் உள்ள பாடலை எடுத்துக்கலாம். காதல் வந்த பெண்ணின் இரவை  இப்படிச் சொல்கிறார். காதலனின் நினைவா தனிமையில் இருக்கும்போது இவளுக்கும் மனசு ஏதோ செய்கிறது.


"கடமுட கடமுட கொடம் ஒன்னு மனசுக்குள் உருளுதே 
பூனை வந்து உருட்டவும் இல்லை 
காத்து வந்து கவுக்கவும் இல்லை 
இந்தச் சத்தம் ஏன் கேட்குதோ 
வந்த தூக்கம் ஏன் போனதோ!" 

என்று காதலியானவள் காதலனிடம் புலம்ப, "அது வேற ஒன்னுமில்லை, நான்தான் உன் மனசுக்குள்ள புகுந்திருக்கேன். நீ புரண்டு படுக்கையில் உருண்டு விழுந்திருப்பேன். அந்தச் சத்தம்தான் அது" னு பதில் சொல்லித் தேற்றுகிறமாதிரி அமைகிற வரிகள். இந்த வரிகளிலும்  ஒரு இலக்கியத்தன்மை இருக்கிறதுதான் இதன் அழகு. இலக்கியத்தன்மை சேரும்போது காதல் அடையும் உயர்வுக்கு அளவே இல்லை.


Comments

Unknown said…
//வைரமுத்துவின் வரியோடு தொடர்புபடுத்துவேன் என நீங்கள் எதிர்பார்ப்பது புரிகிறது//
எங்கள் என்ன ஓட்டத்தை அறிவீர்கள் போலேவ!?!
Unknown said…
This comment has been removed by the author.

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...