Skip to main content

திரையிசைப் பாடல்களில் இழையோடும் கவிதைத் தன்மையும் இலக்கிய நயமும்...



இலக்கியத்தையும் கவிஞர்களின் பாடல் வரிகளையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட ஆக்கங்களில் சிலவற்றை  இங்கே தொகுப்பாகப்  பகிர்கிறேன். இலக்கியத்தின் மீது காதல் கொண்ட கவிஞர்கள், அவற்றை எளிமைப்படுத்திக் கொடுத்த அழகினை இந்தப் பதிவுகள் சொல்கின்றன. ஆழ்ந்த இலக்கியப் புரிதல் உள்ளவர்களால் ஆழமான உணர்வுகளை அழகாகப் பதிவுசெய்ய முடிந்திருக்கிறது.

கம்பனின் பாடல்கள் மனித உணர்வுகளின் மென்தன்மையை நன்றாக எடுத்துச்சொல்லக்கூடியது. அதில் பெண்களின் அச்சச் சிறப்பினைச் சொல்கிற ஒரு அழகான பாடல் இருக்கிறது. அதில் "வாளைமீன் உகள. அஞ்சி. மைந்தரைத் தழுவுவாரும்" என்றொரு வரி வருகிறது. ஆற்றில் நீராடிக்கொண்டிருக்கும் பெண்கள் வாளை மீன்களுக்குப் பயப்படுவதுபோல நடித்து கணவரைத் தழுவிக்கொள்கிறார்கள். கணவரைத் தழுவுவதற்கு இதுவொரு பொய்க் காரணமாக அமைந்துவிடுகிறது. இதை வைரமுத்து மிகவும் அழகாக கிராமியச் சூழலுக்குள் புகுத்தியிருப்பார்.

"சேத்து மட தொறக்க, செவ்வால மீன் குதிக்க,
தாவி குதிச்ச மீனு, தாவணிக்குள் விழுந்துவிட
பாம்பு புகுந்ததுன்னு, பருவ பொண்ணு கூச்சல் இட
முறைமாமன் ஓடிவந்து முந்தானைக்குள் மீன் எடுக்க"


"தென்றலுக்குத் தெரியுமா தென்மாங்குப் பாட்டு" என்கிற பாடலுக்கு இந்த ஆரம்ப வரிகள் அழகு சேர்க்கிறது. இப்படி இன்னுமொரு பாடலும் இருக்கிறது.

ஏந்து பேர் அல்குல் நின்றும்
கற்றை மேகலைகள் நீங்கி.
சீறடி கவ்வ. ‘காலில்
சுற்றிய நாகம்’ என்று.
துணுக்கத்தால் துடிக்கின்றாரும்.

நீராடும்போது நிதம்பம்/ அல்குலிலிருந்து மேகலை கழன்று காலினைக் கவ்விக்கொள்ளுமாம். அதைக் காலில் சுற்றிய நாகம் என்று எண்ணிப் பெண்கள் பயந்துபோவார்கள் என்கிறார் கம்பன்.

“It was a spilt milk and broken teacup kind of romance.” என்பது  Michael Faudet கவிதையொன்று!

காமத்தில்(காதல்) குழல் அவிழ்வது, கண்மை, குங்குமம் எல்லாமே செம்புலப் பெயல் நீர் போல கலப்பது, வளை உடைவது, இறுக்கங்கள் எல்லாமே அழகு. இவையெல்லாம் காதல் மிகுதியால் விளைவது. காதலை மேலும் தூண்டக்கூடியது. இவற்றில் கவிதை காணமுடிந்தால் அன்பின் ஆழம் புலப்படும். "ஆனந்த மஞ்சத்தில் அவிழ்ந்தாலும் குழல் அழகு. அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டு அழகு" என்பாரே வைரமுத்து! இவற்றுக்கெல்லாம் அப்போதுதான் அர்த்தம் பிறக்கிறது போலும்! யாரோ ரசிகர்கள்தான் இதையெல்லாம் படைத்திருக்கவேண்டும்.

குங்குமம் ஏன் சூடினேன்
கோல முத்தத்தில் கலையத்தான்
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன்
ஊடல் பொழுதில் கசங்கத்தான்
மங்கை கூந்தல் மலர்கள் எதற்கு
கட்டில் மேலே நசுங்கத்தான். - வைரமுத்து

இதைக் கம்பன் ஒரு அழகான ஒப்பீடோடு எடுத்துரைத்திருப்பான். பொய்கையில் நீராடும் மகளிரைப் பார்க்க காதலரைக் கூடிய மகளிர்போல காணப்படுகிறதாம். எப்படி!
சிவந்த வாய்கள் வெண்மை நிறம் பெறுகிறது. வெள்ளைக் கண்கள் சிவப்பு நிறம் பெறுகிறது. உடலெங்கும் பூசியிருக்கும் சந்தனம் அழிந்து/கரைந்து போகிறது. ஆடைகள் எங்கும் நீர் ஊறி உடைகள் தளர்ந்து விடுகிறது. தனங்களிலே தொய்யில் வரையப்பட்ட பெண்கள் மூழ்கி எழும்போது காணப்படும் அறிகுறிகள் இவை. ஆகவே இந்த நீரும் காதல் மிக்க கணவரைப் போல லீலை செய்கிறது. நீர் அழுத்தமானது; அதேநேரம் மென்மையானது.

செய்ய வாய் வெளுப்ப. கண் சிவப்புற.
மெய் அராகம் அழிய. துகில் நெக.
தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால்.
பொய்கை. காதல் கொழுநரும் போன்றதே! - கம்பன்

நீர் செய்யும் லீலைகளை வைரமுத்து நிறையப் பாடல்களில் சொல்லியிருக்கிறார். அதில் "எங்கே என் புன்னகை" பாடலை சிறந்த மழைப்பாடல் என்றும் சொல்லலாம். நீரோடு பெண்மையின் உணர்வுகளை கலந்து யாரும் இப்படிச் சொல்லியதில்லை.

"மழை நீரில் தேகமோ தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது
என் ஆடை போலவே என் நெஞ்சம் குலைந்தது
நீர் செய்யும் லீலையை நீ செய்ய மனம் ஏங்குது" என்று எழுதியிருப்பார். அதன் பிறகு முதல்வன் பாடலில் "நீராக நான் இருந்தா உன் நெற்றியில நான் இறங்கி கூரான உன் நெஞ்சில் குதிச்சு அங்கு குடியிருப்பேன். ஆணா வீணாப் போனேன்." என அதற்கான பதிலை வைத்திருப்பார் .

இதையே கண்ணதாசன், "மடி மீது தலை வைத்து" என்கிற பாடலில்
" வாயின் சிவப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே" என்று எளிதாகச் சொல்லியிருப்பார்.

மேலும்
"மங்கல குங்குமம் நெஞ்சிலே
மல்லிகை மலர்கள் மண்ணிலே
பொங்கிய மேனி களைப்பிலே
பொழுது புலரும் அணைப்பிலே" - கண்ணதாசன்

இத்தனையும் கலைத்துவிட்டு, உன் தேவையெல்லாம் முடிந்ததும் விலகி உறங்காமல் பொழுது புலரும்போதும் அணைத்துக்கொள். அதில்தான் காதலின் மேன்மை \மென்மை இருக்கிறது என்று சொல்கிற வரிகள்.
காவியத் தலைவனில் "அல்லி வருகிறாள்" வருகிறாள் என்கிற பாடலில் கவிஞர் வாலி
"உங்க வாய் வெளுக்க இரு விழி சிவக்க காதல் நோய் தனை தரக்கூடும்" என இதே வரிகளைப் பயன்படுத்தியிருப்பார்.

கம்பன், பொய்கையோடு ஆடவரை ஒப்பிட்டிருப்பார். வைரமுத்து சற்று மேலே சென்று நீரோடு பெண்மையை ஒப்பிட்ட பாடல்தான் "நதியே நதியே" என்கிற பாடல்.

பெண்களின் மெல்லிய உணர்வை வைரமுத்துவின் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" பாடல் வரிகளை இன்னுமொரு உதாரணமாகக்  குறிப்பிடலாம்.

மணிகள் பதிக்கப்பட்ட மதுக்கிண்ணத்தை ஒருத்தி ஏந்தி நிற்கிறாள். அதில் நிலவின் வெள்ளை நிற ஒளிக்கற்றைகள் பாய்கிறது. அது கிண்ணத்தை நிறைத்திருப்பது போல தோன்ற அதைக் கள்ளென்று நினைத்து வாய்வைத்து உண்கிறாள். சுற்றியிருப்பவர்கள் தன்னை இகழ்வதுகண்டு மடமை உணர்ந்து நாணம் கொள்கிறாள்.

மணியின் வள்ளத்து. வெள்ளை
நிற நிலாக் கற்றை பாய.
நிறைந்தது போன்று தோன்ற.
நறவு என. அதனை. வாயின்
வைத்தனள்; நாண் உட்கொண்டாள்.

கள் உண்ண முன்பே மயக்கத்தை ஏற்படுத்துவதுபோலவே காதலும் மயக்கத்தை ஏற்படுத்தவல்லது. கம்பனின் பெண் ஏமாற்றம் கண்டு நாணம் கொண்டாள். ஆனால் வைரமுத்துவின் பெண் ஏமாந்துபோனால் நெஞ்சுடைந்து போவாள்.

"வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால்
உயிரை உடைப்பாள் ஒருத்தி"

இப்படி இலக்கியத்தைச் சரியாக உள்வாங்கிக்கொண்ட ஒருவனால் எத்தனை உயர்ந்த படைப்புகளையும் கொடுத்துவிடமுடியும்.

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ