Skip to main content

முல்லைப்பாட்டு : கன்று தவிப்பதைப் போல்!


தாயைப் பிரிந்த கன்றின் தவிப்புக்கு ஆறுதல் சொல்லிவிடமுடியாது. அதன் கண்களையும், கட்டப்பட்டு நிற்கும் இடத்தையே சுற்றிச் சுற்றித் தன் தவிப்பை வெளிப்படுத்தும் விதத்தையும் பார்த்தவர்களுக்கு ஓர் உண்மை தெரியும். எத்தனை செயல்கள் செய்தாலும், தாய்ப்பசு வரும்வரை கன்றின் ஏக்கம் தீராது. அதுபோக, அதைப் பார்த்துக்கொண்டேயிருந்தால் அதன் ஏக்கம் எங்களையும் தொற்றிக்கொள்ளும். கிட்டச் சென்று அரவணைத்துக்கொள்ளும்போது, எங்கள் மனம் வேண்டுமானால் கொஞ்சம் நிறைவு காணும். இந்த ஆழத்தை இந்த முல்லைப்பாடல் எப்படிக் கொண்டுவருகிறது எனப் பார்ப்போம். இலக்கியத்தில் இருக்கும் அழகே இந்த ஆழம்தான். படிக்கும்போது தொடர்புபடுத்திக்கொள்ளுங்கள்.

அது ஒரு மழைக்கால மாலைப்பொழுது. துயரை மேலும் அதிகரிக்கச்செய்யும் பொழுது. 'மழைக்காலத்துக்கு முன்னர் திரும்பி வந்திடுவேன்' எனச் சொல்லிவிட்டுப்போன தலைவன் எப்போ திரும்பி வருவான் எனத் தலைவி வருத்தத்தில் இருக்கிறாள். அவள் வருந்தி இளைப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தோருக்கும் அந்தத் துயர் தொற்றிவிட்டது. இவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியாத செவிலித்தாயும் முதுமையான சில பெண்களும் 'நற்சொல்' கேட்டுவரக் கோவிலுக்குப் போகிறார்கள். 


யாழிசை இனவண் டார்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை
அரும்பவிழ் அலரி தூஉய்க்கை தொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப

அங்கே, நெல்லையும் புதிய மலர்களையும் தூவி 'நற்சொல்' கேட்டு நிற்கின்றனர்.  இவர்களின் வேண்டுதல் புரியாத ஒருவர் 'நற்சொல்' சொல்வது காதில் கேட்டால் நல்லதே நடக்கும் என்று அர்த்தம். இதனை 'விரிச்சி கேட்டல்' என்பார்கள். அதனால் யாராவது 'இன்சொல்' சொல்வது தங்கள் காதில் விழவேண்டும் என்று வணங்கிக் காத்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில், சிறிய கயிற்றால் கட்டப்பட்டிருக்கிற இளங்கன்று, தனது தாய் இன்னும் வரலன்னு துயரில் அங்குமிங்கும் சுற்றித் தவிக்கிறது. அதிக குளிர் காரணமாக, நடுங்குகிற இருதோள்களிலும் தனது கையை மாற்றி மாற்றி வைத்துக் கட்டிக்கொண்டு நிற்கும் ஆயர்மகள் ஒருத்தி அதைப் பார்க்கிறாள். அதன் அருகே சென்று, "கோவலர்கள் பின்னால் இருந்து செலுத்த உன்னுடைய தாயார் இதோ இப்பவே வந்துவிடுவார். நீ கவலைப்படாத" என்று ஆறுதல் சொல்கிறாள். இந்த இனிய சொல்லைக் கேட்ட முதிய பெண்களும் செவிலித்தாயும் 'நற்செய்தி' கேட்ட சந்தோஷத்தில் அதை வந்து தலைவியிடம் சொல்கிறார்கள். நிகழ்வினை அப்பிடியே ஒப்பிவித்து, " நல்லவர்களின் வாய்ச்சொல்லினைக் கேட்டோம்; அதனால், உன் தலைவன் போரில் வெற்றிபெற்றுத் திரும்பி வந்துவிடுவான். 'மாமை' நிறம் கொண்ட நீ முதலில் வருத்தப்படுவதை நிறுத்து!" என்று திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்லுகிறார்கள். இதனால் அவளுக்கு தனிமை வருத்தம் இன்னும் அதிகமாகி, குவளை மலர் போன்ற கண்களில் கண்ணீர் முத்துக்கள் தேங்கி நிற்க, தனிமை வருத்தத்தில் இருந்தாள்.

"மாமை நிறம் கொண்டவளே" எனச் சொன்னபோது அவளுக்குத் துக்கம் இன்னும் அதிகமாகி இருக்கும். 'மாமை' நிறம் என்பது அழகானதாகக் கருதப்படுவது. வெள்ளையும் இல்லாமல், கறுப்பும் இல்லாமல் ஒரு அழகான நிறம். தலைவன் பிரிவால், இப்போது அவள் உடல் 'பசலை' நிறத்தை அடைந்திருக்கும்.  அவர் இல்லாமல் என் அழகும் இப்படி வீணாகப் போகிறதே என்று இன்னும் வருந்தியிருப்பாள். தலைவன் வந்து தொட்டதும், பசலை நிறம் மாறி, பழையபடியே 'மாமை' நிறம் பெற்றுவிடுவாள். ஒரு பாடலுக்குள் எத்தனை நுணுக்கங்கள்!

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்த கையள், “கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர,                      
இன்னே வருகுவர், தாயர்” என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்: அதனால்,
நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
வருதல், தலைவர், வாய்வது; நீநின்                                    
பருவரல் எவ்வம் களை, மாயோய்; என
காட்டவும் காட்டவும் காணாள், கலுழ்சிறந்து,
பூப்போல் உண்கண் புலம்புமுத்து உறைப்ப

எத்தனை ஆறுதல் சொன்னாலும் அடங்காத இந்தத் தவிப்பு, கன்றின் தவிப்பைப் போன்றது. அவளுடைய தாயுமான தலைவன்  வந்தால்தான் தீரும்.

Comments

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...