Skip to main content

கண்ணனும் ராதாவும்: ஆசைப்பெருக்கு

ராதாவுக்கு கவிதைகளென்றால் அவ்வளவு பிடித்தம். ஒன்றைப் பிடிக்கிறதென்றால், அதை ஏன் பிடிக்கிறது என அவளுக்குள்ளேயே ஒரு கேள்வி கேட்டுக்கொள்வாள். ஆதலால், தனக்குப் பிடிக்கிற விஷயங்கள் மீது, அவளுக்கு ஓர் ஆழ்ந்த புரிதல் இருந்தது. அதனால் அவளால் ஒன்றில் தனித்து இலயிக்க முடிந்தது. அவளுடைய இந்த இலயிப்பையும் புரிதலையும், அவசர உலக மாந்தர்களால் உடைக்க முடியாமல் போகிறபொழுது, ஒருவித எரிச்சலையும், கோபத்தையும், அவள் மீது வளர்த்துக்கொண்டார்கள். அவள் அதைப் பொருட்படுத்தவில்லை.
கவிதையென்பது, ஓர் உயிர் தன்னுள் தான் மூழ்கி, தன் உயிரின் வடிவங்களில் ஓர் அழகினையும், ஒழுங்கினையும் கண்டு தெளிந்து, அதை மொழியில் வார்த்து, மீண்டும் விழுங்கிக்கொள்ளும் வளமான செயலென்று கருதுவாள். கவிதைக்கு, வடிவம் ஒன்று இல்லையென்றும், மனதில் ஆசைப்பெருக்கம் செய்யும் அத்துணை அழகையும் கவிதையென்றும் நம்பினாள். அவளுக்கு அவை, பண்டைய மொழிபோல, படவெழுத்துக்களால் ஆனவையாக இருந்தால் மேலும் மகிழ்ச்சி. அந்தப் படவெழுத்துக்களால் கண்ணன் அவளைப் புனையும் பொழுதெல்லாம், கண்களை மூடிக்கொண்டு அந்தக் காட்சியாகிக் கரைந்து போவாள். இப்படி அவள், எதில் எதிலெல்லாம் போதை கொள்வாள் எனும் இரகசியம் கண்ணனுக்குத் தெரியும்.
ஒருநாள், நிலவு வாய்ப்பாக விழும் யமுனா நதியோரத்தில், மீனழகு அசையத் துளும்பும் நதிநீரில், தன் முன் கூந்தல் சரிவும், கழுத்து ஆபரணமும், விழுந்து நெளியும் அழகினைக் கண்டு சொக்கியவள், கண்ணில் ஊஞ்சலாடியிருந்தாள். அசையாப் பொருட்கள், அசையும் பொருள் மீது விழுந்து, தன்னழகைப் பாராட்டும் நாடகத்தை இரசித்திருந்தாள்.
அந்நேரம், நல்ல களவொழுக்கம் செய்யும் கண்ணன் வந்தான். அன்று கலாபத்தினால், அவள் உரோமப் புறவொழுக்கம் மீது அவன் வருடவில்லை. நெருங்கியவன், புறத்தால் சென்று சிறு தீப்பந்தம் ஏற்றி வந்து, நீரில் விழுந்த அவள் நிலவின் தண்மை அருகில், சிறு அழல் தெரியும் வண்ணம் அதை உயர்த்திப் பிடித்திருந்தான். அவள் கனவொழுக்கம் மீது தன் மனப் பார்வையை வைத்துப் பார்த்தான். அசையும் அழல், அசையாக் கருவிழி மீது நிகழ்த்தும் நாடகத்தை அவன் இரசித்திருந்தான். அன்று அவள் நிலவும், அவன் நெருப்பும், வாய்மொழி எதுவும் சொல்லாமல், ஒரு புரிதலில் இயங்கிய கவிதையின் இரகசியத்தை யார் அறிவர்!

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...