Skip to main content

மூடர் கூடம்


அண்மையில் வெளியான திரைப்படங்களில் இயக்குனர்  நவீன் அவர்கள் இயக்கிய 'மூடர் கூடம் '  மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு முயற்சியையும் புதிது என அறிமுகப்படுத்துவது கொஞ்சம் பழசாகப்படுகிறது. Quentin Tarantino வினுடைய படங்கள் போல என்கிற அறிமுகத்துக்கு  எல்லாம் அவசியமில்லை.

இந்த அறிமுகங்கள்,விளக்கங்கள் எதுவுமில்லாமல் படத்தை ஒரு முறை பார்த்துவிடுங்கள். தமிழில் ஒரு புதுமையான திரைப்படம் பார்த்த அனுபவம் கிட்டும்.



படத்தில் அப்படி என்ன இருக்கு ? . ஒரு ஆர்வத்தில், 'படத்தின் கதை என்ன ?' எனக் கேட்பவர்களுக்காக கதையைச் சொல்லிடலாம். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நாலு பேரும்  சேர்ந்து திருடப்போறாங்க.படத்தின் கதையே அவ்வளவுதான்.ஆனால் கதை சொல்லும் விதத்தில் புதுமை செய்திருக்கிறார் நவீன்.

அந்த நான்கு பேரில் இயக்குனர் நவீனும் ஒரு பாத்திரமேற்று நடித்திருக்கிறார்.படத்தில் வருகிற அத்தனை பேரின் நடிப்பும்,Deadpan expressions உம் பிரமாதம்.ஒவ்வொரு சிறிய கதாப்பத்திரத்துக்கும் படத்தில் முக்கியத்துவம் உண்டு. நாய்க்கு ஒரு பாடல் கூட உண்டு. Flashback எல்லாம் உண்டு. விலங்குகளை வைச்சும் இந்தச் சமூகத்தோடை கதையை சொல்லிடலாமா!. சில காட்சிகளை நகைச்சுவை என நினைச்சு கடந்தும் போய்விடலாம்.படம் முழுதும் அபப்டித்தான். நகைச்சுவையாகப்  பார்க்கிறவர்கள் அப்படியே கடக்கலாம். அவரவர் பார்வைக்கு,சிந்தனைக்கு என்று இயக்குனர் விட்டுவிட்டாரோ என்னவோ!

இந்தப் படம் பார்த்துவிட்டு நகைச்சுவையே இல்லையே,சிரிப்பே வரல என்று கேட்டால் ஒன்றும் செய்யமுடியாது. கம்யூனிசம் , மார்க்ஸிசம் பேசுகிறார்கள் என்றெல்லாம் அலுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அவ்வப்போது சில காட்சிகள்.இந்தப் படத்தில் எல்லோரும் இயல்பாகவே இருப்பார்கள். பார்க்கும் எமக்கு சிரிப்பைத் தூண்டும். உண்மையிலேயே ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டு வாழும் நகைச்சுவையான வாழ்க்கை தானே இது. வெளியிலிருந்து திரையில் பார்க்கும் போது சிரிக்கிறோம். உள்ளிருக்கும் போது தோன்றுவதில்லை.


இறுதியில் பொம்மைக்கும் ஒரு கதை உண்டு. 'நீயும் பொம்மை நானும் பொம்மை' என்கிற பாடல் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதை தெளிவாக்கிவிடும்.இது 'பொம்மை' என்கிற படத்தில் ஜேசுதாஸ் பாடிய பாடல். தமிழில் அவர் பாடிய முதல் பாடல் இது.அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.


இந்தப் படத்தில் இசையை மிகவும் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார் சங்கர நாராயணன்.பின்னணியில் 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி' ஒலிப்பதெல்லாம் சிறப்பு.

தமிழுக்கு ஒரு நல்ல புதிய இயக்குனர் கிடைத்திருக்கிறார்.இந்தப் படம் உருவாக எடுத்த முயற்சிகளை பற்றி ஒரு கட்டுரை தி இந்துவில் (இயக்குனரின் பேட்டி)கூட வந்திருந்தது.  

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...