Skip to main content

மீனோட்டம் - லா.சா.ராமாமிர்தம்




லா.சா.ராமாமிருதம் அவர்கள், எழுத்தின் ஒலிப்பு முறையில், வசனங்களில் இருக்கும் கவிநயத்தில் அதிகம் கவனம் செலுத்துபவர். அவர் உருவாக்கும் கதாப்பாத்திரங்களில் உள்ள சோகமும் கவிநயம் மிக்கவை. லா.சா.ராவின் கரைபுரண்டோடும் எழுத்தை நான் முதன்முதலாகக் கண்டுகொண்டது 'அபிதா' என்கிற நாவலில் தான். அவருடைய மற்றைய படைப்புகளையும் படிக்க வேண்டும் என்கிற விருப்பத்தில் நிகழ்ந்தது தான் 'ஜனனி' என்கிற சிறுகதைத் தொகுப்பின் மீதான வாசிப்பு.  இதில் 'மீனோட்டம்' என்கிற சிறுகதைத் தொகுப்பில் உள்ள லா.சா.ராவின் அடையாளங்கள் ஏராளம்.

"நெஞ்சின் அடிவாரத்தில் ஏதோ புற்று இடிந்து அதனுள் ஜன்மக்கணக்கில் உறங்கிக் கிடந்த ஏதேதோ விஷயங்கள், பேச்சுகள், வாக்கியங்கள், வார்த்தைகள், பதங்கள் பத-ஸரி-க-ஸா-ம-த  ஸ்வரங்கள் ஓசைகள், ஒலிகள், மோனங்கள். திக்கித் திகில்கள். திமிதிமி எழுந்து மிரண்டு ஒன்றுடன் ஒன்று உருண்டு புரண்டு நெஞ்சமுட்டில் கவிந்த நஷத்ர இருட்டில் கருங் குதிரைகள் மின்னிடும் வெண்பிடரிகளை சிலிர்த்துக்கொண்டு தங்கத்துடைப்பம் போன்ற வால்களைச்  சுழற்றிக் கொண்டு இதய விலாசத்தில் ஓடுகையில் திடும் திடும் திடு திடும் - குளம்போசை தாங்காமல் செவிகளைப் பொத்திக் கொள்கிறேன். கண் கவிழ்கிறேன். விழிகள் வரம்புடைந்து வழிகின்றன. அலை மெல்ல மெல்ல அடங்குகிறது. மூச்சு மெதுவாய் முனை திரும்புகிறது. உள் மூட்டம் படிப்படியாய்க் களைந்து வக்களிப்பு தோன்றுகிறது. அருவி கருணையாய் சொரிந்து கொண்டிருக்கிறது. " - லா.சா.ராமாமிருதம் (மீனோட்டம்)

"மொட்டுப்போல் வாய் சற்றே திறந்த வண்ணம், அரைத்துணி போன இடம் தெரியாமல் கையையும் காலையும் விசிறிப் போட்ட வண்ணம் அவள் தூங்குவதைப் பார்க்க வேடிக்கையாயிருந்தது. குழந்தைகள் பாடு நிம்மதி. பேசிக் கொண்டேயிருக்கின்றன! அப்படியே தூக்கத்துள் நழுவி விடுகின்றன. விழிப்பதும் அப்படித்தான்." - (தூசி-மீனோட்டம் )

"வேணும் போது பூணி, வேணாத சமயத்தில் கழட்டி  எறியக்கூடிய தனிமைதான் பாந்தமாயிருக்கிறது." ( தேவி-  மீனோட்டம் )

"பொட்டலங்களைப் பிரிச்சு, சாமான்களை எடுத்து வைப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் இருக்கு." ~ லா.சா.ராமாமிர்தம்



  

Comments

Popular posts from this blog

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...